Friday, October 30, 2015

தாமரைக் குறள்கள் - பகுதி 2




அறிவும் உணர்வும் அளவாய்க் கலந்து
செறியும் சிறப்பே மனம்


மனம் என்பது என்ன? மனம் என்பது உணர்வுகளால் ஆனது. அதே சமயம் மனதிற்கு இன்னொரு பகுதியும் உண்டு. அதற்கு அறிவு என்று பெயர்.

உணர்வகளற்று வெறும் அறிவினால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜடங்களாக இருப்போம்.

அறிவற்று வெறும் உணர்வுகளால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜந்துகள் ஆகி இருப்போம். அறிவும் உணர்வும் சரியான விகிதத்தில் கலந்து இருப்பதே நல்ல மனமாகும்.



கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.


ஒரு சொல்லை சொல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கூறப்போகும் சொல்லை கூறு கூறாக பிரித்து ( உதாரணம் உண்மை = உள் + மெய்)

அதன் கூறாய்ந்து - அது எப்படி சரியாகப் பொருந்துகிறது என ஆராயந்து

(உதாரணம்

கசியும் கண்ணீர்  - இரக்கத்தாலும் கருணையினாலும்

வழியும் கண்ணீர்  - வேதனையினால்

பெருகும் கண்ணீர் - ஆற்றாமையினால்

சொட்டும் கண்ணீர்,

கண்ணிலேயே அடைந்து நிறைந்து கண்ணீரணை உடைத்து வெள்ளமாய் ஓடும் கண்ணீர்

என ஒவ்வொரு வகையான கண்ணீருக்கும் ஒவ்வொரு குணமிருக்கு. இல்லையா??

பாருங்க, இதைப் படிச்சிட்டு உங்க கண்ணில ஆனந்தக் கண்ணீர்..ஊறுது )


கூறுடனே - அழகுறப் பொருத்தி, எதுகை மோனை சந்த நயம் இத்யாதி அலங்காரங்களுடன் பொருத்தி

கூராக்கி - கூர்மையானதாக்கி

கூறு - சொல்.



போரே புகுவோரே புண்ணின்றி மீளாரே
ஆரே எனினும் அவர்.


தருமன் பக்கம் தர்மம் இருந்தது.

அவன் பக்கம் கடவுளே இருந்தார்.

ஆயினும் போர் என வந்தபின் அபிமன்யூ, கடோத்கஜன், இளம் பஞ்ச பாண்டவர், விராடன், துருபதன், த்ருஷ்டதுய்மன், சிகண்டி இப்படிப் பலப்பல வீராதி வீரர்களை இழந்தான். போரின் இயல்பு அப்படி.

சண்டை என்று வந்து விட்டால் சண்டையில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இழப்புகள் வரும். அவர் யாராய் இருந்தாலும் சரி அவருக்கு யார் துணை இருந்தாலும் சரி காயம் உறுதி.

எனவே இயன்றவரை போரைத் தவிர்ப்பது நல்லது.

படிப்பது எப்படி?



படிக்கறதெல்லாம் அப்ப ஞாபகம் இருந்திச்சு இப்ப மறந்திருச்சி.

கேள்வியைக் கொஞ்சம் டிவிஸ்ட் பண்ணிட்டாம்பா. குழம்பிட்டேன்.

இது எங்கியோ கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் சரியா ஞாபகமில்ல.

இப்படி புலம்புபவர்கள் ஆயிரம் பேர் உண்டு, ஆனால் சிலர் நீங்க எதைச் சொன்னாலும் அதைப் பற்றி 4 மணி நேரம் சொற்பொழிவு செய்வார்கள்.

இதை அனைவருமே எளிதில் சாத்தியமாக்கலாம். ஆனால் அதற்குத் தேவை பயிற்சி செய்யும் மனம்.

கஜினி படம் பார்த்தவர்களுக்கு தெரியும். மூளையில் இரண்டு விதமான நினைவகங்கள் உண்டு.

1. ஷார்ட் டெர்ம் மெமரி
2. லாங்க் டெர்ம் மெமரி

நாம் இப்பொழுது படிப்பவை நினைப்பவை எல்லாமே ஷார்ட் டெர்ம் மெமரியில்தான் பதிவாகும்.

