Wednesday, May 26, 2010

கொஞ்சம் விளையாட்டா வாழ்ந்து பார்க்கணும்,!!!



வாழ்க்கை விளையாட்டல்ல..

மற்றவர் வாழ்க்கையில் விளையாடாதீங்க..

இப்படி பலபேர் சொன்னாலும், வாழ்க்கையை விளையாட்டாக வாழ்ந்து பார்த்தால்தான் என்ன?

விளையாட்டான வாழ்க்கைதான் வெற்றியைக் கொடுக்கும். எப்படித் தெரியுமா?

இதைப் புரிந்துகொள்ள விளையாட்டை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

விளையாட்டு என்றால் என்ன? அதற்கான சரியான வரையறை என்ன?

விளையாட்டு ஒரு பொழுது போக்கான விஷயம். அதில் உண்டாகும் விளைவுகள் வாழ்க்கையை நேரடியாக பாதிப்பதில்லை, விளையாட்டில் எப்பொழுதுமே இன்னொரு வாய்ப்பு உண்டு. அதனால் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் விளையாடலாம்.

இந்த ஒரு விஷயத்தை வலியுறுத்த மட்டுமே வாழ்க்கை விளையாட்டு இல்லை என்று சொன்னார்கள். அதாவது வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள் நிரந்தர மாற்றத்தைத் தரவல்லவை. அதனால் கவனத்துடன் கையாளவேண்டும். விளைவுகளைப் பற்றி கவனமின்மை பெரிய இன்னலில் சென்று சேர்த்துவிடக் கூடும் என்பதால்.

ஆனால் நாம் அப்படிச் செய்வதில்லை. விளையாட்டில் வெற்றி ஆர்வத்துடனும் முனைப்புடனும் ஈடுபடுகிறோம்.

வாழ்க்கையில் பல இடங்களில் அலட்சியமாக இருக்கிறோம்.

அடிப்படைக் காரணம் என்ன?

ஆர்வம்,, விருப்பம்.. மன ஈடுபாடு இப்படி பலவார்த்தைகளில் சொல்லப்படும் அந்த மன்மாரச் செய்வதுதான், இல்லையா?  விளையாட்டுகளில் இரண்டு வகை இருக்கிறது.

1. தனி விளையாட்டு
2. குழு விளையாட்டு

மனித வாழ்க்கையிலும் இவ்விரண்டும் உண்டு. தனிமனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்ற இரண்டுமே உண்டு.

ஒரு விளையாட்டை நாம் தேர்ந்தெடுக்கும்பொழுது என்னவெல்லாம் செய்கிறோம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்


1. விளையாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
2. விதிமுறைகள், நுணுக்கங்களை அறிந்து ஆராய்தல்
3. அந்த விளையாட்டில் புகழ்பெற்றவர்களைப் பற்றி அறிதல்
4. அந்த விளையாட்டைப் பற்றிப் பலரிடம் பேசி அனுபவங்களைத் தெரிந்துகொள்ளுதல்
5. தீவிர பயிற்சி
6. உடலை தகுதியானதாக வைத்துக் கொள்ளுதல்
7. வல்லுனர்களின் பயிற்றுவிப்பு
8. பலவகைப் போட்டிகளில் கலந்துகொள்ளுதல்
9. வெற்றிகளைக் குவித்து மேலும் மேலும் முன்னேறுதல்
10. குழுவாகப் பணியாற்றல், அனைவரையும் அரவணைத்தல், எல்லோரிடமும் கற்றுக்கொள்ளுதல், மற்றவர்களுக்கு உதவுதல்
11. ஆட்டத்திறன் குறையும் பொழுது தான் கற்றவைகளை மற்றவர்களுக்கு பயிற்றுவித்தல்


இப்படிப் பலப்பல படிகளை கவனமாகவும், உண்மையோடும் கடந்தால் மட்டுமே ஒரு மாவீரன் உருவாகிறான். போற்றப்படுகிறான்.

இப்படி இல்லாமல் ஒரு நோக்கே இல்லாமல் கல்லெறிவது, கிண்டலடிப்பது, ஏமாற்றுவது என்பதை விளையாட்டுகள் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் சமூகம் அதை ஒப்புக் கொள்வது இல்லை,

அதைப் போல வாழ்க்கையிலும் நாம் இந்தப் படிகளை அமைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்.

