Wednesday, July 18, 2018

தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!




உள்ளத்தில் உருவாகி உயிர்மூச்சில் கருவாகி
            உலகத்தில் பிறந்தாயடி - நீ
பள்ளத்தில் பாய்ந்துவரும் பைம்புனல் போலிந்த
            பக்தனைக் கவர்ந்தாயடி

அள்ளக் குறையாத அறிவென்னும் செல்வத்தை
            அடிமைக்குத் தந்தாயடி - என்
உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
            உட்கார்ந்து கொன்டாயடி



எண்ணத்தில் உனைக்கொன்டு ஏட்டில் எழுதிவைத்து
            எம்புலவர் வளர்த்தாரடி - பல
வண்ணத்தில் உனைப்பாடி வனப்பூட்டும் அணியாக்கி
            வஞ்சியுனக் களித்தாரடி

மண்ணுக்கு எட்டாத மாண்புகழ் அமுதுக்கு
            மணம்செய்து தந்தாரடி - என்
கண்ணுக்கு கண்ணான காரிகை உன்காலில்
            காவலர் பணிந்தாரடி



காவிரி நதிதந்த கர்னாடக நாட்டினது
            கன்னடத்தை யீன்றாயடி - உயர்
மாவரைகள் சூழ்ந்திட்ட மண்ணும்புகழ் கேரளத்து
            மலையாளம் யீன்றாயடி

தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
            தெலுங்கை நீதந்தாயடி - இசைத்
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
            திராவிடம் படைத்தாயடி



விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
            வேறொருவர் கிடையாதடி - பாரில்
உருதோன்றி நிலையாகி உயர்ந்தநிலை எய்தியவர்
            உனையன்றி வேறாரடி

அருள்தோன்றும் முகமாகி ஆனந்த மயமாகி
            ஆளவந்தாய் நீதானடி - வீசி
வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்
            வையத்தில் வாழ்வாயடி.

No comments:

Post a Comment