உதாரணமாக  உங்களிடம் செப்டெம்பர் 30, 2015 மதியம் என்ன லஞ்ச் சாப்பிட்டீங்க என்றால் திருதிருவென முழிப்பீர்கள். காரணம் அது தற்காலிக நினைவகத்தில் இருந்தது. அதேசமயம் உங்கள் பிறந்த நாள் டின்னர் என்ன என்று கேட்டால்,  ஞாபகம் இருக்க சாத்தியம் இருக்கிறது, அதை நீங்கள் கொண்டாடி இருந்தால்...

அதையே இன்னும் 5 வருடம் கழித்து கேட்டால் மறந்திருக்க வாய்ப்புண்டு.

மூளையில் நீண்ட கால நினைவகத்தில் ஒரு தகவல் இடம் பெற வேண்டுமென்றால் அதற்கு மூன்று விஷயங்கள் முக்கியம்.

1. அதற்கென்று ஒரு தொடுப்பு இருக்க வேண்டும். உதாரணமாக ஆம்பூர் என்றவுடன் பிரியாணி ஞாபகம் வரும். விஞ்ஞானி என்றால் ஐன்ஸ்டீன் ஞாபகம் வருவார், அதற்கென TAG அதாவது குறிப்பிணைப்பு இருக்க வேண்டும். பிறந்த நாளைக்கு ஹோட்டல் உமர்கோட்டில் பார்ட்டி. இப்படி எதோ ஒன்று. உதாரணமாக என் அண்ணன் இறந்தது நவம்பர் 4, 2006. இதற்கான தொடுப்புகள் : அண்ணனின் பிறந்த நாள் நவம்பர் 11. அதற்கு ஒரு வாரம் முன்பு இறந்தார். 2007 ல் நாங்கள் புதுவீடு கிரஹப்பிரவேசம் செய்தோம் அதற்கு முதலாமாண்டு இறந்தார். இப்படி இணைப்புகள் உண்டு. இப்படி ஒவ்வொன்றையும் முதலே தெரிந்த ஒன்றோடு இணைத்து டேக் செய்து வைக்கவேண்டும்.

2. அதைப் பற்றி பலமுறை எண்ணியோ, பேசியோ இருக்க வேண்டும்.. பாபநாசம் படத்தில் கமல் 2 ஆம் தேதியை அனைவர் மனதிலும் பதிய வைப்பது போல் பலமுறை அதை பரிச்சயப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது அதைப் பற்றி பலரிடம் பலமுறை பேசவேண்டும். நாம் விரும்பும் நடிகர்களின் படவரிசை பாடல் வரிகள் மனதில் பதிவது இப்படித்தான். கிரிக்கெட்டின் புள்ளி விவரங்கள் மனதில் பதிவது இப்படித்தான். மாணவர்கள் முதன் முறை TAG செய்து படித்த பின் பாடங்களை தங்களுக்குள் குழு விவாதம் செய்வதால் மனதில் ஆழமாக பதியும். வெகு சிலரால் மட்டும் தனக்குள்ளேயே விவாதம் செய்து கொள்ள இயலும். அதற்கான வழிமுறை கீழே

3. கீழே உள்ள படத்தை கவனியுங்கள்




இதுதான் நமது சர்க்யூட் டயாக்ராம். நமக்கு ஐந்து வகை உணர்வுகள் உண்டு. பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடு உணர்வு என ஐந்து உணர்வுகள். இதில் பார்த்தல், கேட்டல் மூலமே நாம் அதிகம் கற்கிறோம்.

ஒரு தகவலைப் படித்த உடனே, கண்ணை மூடி அதை காட்சியாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும். புரிந்திருந்தால் காட்சியாக்குவது எளிது. உதாரணமாக சூரியகிரஹணத்தில் சூரியனை நிலா மறைக்கிறது. இதை நம்மால் கற்பனை செய்ய முடியும். நிலா வட்டம், சூரியன் வட்டம், மஞ்சள் வட்டத்தை கருப்பு வட்டம் மறைக்கிறது.