நாம் ஒரு சிறந்த மனிதனாக மதிக்கப்படுவோமா இல்லையா?

விரிவாகப் பார்க்கலாமா?

 விளையாட்டில் உள்ள சில அடிப்படைகள்

1. வெற்றி தோல்வியை விட சிறந்த பங்களிப்பே மிகுந்த திருப்தியைத் தருவது

2. நம்மை வெல்பவர்களையும் மதிப்பது. பாராட்டுவது

3. விதிமுறைகளை மீறாமல் ஆடுவது

4. சாதிக்க முயற்சிப்பது. முடியாவிட்டாலும் மனம் உடையாமலிருப்பது.

5. நமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குச் சொல்லித் தருவது. மற்றவரிடம் இருந்து தேவையானதை கற்றுக் கொள்வது

6. விமர்சனங்களை நேர்நோக்கில் ஏற்றுக் கொள்வது

7. களமிறங்கினால் உண்டாகும் மன ஒருமுகமாதல்

8. தோற்றுவிடுவோம் என்று தெரிந்தாலும் மனம் சோர்ந்துவிடாமல் முடிந்த வரை போட்டியிடுவது.



இப்படிப் பலப்பல நற்குணங்கள் விளையாட்டில் உண்டு.
வாழ்க்கையில் உண்டா?

விளையாட்டில் எப்படி நமக்கு ஈடுபாடு வருகிறது?

நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் உறவினர்கள் அந்த விளையாட்டை ஆடுவதையோ அல்லது அதைப் பற்றி உயர்வாக ஆர்வத்துடன் பேசுவதைக் கண்டு அதில் நமது மனம் ஈடுபடுகிறது.

இதில் இருவகை விருப்பங்கள் உண்டு. அதைப் பற்றித் தெரிந்து கொள்வதால் நட்பு மற்றும் உறவு வட்டாரங்களுடன் பொழுதை சந்தோஷமாய் கழிக்க..

இதில் வீரர்கள் பெரும் புகழையும், வருமானத்தையும் கண்டு அதே போல் நாமும் மாறவென..

முதல் வகையில் பார்த்தால் சிலர் தம் பேரறிவினைப் பறைசாற்றவென்றும் தம்து மனதில் இருக்கும் கழிவுகளை பழித்துரைத்தல், தூற்றுதல், மட்டம் தட்டவும் இன்ன பிற வகைகளிலும் வ்பொழுதை விரயமாக்குகின்றனர்.

ஆனால் விளையாடத்துடிப்பவர் மேற்கண்ட விஷயங்களில் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கிறார். அவர் நுணுக்கங்களையும், இன்னபிற விஷயங்களையும் கூர்ந்து கவனித்துக் கற்றுக் கொள்கிறார்.

ஆனால் நாம் நம் வாழ்க்கைப் பாதை இதுவெனத் தீர்மானிக்க என்ன அடிப்படை?

எதில் பணம் கிடைக்கும் என என்று நம்புவதா?
எதில் புகழ் கிடைக்கும் என்று நம்புவதா?

நம்மில் பலருக்கு நம் வாழ்க்கைப் பாதை நம் விருப்பத்திற்கு ஏற்ப நாம் ஏற்படுத்திக் கொள்வது அல்ல. திணிக்கப்பட்டவைகள்.

விளையாட்டைப் போல வாழ்க்கையிலும் நமது விருப்பம் பிரதானமாக இருக்கும் பட்சத்தில்

விருப்பத்துடன் வாழ்வோம் அல்லவா? 
டிப்படைத் தகுதிகள் கூட இல்லாமல் ஒருத்தர் விளையாட்டுத் துறையில் உள்ளே நுழையவே முடியாது இல்லையா?

விளையாட்டில் சிலர் சதி செய்யலாம்.. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்..

இவை பணமும் புகழும் நிறைந்த விளையாட்டுகளில் அதிகம் நடக்கின்றன அல்லவா?

அதாவது விளையாட்டே வாழ்க்கையாகும் பொழுது.. வாழ்க்கையில் நாம் செய்யும் அத்தனைக் கள்ளத்தனங்களையும் விளையாட்டில் செய்கிறோம்.

