Saturday, November 14, 2015

நல்லவனும் கஷ்டமும்




தாமரை, தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?



கேட்டவர் வாழ்க, பதில் கீழே....

இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி?.. நம்ம ரமேஷ் சுகமா இல்லியா? இல்லை நல்லவர் இல்லியா?

நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்களா?  தம்மை வருத்திக் கொள்கிறார்களா?? கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் தெரியும்..

நல்லவர்கள் எல்லோருமே தனிப்பட்டு அடையாளம் காணப்படுவதில்லை. அந்த நல்லவர்களில் சாதனைகளைப் படைப்போரே அடையாளம் காணப்படுகிறார். சோதனை இல்லாமல் சாதனை இல்லை. எனவே நல்லவர்கள் அனைவரும் கஷ்டப்படுவது போல ஒரு மாயை இருக்கிறது.

எத்தனையோ நல்லவர்கள் எந்தவித விளம்பரங்களும் இன்றி சந்தோஷ வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளோர் இல்லை. இவருக்கு என்ன சோதனை வந்தது? வாய்ப்பு கிடைத்தால் இவரும் கெட்டவர்தான் என்ற கண்ணோட்டத்தில் பலரை சந்தேகக் கண்ணோடு வைத்திருக்கிறோம்.

ஒருவரை நல்லவர் என்று நம்ப அவர் சோதனைகளைச் சந்தித்து தடுமாறாமல் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்து கொண்டு விட்டு,  நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் என்ற மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி விட்டதாக ஒரு நொடியேனும் நாம் சிந்தித்திருக்கிறோமா?

நல்லவராய் இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் சம்பந்தமே இல்லை. சிலர் நல்லவர்களாய் இருக்கக் கஷ்டப்படுகின்றனர்.. அவ்வளவுதான்.

நல்லவர்களாக இருக்கும் பலருக்கு மற்றவர்களால் நடக்கும் தீமையை பொறுத்துக் கொள்ள இயல்வதில்லை. எனவே அதை மாற்ற முயல்கிறார்கள். ஒரு நல்லவரைக் கெட்டவராக்கவோ அல்லது கெட்டவரை நல்லவராக்கவோ கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும்.

ஏனெனில் ஒரு மனிதனை அவனது இயல்பான நம்பிக்கையிலிருந்து மாற்ற முயல்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறை சிறு தடங்கல் ஏற்படும்பொழுதெல்லாம் அந்தப் பழைய இயல்புநிலை திரும்பி விடுகிறது.

ஒவ்வொரு மனிதன் வளரும் பொழுது  அவனது சூழ்நிலை வளர்ப்பு, அவனுக்கு கிடைக்கும் செய்திகள் தகவல்கள் அவனது உணர்வுகள் இதைப் பொறுத்து  அவனுக்கென்று ஒரு இயல்பான குணாதிசயம் ஏற்படுகிறது. அவரவர் இயல்பு அவரவருக்கு சௌகரியமாய் இருக்கிறது.

இதில் சிலரின் இயல்புகள் மற்றவர்களைப் பாதிப்பது இல்லை. இவர்கள் சாதாரண மனிதர்களாக மக்கள் அடையாளம் காண்கின்றனர்.

சிலரின் இயல்பு மற்றவர்களைப் துன்புறுத்துகிறது.. இவர்களை கெட்டவர்கள் என்கிறார்கள்..

சிலரின் இயல்பு மற்றவர்களை மகிழ வைக்கிறது.. இவர்களை நல்லவர்கள் என்கிறார்கள்..

இதில் நல்லவர்களாக அறியப்படுபவர்களும் கெட்டவர்களாக அறியப் படுபவர்களும் மற்றவர்களின் இயல்பை மாற்ற முனைகிறார்கள். அதற்காக அவர்கள் செலவிடும் உழைப்பை நாம் கஷ்டம் என்கிறோம்.

ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கினால் மக்களின் இயற்கையான சுபாவம் மாறும். குழுமங்களின் மூலம் நான் செய்ய எண்ணுவதும் அதுதான். சூழ்நிலைக்கேற்ப இயல்பாய் மனம் மாறுபவர்கள் போதும்,

யாரையும் கட்டாயமாய் இதைச் செய் இதைச் செய்யாதே என்றுச் சொல்லுதல் பலமுறை எதிர்மறை வினைகளையே உருவாக்கும். அதைக் கட்டுப்படுத்த கஷ்டப்படத்தான் வேண்டும்.

அதை நாம் நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்லி விடுகிறோம். அவ்வளவுதான்.

No comments:

Post a Comment