இதை இரண்டு மூன்று முறை பதிவு செய்துவிட்டால் மேலே படிக்கும் பொழுது எளிதாக இருக்கும். அடுத்து பகுதி சூரிய கிரகணம்..

பகுதி சூரிய கிரகணம் என்றால் சூரியனில் ஒரு பகுதி மட்டுமே மறையும். ஒரு கையை இன்னொரு கையால் மறைத்தால் முழுதாக மறையும். ஆனால் இரண்டு கைகளும் ஒரே மையம் இல்லாமல் சற்று விலகி இருந்தால்? உடனே நமக்கு மாஸ்டர் கார்ட் சிம்பள் ஞாபகம் வரும். ஒரு மஞ்சள் வட்டம், ஒரு கருப்பு வட்டம். கொஞ்சம் மஞ்சள்  வட்டம் கருப்பு வட்டத்தால் மறைக்கப்பட்டது புரியும்.

அடுத்து கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால்? கங்கணம் என்றால் வளையல். அதாவது மஞ்சள் வட்டம் பெரிது.  கருப்புவட்டம் சிறியது. அப்படி இருக்கும் பொழுது கருப்பு வட்டத்தால் மஞ்சள் வட்டத்தை மறைத்தால் மஞ்சள் வளையம் தெரியும். அதேதான். அதான் கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால் வளையல். இப்போது கங்கண சூரிய கிரகணம் எப்போ வரும்னு பார்ப்போம். சூரியனின் மையமும் சந்திரனின் மையமும் நேர் கோட்டில் இருக்கணும். சூரியம் பெரிதாக இருக்கணும். எப்போ சூரியன் பெரியதா இருக்கும்? பூமி நீள்வட்டப் பாதையில் சுத்தி வருது. அதில் ஒரு பக்கப் பாதி சூரியனுக்கு அருகே இருக்கும். ஜனவரி 7 என்கிறது என் நினைவடுக்கு. அதே போல் சந்திரன் சின்னதாக இருக்கணும். அதாவது சந்திரன் பூமியில் இருந்து நீள்வட்டப்பாதையில் தொலைவில் இருக்கணும். சந்திரன் 27 நாட்களுக்கு ஒரு முறை அருகில் வரும். அமாவாசையோ 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அதனால் எதோ ஒரு அமாவாசை அன்றுதான் இந்த நிகழ்வு  நடக்க வாய்ப்பிருக்கு.

இந்த விரிவான அலசலில் தெரியும் இன்னொரு சேதி, குளிர்காலத்தில் அதாவது கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் மட்டுமே கங்கண சூரிய கிரகணம் சாத்தியம்.

இப்படி முழுமையாக படித்ததை மனதிற்குள் உங்களால் அப்படியே ஒரு மஞ்சள் வட்டம், கருப்பு வட்டம் கொண்டு காட்சிப் படுத்திக் கொள்ள முடிய வேண்டும்.

படத்தில் பாருங்கள், சிவப்பு வண்ணமிட்ட பாதைகள் தெரியும், சூரிய கிரகணம் பற்றி நான் விவரித்ததை வரிக்கு வரி மனதில் நினைத்தீர்கள் என்றால் அது அந்த சிவப்பு பாதையில் பயணிப்பதை குறிக்கும்.

சூரியன் மஞ்சள் உருண்டை. சந்திரன் கருப்பு உருண்டை, முழு கிரகணம். மஞ்சளை விட கருப்பு பெரிசு அல்லது சமம். ஒரே மையம். பகுதி கிரகணம் மையங்கள் தள்ளி உள்ளன. கங்கண கிரகணம். கறுப்பு வட்டம் சிறிது. வளையல். இப்படி மனதில் பிட்டு பிட்டாக முழு விவரங்களும் தொடுப்புகளுடன் நீண்ட கால நினைவகத்திற்கு செல்ல ஆரம்பிக்கும்.

அடுத்த நாள் இதை இன்னொருவனுக்கு சொல்லித் தரலாம். அல்லது விவாதிக்கலாம். இரண்டு வட்டங்களைக் கொண்டு கிரகணத்தின் பல நிலைகளை மனதில் காணலாம்.