வாழ்க்கையே விளையாட்டானால் அதே போல விளையாட்டில் உள்ள நல்லத்தனங்கள் வாழ்க்கையில் வராதா என்ற நப்பாசைதான்

தாமரை பதில்கள் : 96

கேள்வி எண் 96:
கேட்டவர் : அன்புரசிகன்


அமெரிக்காவில் இராணுவ ஆட்சி வந்தால் உலகளாவிய ரீதியில் எதை எதிர்பார்க்கலாம்???



அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இராணுவ ஆட்சி வரவேண்டுமென்றால், அதற்கு மிகப்பெரிய ஒரு காரணம் இருக்கும். மிகவும் வலுவான ஜனநாயக நாடுகளில் இராணுவ ஆட்சி வந்தால் மிகப் பெரியதொரு போரை எதிர்பார்க்கலாம். ஏனென்றால் இந்நாடுகளில் ஓரிரு இராணுவ அதிகாரிகள் சதிசெய்து ஆட்சியைக் கைப்பற்ற இயலாது. அதற்கென வலுசேர்க்க வலுவான எதிரி வேண்டும். நாட்டிற்கு பேராபத்து இருக்க வேண்டும். 

சாணக்கியர்கள் நிறைந்த அரசியல், துப்பாக்கிகளுக்கு அவ்வளவு எளிதில் விட்டுத்தராது. ஏனென்றால் ஜனநாயக நாட்டில் ஓரிருவரை மடக்கி ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது நடக்காது. மிகப் பெரிய இராணுவம் ஒரு அதிகாரியின் கீழ் ஒன்றுபட்டுச் செயல்பட ஒரு வலுவான காரணம் வேண்டும். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் அதிகாரப்பசி உண்டு. அதிகாரிகளுக்கும் அந்த அகோரப்பசி இருக்கும். கட்டி ஆள்வது சிரமம்.

அப்படி இல்லாமல் ராணுவம் அரசியல்வாதிகளை அடக்கி ஆட்சியைக் கைப்பற்றுகிறதென்றாலும் மக்களை திசை திருப்பவாவது புரட்சிகளை அடக்கவாவது யார் மீதாவது பழி சுமத்தி போரில் இறங்க வேண்டிய கட்டாயம் இருக்கும். உள் நாட்டுப் போராவது இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளை மட்டுப்படுத்தவதில் கை தேர்ந்தவர்கள். எனவே நாடே பிளக்கும் அளவிற்கான உள்நாட்டுப் போருக்கு காரணம் வேண்டும்.

பொருளாதாரப் பிரச்சனைகளால் இராணுவ ஆட்சி வருவது என்பது சிறிய நாடுகளில் மட்டுமே சாத்தியம். பெரிய நாடுகளில் மிகக் கடினம். ஏனென்றால் பொருளாதரம் நிர்வாகத்தையும் வளத்தையும் சார்ந்தது, அதை அரசு மட்டுமல்ல பல தொழிலதிபர்களும் கவனித்துக் கொள்வார்கள்.

தாமரை பதில்கள் : 94

கேள்வி எண் 94:
கேட்டவர் : அன்புரசிகன்


அரச பயங்கரவாதத்தினை தற்கால அரசியலில் எவ்வாறு தட்டிக்கேட்கலாம்.? அல்லது அது சாத்தியமா அசாத்தியமா?



ஒரு சின்ன நுணுக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீதியை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? 

குற்றம் சாட்டப்படும் எவருமே அதை மறுத்தல்தானே இயல்பு.?

அதை அவர் ஒத்துக் கொள்ளவேண்டுமெனில் அவர் உணரவேண்டும். உணரவைக்க வழி? 

அவரை அதே போன்ற துன்பத்துக்கு ஆளாக்க வேண்டும்? அதற்கு வழி? 

நாம் அந்தக் குற்றத்தைச் செய்ய வேண்டும். அப்புறம் நாமும் அவருடன் கூண்டில்..


ஆக ஆரம்ப காலகட்டங்களில் இது தவறு என்பதை மட்டும் சொல்லாமல், இது சரி, இன்னும் சில நல்ல வழிகள் இருக்கின்றன என்ற முழுமையான மனம் விட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு முயற்சித்தல் நல்லது. இதைச் செய்ய தன்னலமற்ற, உணர்ச்சி வசப்படாத ஒரு தலைவன் வேண்டும். அவன் பின் கட்டுப்பாடான மக்கள் வேண்டும்.