இதை மட்டும் சரியாக செய்துவிட்டால் சூரிய கிரகணம் பற்றி   நினைத்தாலே அருவியாக மனதில் இருந்து தகவல்கள் கொட்டும். இந்த சூரிய கிரகண வகைகளை மட்டும் உங்களால் சரியா புரிந்து கொள்ள முடிந்தால் அவ்வளவுதாங்க படிப்பு. படிக்கும் போது மனதில் அது பற்றிய உருவங்களைப் பார்க்கணும்.

இதில் கடைசியா மன உணர்வு என்று ஒரு டப்பா இருக்கு பாத்தீங்களா, அது படிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தால் தூண்டப்படுவது. நீங்கள் மேற்கண்ட முறையில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அது ஆக்டிவேட் ஆகும். ஒரு விஷயத்தைப் படிக்கும் பொழுது அது சம்பந்தமான பல தகவல்களை அது உங்களுக்குத் தயாராக எடுத்துத் தரும்.

கபில் என்றால் 434 என்ற எண்ணையும், அவுட் ஸ்விங்கரையும் விவியன் ரிச்சர்ட்ஸை அவுட்டாக்கியதும் நினைவுக்கு வரும். அதை இந்த உணர்வு கொண்டு வரும். இந்த உணர்வு டப்பா வேலை செய்ய ஆரம்பித்தால் அதன் பின்னால் படிப்பது மிக எளிதாகி விடும். எதை படித்தாலும் புரிய ஆரம்பிக்கும். மற்றவர்கள் சாதாரணமாக வாசிக்கும் வேகத்தில் நாம் ஆழமாக வாசிக்க ஆரம்பித்து விடுவோம்.

பூஜையும் வழிபாடும் யாருக்காக?



பூஜை, வழிபாடு என்பது நம் மனம் செம்மைப்பட மட்டுமே. இறைவனை மகிழ்விக்க அல்ல.


தன்னைத் துதிப்பவனை மட்டுமே காக்கக்கூடியவர் கடவுள் அல்லவே!

நல்லவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.
கெட்டவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.
தான் படைத்த படைப்பை
தான் படைத்த படைப்பால்
துன்புறுத்தி
தான் படைத்த படைப்பை
தானே அழித்து
தான் படைத்தவர்களிடம்
நான் நல்லவன் என்று நிரூபிக்க
அவருக்கு அவசியம் என்ன?

இவையெல்லாம் கடவுளுக்கு நாம் கற்பனை செய்திருக்கும் வடிவமே தவிர கடவுளின் பண்பு நமக்கு விளங்காத விஷயமென்று எண்ணுகிறேன்.

கடவுள் மேல் அவநம்பிக்கை இருந்தால்தானே காப்பாற்று என்ற சொல் எழவேண்டும்?

கடவுள் எதை எதுக்காக செய்யறார் என்று நமக்கு தெரியாதப்ப, நீ இதை இப்படிச் செய்ன்னு கடவுள்கிட்ட சொல்லலாமா?

அப்படி நடக்காவிட்டால் நிராசைப் படலாமா?


பிரார்த்தனை என்பது நம் மனதுக்கு நாம் செய்யும் ஒரு ம்னோதத்துவ சிகிச்சை.

இறைவனை திருப்தி படுத்துவது நம் நோக்கம் என்று கொண்டாலும் பலன் நம் மனதை உறுதியாக்கிக் கொள்வதே ஆகும்.

1008 பெயர் சொல்லி அர்ச்சனை செய்கிறோம் என்றால் ஆயிரெத்தெட்டு கதைகள், அவற்றின் நீதிகள் நம் நினைவுக்கு வரவேண்டும். அவற்றிலொன்று நம் ஒரு பிரச்சனைக்கு தீர்வின் வழியைச் சொல்லக் கூடும்.

ஒரு காரியம் நடத்த வேண்டும் என்ற உறுதி மனதில் உண்டாகக் கூடும். அந்த உறுதி சோர்வை விரட்டி நம் பலத்தை கூட்டக் கூடும். இப்படி உண்மையான வழிபாடு நம் மனதின் செயல்திறனை அதிகரிக்கும்.

ஆனால் பாலை ஊத்து, தயிரை ஊத்து, தண்ணிய ஊத்து பூவைப் போடு உண்டியல்ல காசைப்போடு என்பது போதை மருந்து மாதிரி.

கடவுளுக்காக பூஜையோ வழிபாடோ இல்லை. நமக்காகத்தான் பூஜையும் வழிபாடும்.

விதை, இலை, பூ, காய், பழம் என ஐந்தும் கொண்ட பூஜைத் தட்டுகள், வாழ்க்கையின் அனைத்து பருவங்களையும் குறிக்கும். முழு வாழ்க்கையும் இறைசிந்தனையில் என்பதன் பொருள் அது.

அந்த ஒவ்வொரு பூஜைத்தட்டிலும் ஆசை என்பது கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது வேண்டுதல் என்ற பெயரில்.

இதில் விதை இலை பூ ஆகியவற்றை கோவிலிலேயே விட்டு விடுகிறோம். அதனால் குழந்தைப் பருவமும் சிறுவர் பருவமும் கவலையற்றதாக இருக்கிறது. பூவை கொடுத்து வேறு பூ பெறுகிறோம். இளமை பருவம் இன்பம் கொடுத்து பெறுவதாக இருக்கிறது. காயையும் கனியையும் வீட்டுக்கு பெற்று வருகிறோம். நடுத்தர வயதும், முதுமைப் பருவமும் சுயநலம் மிக்கதாக இருக்கிறது..

மனம் போல் வாழ்வு!!

Thursday, October 29, 2015

தாமரைக் குறள்கள் - பகுதி 1



நன்றென் றுரைப்பதும் தீதென் றுரைப்பதும்
நின்றங் கவர்பட் டறிவு


நல்லது கெட்டது என்பது பொருட்களில் இல்லை. நம் அறிவில் இருக்கிறது.

ஒரு பொருளின் நல்ல உபயோகம் நம் அறிவுக்குத் தெரிந்தால் அதை நல்லது என்போம்.

ஒரு பொருளின் கெடுதல் நம் அறிவுக்குத் தெரிந்தால் அது கெட்டது என்கிறோம்.

ஆக நம் அறிவுதான் இது நல்லது இது கெட்டது எனப் பிரிக்குமே தவிர பொருட்களில் நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை.

உதாரணம் கத்தி. அது ஒரு உபகரணம். அது நல்லவன் கையில் இருந்தால் காயை வெட்டும். கெட்டவன் கையில் இருந்தால் கழுத்தை வெட்டும். அறியாதவன் கையில் இருந்தால் அவன் கையையே வெட்டும். நம் அறிவுதான் நல்லது கெட்டதுக்குக் காரணம். பொருட்களல்ல.


பதரும் உதவும் பசும்பொன் சுடவே
எதுவும் பயனாம் இடத்து



பதர் என கீழ்மையாய் சொல்லப்படும் உமிக்கு பயன் இல்லாமல் இல்லை, பொன்னை உருக்க உமியைத்தான் உபயோகப்படுத்துவார்கள்.

குப்பை என்பது வேறொன்றுமில்லை. தான் உபயோகம் ஆகும் இடத்தில் இல்லாத மூலப் பொருட்களே குப்பைகள் ஆகும்.


ஒவ்வொரு பொருளுக்கும் உபயோகம் உண்டு, அவற்றை அவ்விடம் சேர்ப்பதே சிறப்பு. இயற்கையின் சுழற்சிகளை கவனித்தால் இது புரியும்.

மனிதர்களும் அப்படித்தான். அவர்களுக்குரிய இடத்தில் இருந்தால் அவர்கள் சாதிப்பார்கள். அதைக் கண்டறிய வேண்டியதே அறிவியல் எனப்படும்.



அறிந்து தெளிந்து அகம்நிறை செல்வம்
சிறிதே எனினும் சிறப்பு


செல்வம் கொட்டிக் கிடந்தாலும் மனம் நிம்மதி அடைவதில்லை. அது புறச்செல்வமான பணமாக இருந்தாலும் சரி, அகச் செல்வமான கல்வி என்றாலும் சரி...