அரசாங்கம் என்ன பொய்கள் சொல்லலாம். அவற்றை உடைக்க என்ன என்ன ஆதாரங்கள் தேவை என்று ஆராய்ந்து அதற்கேற்ப முன்னேற்பாட்டுடன் தலைவன் செயல்பட வேண்டும். 

நிலைமை கைமீறிப் போகும் பொழுது போராட்டம் என்பது குற்றம் சாட்டப்பட்டவனுக்கு எதிராக அல்ல. குற்றத்திற்கு எதிராக, ஒரு தனிமனிதனை ஒழிப்பதால் பயங்கரவாதங்கள் ஒழியாது. போராட்டங்களும் ஒழியாது. 

எனவே உலக அரங்கில் பிரச்சனையையும், தங்களின் எண்ணங்களையும். அணுகுமுறையையும் பரவும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு அரசாங்கமும் சொல்லும் சாக்கு "இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சனை" என்பதுதான். மக்கள் இன்றி நாடு ஏது? நாடு என்பது அந்த அரசு அதிகாரிகள் அல்ல என்பதை உணர்த்துவதில்தான் வெற்றி ஒளிந்து கிடக்கிறது.

ஆனால் உலக நாடுகள் மக்களை விட அரசாங்கத்திற்குத் தானே அதிக மதிப்பளிக்கின்றன. அப்படிப்பட்டவர்களை எப்படி தன்பக்கம் ஈர்ப்பது என்பது தான் சூட்சமக்கயிறு.

இங்குதான் தலைவனின் தலைமைப் பண்பு எதிர்பார்க்கப்படுகிறது. தங்களால் உலகம் அடையும் நன்மைய உலகிற்கு எடுத்துக்காட்டுதல் தேவையாகிறது. மக்களின்றி அரசால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை காட்டத்தான் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் இவற்றை நடத்திக் காட்டினார் காந்தி. ஆக அரசால் நன்மைகள் இல்லை, அரசினால் கட்டுப்படுத்த முடியாது என்பதை மக்கள் புரிய வைத்தால் உலக நாடுகள் அரசை தட்டி வைக்க, தூக்கி எறியத் தயங்காது. 

பிரிவினை ஒன்றுதான் மக்கள்மேல் செலுத்தப்படும் மிகக் கொடிய ஆயுதம். அதற்கு பலியாகாமல் தப்பினால் எந்த அரசியல்வாதியும் நீண்ட காலத்திற்கு மக்களைக் கொடுமைப்படுத்த முடியாது,

அரசே கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை நேரிடையாக எதிர்ப்பது என்பது மிகவும் கடினமான செயல்.

புத்திசாலி யார் என்பதைப் பொறுத்து சாத்தியக்கூறுகள் மாறுபடும்.

தாமரை பதில்கள் : 95

கேள்வி எண் 95:
கேட்டவர் : அமரன்


செய்தியாளர்கள், செய்தி ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும்?




செய்தியாளர்கள் ஆரோக்யமான உடலும், சுறுசுறுப்பும், நல்ல நினைவுத் திறனும், மற்றவரைச் சற்றே கவரும் சில நல்ல விஷயங்கள் (புன்னகை முகம், புத்துணர்வு காட்டும் முகம் .. இப்படி) கொண்டவராகவும் நல்ல மதிநுட்பமுடையவராகவும் இருக்க வேண்டும்.

ஊடகங்கள், உபயோகிக்க எளிமையாகவும், மக்கள் விரும்பும் செய்திகளையும், மக்களுக்குத் தேவையான தகவல்களையும் சரியான விகிதத்தில் கலந்து தருபவையாகவும், பொது நலனில் அக்கறை உள்ளதாகவும் இருத்தல் வேண்டும்..

ஓ கேட்டது அமரன் அல்லவா?

செய்தியாளர்களுக்கு என்று சில கடமைகள் இருக்கிறது அமரன். அதாவது நாம் தரும் இந்தச் செய்தி என்ன வித தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற தொலைநோக்கு இருத்தல் வேண்டும். இன்னார் தந்த செய்தியா? சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கவேண்டும். (பத்திரிக்கை ஆசிரியர், நிலைய இயக்குனர், மக்கள் எல்லோருக்கும்). 