ஒருவன் தன் உழைப்பால் ஈட்டிய செல்வம் சிறிதென்றாலும் அது அவனுக்கு மிகப் பெரிய நிறைவைத் தரும். அது போல் ஆராய்ந்து தெளிந்து ஐயமறக் கற்ற கல்வியே நிறைந்த அறிவினைத் தரும். அதுதான் சிறந்தது.


தாழ்ந்து உயர்வராம் சான்றோரே தாழாதோர்
வாழ்ந்து உதிரும் மயிர்.



சான்றோர்கள் என்றும் பணிவுடையவராய் இருப்பர். அவர் பணிவினாலே நம் மனதில் உயர்வார்கள்.

அப்படிப்பட்ட பணிவு இல்லாதவர்கள் தலைக்கு மேல் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் உதிர்ந்து மதிப்பிழந்து போகும் மயிருக்குச் சமமாவர். அவர்களால் ஒரு பயனும் இல்லை.


பொழுதுண்ணும் பூதத்தின் பொல்லாவாய் போனால்
அழுதிடினும் மீண்டிடுமோ ஆண்டு



டைம்பாஸ் என்று பொழுது போக்குகளில் ஈடுபடுகிறோம். இந்தப் பொழுதுபோக்குகள் காலத்தை விழுங்கும் பூதங்கள். இந்த பொழுது போக்குகளுக்கு நம் காலம் இரையாகப் போனால், பின்னர் எவ்வளவு அழுது புலம்பினாலும் நம்மால் அதே இடத்திற்கு, காலத்திற்கு மீளச் செல்ல முடியாது, பொழுது போக்குகள் நம் காலத்தை விழுங்கி விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.


உத்தமர் உறவு!




சித்த நினைவும் செய்யும் செயலும் நீயென வாழ்
உத்தமர்க்கான உறவே பராபரமே

                                                      தாயுமானவர்



சித்த நினைவும்
செய்யும் செயலும்
நீ என வாழும்


இதன் பொருள் இறைவனுக்காக இறை நினைவில் எல்லாம் செய்வது என்று பலரும் பொருள் சொன்னாலும்....


சித்தம் என்பது ஆழ்மனம்.. மனசாட்சி என்று சொல்கிறோமே அது. அதை இறைவனாகவே கொள்ளவேண்டும். அதன் வழி நடக்க வேண்டும்.


செய்யும் செயலையும் தெய்வமாக என்ன வேண்டும். ஒரு தொழிலை பணம், புகழ் இத்யாதி புறக்காரணங்களுக்காக செய்யாமல் அதை தெய்வ சேவையாக நினைத்து செய்தல்..


இப்படி சிந்தனையிலும் செயலும் இருக்கப் பெற்றவர் உத்தமர்.


அந்த உத்தமருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும்.


மருத்துவத் துறையில் இந்த கொள்கை இருந்தது, கல்வித் துறையில் இந்தக் கொள்கை இருந்தது.


இன்னும் ஒரு சில மனிதர்களிடம் இருக்கிறது.


சித்த நினைவு, சித்தர்களெல்லாம் சித்தனாகிய முதல் சித்தன் சிவனின் நினைவு.. மாறாத ஒரே திட நினைவு. கைவசமாகும் என்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டு நீங்காத மாறாத நினைவு...


பராபரக் கண்ணியின் விளக்கத்தை  கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்




அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே.



அறிவாகி நின்றவன் இறைவன். அந்த அறிவிலிருந்து நல் திட சிந்தனையாகவும் நற்செயல்களாகும் வெளிப்படுகிறான்.


உறுதியான எண்ணமும், அதே போன்ற உறுதியான செயலும்... இறைவனை நோக்கியே இருக்கும். மற்றவை மாறிக் கொண்டே இருக்கும்.


செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.


இவை மட்டுமே உத்தமர்களின் உறவுகள். உத்தமர்கள் என்றுமே இவற்றைப் பேணி இவற்றுடனே வாழ்வார்கள்.