நாட்டுக்கு என்ன இப்பொழுதைய அவசியத் தேவை என்பதை உணர்ந்தவராக இருத்தல் நல்லது, 

ஊடகங்கள் நாட்டில் பல பணிகளைச் செய்கின்றன, பொழுதுபோக்கு, தகவல்தொடர்புகள், அரசியல், தொழில்கள், வியாபாரம், சமயம் இப்படிப் பலப்பல துறைகளில் ஊடகங்கள் உண்டு.

ஊடகங்களே நம் கனவுத்திரையில் பல காட்சிகளை உண்டாக்குகின்றன. அந்த ஊடகங்கள் லாபநோக்கத்துடன் நடக்கின்றன. கூடவே

1. கொஞ்சம் தொலைநோக்கு(எதிர் நோக்கி இருக்கும் சவால்களை சற்றேனும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது)
2. கொஞ்சம் சமூக அக்கறை(கலகங்கள் மூட்டி விடாமல் இருப்பது)
3. கொஞ்சம் தன்னுடைய நற்பெயர்(நம்பத் தகுந்த ஊடகமாக இருத்தல்)
4. கொஞ்சம் பயனுள்ளதாக இருத்தல் (மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்)

ரொம்ப மாறவேணாம்.. அதில கொஞ்சம் இதில கொஞ்சம் என நல்ல விஷயங்களைக் கலந்து கொடுத்தா போதும்.

Tuesday, May 25, 2010

தாமரை பதில்கள் : 93

கேள்வி எண் 93:
கேட்டவர் : சிவா.ஜி



சில நேரங்களில் எதைப்பற்றியுமே சிந்திக்க முடியாமல், மூளை ஸ்தம்பித்துவிடுகிறதே....இந்த வெறுமையை எப்படி சமாளிப்பது?



சிந்திக்க முடியலையே என்பதே ஒரு சிந்தனைதான் சிவா.ஜி

உங்களுக்கு கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படுத்தாத, சிறிதும் ஆறுதலைத் தருவதான எந்தச் சிந்தனையும் வரவில்லை என்பதுதான் நிஜம்.

காரணம் படபடப்பு, கோபம், பயம் இதைப் போல பல உணர்வுகள்...

முதலில் வெளியே வாருங்கள்.. (ஓடும் டிரெய்னில் இருந்தால் என்ன செய்யறது.. சரி இருக்கும் இடத்தை விட்டு சற்று வசதியாக மாறிக் கொள்ளுங்கள்). கண்ணில் தென்படும் 5 விஷயங்களின் நல்லது என்ன கெட்டது என்ன என்று யோசியுங்கள்..

இப்படி ஒரு ஐந்து நிமிஷம் பத்து நிமிஷம் செலவிட்டு விட்டு அப்புறம் சிந்தியுங்கள் போதும்.

பலபேர் புகை பிடித்தால், மது அருந்தினால் ஐடியா வர்துன்னு சொல்றது இதனால தான், அவற்றினால் இல்லை.



தாமரை பதில்கள் : 92

கேள்வி எண் 92:
கேட்டவர் : அன்புரசிகன்


காதலிக்கு ரோஜாவும் மனைவிக்கு மல்லிகையும் கொடுக்கவேண்டும் என்ற கருத்து ஏன் வந்தது?



தெரியாமால் கேட்டீர்களா தெரிந்து கேட்டீர்களா தெரியவில்லை.

ரோஜா என்பது காதல் தேவதையின் சின்னமாகக் கருதப்படுகிறது. (வீனஸ்) காதலியைப் போலவே பளிச்சென பல வண்ணங்களில் வருகிறது. மென்மையான நறுமணம். கண்ணுக்கழகு.. அவ்வப்போது செல்லமாய் குத்தும் முட்கள்... அதான் அது காதலிக்கு..

ஆனா மல்லிகை இருக்கே ..

அரபியில் யாஸ்மின் என்றால் கடவுளின் பரிசு. கடவுளின் பரிசை.. கடவுளின் பிரதிநிதிக்கே தருவது தானே முறை.

எப்பொழுது பூ வாங்கித் தருகிறோம். மாலை பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொழுது. மல்லிகை என்பது காலையிலேயே பறித்து வைத்தாலும் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் மலரும் பண்பு உள்ளது. இதன் மணம் 4 மணி நேரத்திற்கு மேல் தாங்கும். ஆக மாலை முதல் அன்று இரவு உறங்கும் வரையிலான காலம் முழுதும் மலர்ந்து இருக்கும் மலரைக் கொடுத்து உன் முகம் போல இருக்கிறது பார் இதற்குத்தான் உன்னைக் கண்டு என்ன சந்தோஷம் என்று நாலு பிட்டைப் போட்டுச் சந்தோஷமா இருக்கலாம்.. (உங்க சின்னச் சின்ன தவறுகளை அவங்க மன்னிச்சிருவாங்க)

ரோஜா வாங்கிப்போனா ஏன் அந்தச் சக்களத்தி இன்னிக்கு வரலைன்னு மிச்சத்தை கொண்டு வந்தீங்களா என்ற வசை கிட்டலாம். தனித்தனி பூ வரையறை இதுக்கும் உதவும்.

தாமரை பதில்கள் : 91

கேள்வி எண் 91:
கேட்டவர் : ஆதி


அண்ணா, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெருவதற்கான முக்கிய தகுதிகள் எவை எவை ? நம் இலக்கிய உலகில் கவியரசு கண்ணதாசன், கவிக்கோ அப்தூல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து போன்ற பெரும் கவிஞர்கள் பலரிருந்து இவர்களின் ஆக்கங்கள் ஏன் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க படவில்லை ?


ஒரு பழைய நகைச்சுவை துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

ஒருவன் கடவுளை தன்னை ஏழையாக படைத்ததற்கு மிகவும் திட்டினானாம்.

கடவுள் தாங்க முடியாமல் எதிரே வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க எனக்கு லாட்டரியில் 5 கோடி பரிசு விழ வேண்டும். நான் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பானாம்..

கடவுளும் வரம் தந்து மறைந்தார். தினம் தினம் லாட்டரி முடிவுகளை பார்க்கும் பொழுதெல்லாம் கடவுளஏ என்னை ஏமாற்றி விட்டாயே எனத் திட்டுவானாம்..


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கடவுள் ஒரு நாள் தோன்றிக் கன்னத்தில் பளாரென்று அறைந்து...

முதல்ல ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கித் தொலை என்று கத்தினாராம்...

அதைப் போலத்தான்



நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியைக் கூட யாரும் கேட்கக் கூட எண்ணவில்லை அதனால்தான்.

இந்தியாவில் எழுத்தாளர் சங்கங்கள் இணைந்து ஒரு உறுதியான அமைப்பை உருவாக்கி அதற்கு உலக அங்கீகாரம் பெறவேண்டும். 

படைப்புகளைப் பரிசீலித்து மொழிபெயர்த்து பரிந்துரைக்க வேண்டும். அதற்கென தன்னலமில்லா திறமையுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.


விக்கி வழிகாட்ட தயாராகத்தான் இருக்கிறது.

தாமரை பதில்கள் : 90

கேள்வி எண் 90:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


பெரும்பாலும் மற்ற இனங்களில் (உம்: சிங்கம், யானை, கோழி, மயில்..etc..) எல்லாம் பெண்ணைவிட ஆண் அழகாய் இருக்கும்போது மனித இனத்தில் மட்டும் இது மாறுபடுவது ஏன்..??



அழகு என்ற சொல்லாகவே சொல்லப்படும் முருகன் ஆண்தானே!

ஒரு சின்ன கதை.

ஞானி கேட்டார்; கடவுள் ஆணினத்தை அழகாகவும் பெண்ணினத்தை அழகுக் குறைவாகவும் படைச்சிகிட்டே வந்தார்.. மனிதனைப் படைக்கிறப்ப இந்த முறை மனிதரில் பெண்ணை அழகாகப் படைத்தார், அதுவே கடவுளின் கடைசி புதுப் படைப்பாக அமைந்து விட்டது. பரிணாம வளர்ச்சியே நின்னு போச்சு. ஏன்?


பெண் சொன்னாள்: இதுவரைக்கும் கடவுளுக்கு கிடைக்காத படைப்பின் திருப்தி பெண்ணை அழகாக படைச்சவுடன் கிடைச்சுட்டது..இதுக்கு மேல எதையும் படைக்க முடியாது என்று அமைதி ஆயிட்டார்.

ஆண் சொன்னான்: ஒரு பெண்ணினத்தை அழகாப் படைச்சவுடனே அதனோட அட்டகாசம் தாங்காம கடவுளுக்கு படைப்புத் தொழில் மேலயே வெறுப்பு வந்திட்டது.. இனி எதையாவது புதுசா படைச்சேன்னா ஏன்னு கேளு என வி ஆர் எஸ் வாங்கிட்டாரு.