அறிவும், சிந்தனையும் செயலும் இறைவனே!!! உத்தமர்க்கு அவனே உறவு!!!



அந்த உறவை நாடுகிறார் தாயுமானவர். நாமும் அவர் உறவை நாடுவோம்.

Friday, October 2, 2015

குற்றம் கடிதல் - கதை விமர்சனம்


இயக்குனர் பிரம்மா.ஜி
தயாரிப்பாளர் ஜெ.சதீஷ் குமார், கிறிஸ்டி சிலுவப்பன்
நடிப்பு சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா
இசையமைப்பு சங்கர் ரெங்கராஜன்
ஒளிப்பதிவு மணிகண்டன் D.F.Tech
படத்தொகுப்பு சி. எஸ். பிரேம்





தலைப்பை நன்கு கவனிக்கவும். இது திரைப்பட விமர்சனத்தின் ஒரு பகுதி மட்டுமே. நடிப்பு,
இசை, பாடல்கள் என எதையும் நான் விமர்சிக்க போவதில்லை.

குற்றம் கடிதல் என்பதன் பொருள் - தண்டனை அளித்தல், திருத்துதல் என எதுவும் இல்லை.
குற்றம் ஒன்று நடக்குமானால் எப்படி அதை எதிர்கொண்டு குற்றத்தை நீக்க வேண்டும் என்பதே
தவிர குற்றவாளியை தண்டித்தல் அல்ல.


ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு கார் ஒருவரை இடித்து விட்டது. உடனே செய்ய வேண்டியது என்ன?


இடித்தவரை அடிப்பது அல்ல. அடிபட்டவரைக் காப்பாற்றுவது, சம்பவத்தால்
பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பது.


அதை சம்பவத்திற்குக் காரணமானவரே செய்து விட்டால் தண்டனைகளே
தேவையில்லை.
மன்னிப்பே அங்கே தண்டனையாகிறது. குற்றம் கடிதலின்
முழுக் கதைக்கும் இதுவே
மையக்கருவாக அமைகிறது.


அந்தப் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தது, ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒரு மாணவிக்கு முத்தம்

கொடுத்து ஹேப்பி பர்த்டே சொல்கிறான்.


அது தப்பில்லையா என்று ஆசிரியை கேட்க உங்களுக்கும் கூட முத்தம் தருவேன் என்கிறான்.


அந்த ஆசிரியை அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை சுருக்கமாக அந்தச் சிறுவனின் 
தாயாக அதை அணுகி இருக்க வேண்டும் என்று சொல்கிறார் இயக்குனர்.


இங்கு மட்டும் சிறு திருத்தம் உண்டு. அதைக் கடைசியில் சொல்கிறேன்.


அந்த ஆசிரியை அவனை உணர்ச்சி மேலீட்டால் ஒரு அடி அடித்து விட அவன் சுருண்டு
விழுகிறான். மூக்கில் ரத்தம்.மயக்கமாகிறான்.


இந்த ஒரு சம்பவத்தை யார் யார் எப்படி எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் கதை.


ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்று பலரும்
விமர்சிக்கிறார்கள்.


தவறு.


அரசாங்கமும், நீதிமன்றங்களும் ஊடகங்களும் முக்கியமாக  கவனிக்க வேண்டிய படம்.


ஒரு சம்பவம் நடந்தால்



பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்.

சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள்  பொறுப்பேற்க வேண்டும்.

யார் தவறு என்பதை விட என்ன தவறு என்பது பற்றிய தெளிவைப் பெற வேண்டும்.
எது தவறு என்று அறிந்த பின் எது சரி என்ற ஆராய்ட்சி இருக்க வேண்டும். அந்தப் படிப்பினை
அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.



முக்கியமாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியவர்கள் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட
வேண்டும் என்று போராடும் போராளிகள். நீதிபதிகள், போலீஸ், வக்கீல்கள், மற்றும்
ஊடகவியலார்.


தோழர் பாத்திரத்தின் மூலம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எப்படி அணுக வேண்டும்
என்று அழகாகக் காட்டி இருக்கிறார் இயக்குனர்.