நான் சொன்னேன்:

அழகான ஆணினம் தங்களுக்குள்ள போட்டி போட்டு இனப்பெருக்கம் கட்டுக்குள் இருந்தது, அழகான பெண்ணினம் படைச்சா பெண்ணினம் என்ன செய்யும்னு பார்த்தார்,, அப்பவும் ஆணினத்தோட சண்டை தீரலை. ஆனால் பெண்ணினத்திலும் சண்டை வந்தது. அப்போ சண்டைக்குக் காரணம் அழகா இல்லையான்னு கடவுளுக்கே சந்தேகம் வந்து குழம்பி அமைதி ஆயிட்டார்.

ஞானி சொன்னார்: ........ 

அதாவது எதுவும் சொல்லலை. மௌனமாயிட்டார்

மற்ற படைப்புகளில் பெண் இனத்திற்கு இவ்வளவு பாதுகாப்பு தேவைப்பட்டது இல்லை. ஆகவே பெண்களைக் கவர அதிகம் மெனக்கெட வேண்டி இருந்தது. 

மனிதப் படைப்பில் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்பட்டது. ஆகவே பெண்களுக்கு ஆண்களைக் கவர வேண்டிய அவசியம் அதிகமானது, அதனால் பெண்ணினத்திற்கு அழகுணர்ச்சி அதிகம்.

ஒரு இருபது தலைமுறைக்கு மெனக்கெட்டா ஆண்களும் அழகாகலாம். (ஆண்கள் தான் அழகுன்னு சொல்லிகிட்டே இருந்தா.. அழகை பெற, பாதுகாக்க முயற்சி செய்துகிட்டே இருந்தா அது அப்படியே பரவி ஆண்கள் அழகாகி விடுவார்கள்.)

அங்கே ஆணிற்கு பெண்ணைக் கவரவேண்டியத் தேவை.. இயற்கை..

இங்கே பெண்ணிற்கு ஆணைக் கவரவேண்டியத் தேவை.. இயற்கை..

ஆனால் இந்த ஆண் பெண் வித்தியாசம் பல உயிரினங்களில் இல்லை. அதையும் கவனித்தீர்களா? 

போட்டி மனப்பான்மை.. அழகிற்கு மட்டுமல்ல.. அனைத்து கவர்ச்சிகளுக்கும் அதுதான் அடிப்படை
.

தாமரை பதில்கள் : 89

கேள்வி எண் 89:
கேட்டவர் : தென்றல் 


D/L கிரிக்கெட்டில் டக்வொர்த் லீவிஸ் விதி.... புரியாத புதிர் விதி.. இதைப்பற்றி சற்று விளக்குங்களேன்.. இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்? (இன்னிங்க்ஸ் ஆடுபவர்களுக்கு)


டக்-வொர்த் மற்றும் லீவிஸ் என்ற இருவரால் தயாரிக்கப்பட்ட அட்டவணை, இதை மன்றத்தில் மின்புத்தகப் பகுதியில் பதிவேற்றி இருக்கிறேன்


http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=434



இதன் அடிப்படையைப் பார்ப்போம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு முக்கிய சொத்துக்கள் இருக்கின்றன. 1. ஓவர்கள் 2. விக்கெட்டுகள்.

ஆட்டத்தில் தடை வெவ்வேறு இடங்களில் ஏற்படலாம். முதல் அணி ஆடும் பொழுது மழை வந்து மொத்த ஓவர்கள் குறைக்கப்படலாம்.  முதல் அணி முழுமையாக ஆடிய பிறகு இரண்டாவது அணி ஆடும் பொழுது ஓவர்கள் குறைக்கப்படலாம்.  இரண்டிற்கும் வெவ்வேறு வகை கணக்குகள். கணக்குகளை எளிமையாக்க உதாரணம் முக்கியம்

1. டீம் 1 50 ஓவர்கள் முழுமையாக ஆடி எடுத்த ஓட்டங்கள் 250 / 8

2. டீம் 2 40 ஓவர்கள் ஆடி விட்டது ஸ்கோர் 186 / 4

மழையால் 10 ஓவர்கள் இழப்பு.

இப்பொழுது 10 ஓவர்களை இழந்ததினால் ஏற்பட்ட சொத்து இழப்பு = 28.3% (அட்டவணையில் 10 ஓவர்கள் 4 விக்கெட்டுகளுக்கு நேராகப் பார்க்கவும்.

அப்படியானால் மாற்றிக் கணிக்கப்படும் வெற்றி இலக்கு

250 x( (1-0.283)/1.00) = 180. 

டீம் 2 186 ரன்கள் எடுத்ததினால் வெற்றி..
முதல் அணி முழுமையாக விளையாடியதால் அதன் சொத்து 1. இரண்டாம் அணி 10 ஓவர்களை இழந்ததாலும் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டதாலும் அதன் சொத்தில் 28.3 சதவிகித இழப்பு ஏற்ப்பட்டதாக கருதப் பட்டது. இதுவே 6 விக்கெட்டுகள் இழந்து விட்டிருந்தால் இழப்பு 22.8 சதவிகிதமாக கருதப் பட்டிருக்கும். அப்பொழுது 

250x((1-0.228)/1 = 193 ரன்கள். 

டீம் இரண்டு தோற்றுப் போய் இருக்கும்


இது எளிய கணக்கு. ஆனால் முதல் அணி ஆடும் பொழுது மழை வந்து விடுகிறது.

இன்றைய தேடலில் கிடைத்த இணையப் பக்கம்



http://www.duckworth-lewis.com/Calculator/tabid/72/Default.aspx

இதில் கால்குலேட்டர் இருக்கிறது. உபயோகித்துக் கொள்ளலாம்.

ஆக இம்முறையில் முக்கியமான விஷயம் சில

1. அணியின் சொத்துக்கள் - ஓவர்கள் விக்கெட்டுகள்
2. தடை ஏற்படுவதால் சொத்திழப்பு ஏற்படுகிறது.
3. அதற்குத் தகுந்த அளவிற்கு தடை ஏற்பட்ட நேரம், அப்பொழுது கையிழப்பில் உள்ள விக்கெட்டுகள் இதுவரை சேர்த்த ரன்கள் இவை மூன்றையும் சேர்த்து இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
4. இது மிகச்சரியான இலக்குதான் என்று 100 சதவிகிதம் சொல்ல முடியாது. இதிலும் குறைகள் உண்டு. ஆனால் இதுவரை அறியப்பட்டதில் இது ஒரு நல்ல முறை..


இதில் யாருக்கு லாபம். யாருடைய இன்னிங்க்ஸ் தடை படுகிறதோ அவருக்கு நஷ்டம் வரலாம். தடை ஏற்படும் என அறியாத வரையில்.
அதே சமயம் அந்தத் தடையை முன்னராகவே ஊகித்து அதற்குரிய திட்டத்தோடு களமிறங்கும் அணிக்கு இது சாதகமாக இருக்கும்.

அதாவது தடை ஏற்படும் என்று அறியாததால் அவர்கள் 50 ஓவர்களுக்கான திட்டத்தோடு ஆடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இடையில் தடை ஏற்படுவதால் பிரச்சனை வரும்.

சில அணிகளில் துவக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடுவார்கள்.. அவர்களுக்கு இது நல்லது. சில அணிகளில் 4 வது 5 வது ஆறாவது வீரர்கள் நன்கு ஆடுவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கடினம்

அதேபோல ஆரம்பப் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் இதற்கு முக்கியமானது ஆகும்.

ஒரு முறை தென் ஆப்பிரிக்கா இலக்கை அறிந்திருந்தும், இலக்கு என்பது சமன் செய்வதற்கு என்றும் அதைத் தாண்டினால்தான் ஜெயிக்க முடியும் என்பதை அறியாமல் ஒரு ஆட்டம் டிரா ஆனது. கடைசிப் பந்தில் விக்கெட் விழுந்துவிடக்கூடாது எனக் காப்பு ஆட்டம் ஆடி ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆக யாருக்கு இந்த விதியைப் பற்றி அறிவு அதிகமோ, யாருக்கு இன்று என்ன வானிலை என்ன நடக்கும் என யூகிக்கத் தெரிந்த அணித்தலைவர் உள்ள அணிக்கும், நல்ல தொடக்க வீரர்கள், நல்ல தொடக்க பந்துவீச்சாளர்கள் மற்றும் வெற்றி பெறும் ஆர்வமும் ஊக்கமும் சிறந்த ஃபீல்டிங்கும் உள்ள அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.