அப்படி எல்லா சம்பவங்களையும் அணுகினோம் ஆனால் சிறு தவறுகள் பெரிய குற்றவாளிகளை
உருவாக்காது என்பதை உறுதிபடக் கூறலாம்.


அந்தத் தாயின் மன்னிப்பும், அந்தத் தோழரின் மன்னிப்புமே மிகச் சிறந்த தண்டனைகளாக
அமைந்து விடுகின்றன.


இப்படித்தான் குற்றங்கள் அணுகப் பட வேண்டும் என்பது குற்ற தண்டனைச் சட்டத்தின்
அடிப்படை வரையறையாக இப்படம் அமைந்திருக்கிறது.



நான் சொல்லும் திருத்தம்


அந்த ஆசிரியைக்கு தோழர் சொல்கிறார், அந்தச் சிறுவனை  நீங்கள் அவனின் தாயாக அணுகி
இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கும் தாயாக அந்த டீச்சர் இருந்திருக்க
வேண்டும். முதலில் அவளை ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். அவன் உன் சகோதரன்தான்
தவறில்லை. என அமைதியாக்கி இருக்க வேண்டும். சிறுவனை தனியே அழைத்து அறிவுரை
சொல்ல வேண்டும்


ஊடக ஆர்ப்பாட்டங்கள், போலீஸ் நடவடிக்கைகள், என எதையும் பெரிதாக காட்டாமல்
கதையில் எது முக்கியமோ அதைக் காட்டியிருக்கார் பிரம்மன். மிகச் சரியான அணுகுமுறை,


குற்றம் கடிதல்


ஊடகம், நீதித்துறை, மக்கள் என அனைவரையுமே சரியாகவே கடிந்திருக்கிறது.


நண்பர் தியாகுவின் பாராட்டு


அன்புள்ள நண்பர்களுக்கு,

குற்றம் கடிதல்......பற்றிய கற்றுகொள்ள வேண்டிய கடிதம்.

இது யதார்த்தமான திரைபடங்கள் வரிசையில் ஒன்று........

கற்றது தமிழ்......சூது கவ்வும்.....ரௌத்திரம்.......மூடர் கூடம்......சதுரங்க வேட்டை......கோலி சோடா......காக்கா முட்டை.......இப்படி silent killer வகை படங்களில் ஒன்று.......

ஆனால்......சற்று புதுமை......ஒரே ஒரு நடிகர்.....அதுவும் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்தவர் மட்டுமே...நமக்கு தெரியும்.....கிட்டதிட்ட அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களும்...ஆஹா...ஏதோ அவர்களிடம் போய் அவர்கள் வாழும் வாழ்க்கையை படம் பிடித்தது மாதிரியான உணர்வு..........

ஒரு....செயல்...தவறு அல்லது...குற்றம் என்பதைவிட....அதை உணர்சசிவசப்பட்டு செய்துவிட்டு...அதற்கு பிறகு ஏற்படும் குற்ற உணர்ச்சி இருக்கிறதே..... இதில் விவரிக்கபட்டிருக்கிறது.......

உயிர்களை படைப்பது ப்ரம்மா எண்பார்கள்.....ஆம்....இந்த அரிய படத்தை படைத்த இயக்குனரின் பெயரும் ப்ரம்மா தான்

காதல்,..திருமணம், மதம், கடவுள் நம்பிக்கை, பாலியல் கல்வி, ஏழ்மை, உழைப்பு, மனிதநேயம், நட்பு, ஒற்றுமை, கோபம், வெறுப்பு, சிறுவர் குறும்பு மற்றும் புத்திசாலிதனம்,    சமுக சிந்தனை, புரட்சி, மருத்துவம், மென்பொருள்,  ஊடகம், முக்கியமாக கூத்து நாடக கலை......இப்படி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும்......அழகாக கோடிட்டு காட்டிய காவியம்......

இந்த படத்தை பார்க்க மேலும் தூண்டிய தாமரைக்கு நன்றி

இந்த படத்தை.....MCE89....குழுமத்தில் உள்ள அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
தியாகு.