Sunday, November 15, 2015

உயர்ந்த நட்புக்கு உதாரணம்!




உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?

அடிக்கடி இது என் மனதில் எழும் கேள்விகளில் ஒன்று. தமிழ் சமுதாயமே இன்று உறவுகளை இரண்டாம் பட்சமாக்கி நட்பை முதன்மையாக உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிறது,

கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? நட்பே உயர்ந்தது என்றார் ஒருவர்..

மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா என்றேன்.. பதில் வரவில்லை.

துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..

அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டு சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்.

இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.

கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர்.. அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்திய போது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான்.. அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்க்களைக் கொடுத்தான்..

கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.

அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான்.
அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான்.

அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...

கண்ணன் - அர்ஜூனன் உறவு நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.

கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன..

இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது.. ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும். நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை.

உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.

உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..

என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.

இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.

இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..

நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.

நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.

நண்பர்கள் மாத்திரமே உதவுகிறார்கள் என்ற மாயையை உண்டாக்கி வைத்திருக்கிறோமே அதுதான் தவறு.

உன் நண்பன் நல்லவன் என்றால் நீ நல்லவனாகவே இருக்க முடியும். அப்பாவைக் கவனிக்காதவனை, தங்கைக்கு கல்யாணம் செய்யாத அண்ணனை, அம்மாவைத் திட்டும் மகனை தட்டிக் கேட்காத நண்பன் நண்பனா?

உலகத்தில் கணவனை இறுதிவரை காப்பாற்றிய மனைவிகள் நிறைய உண்டு, காலம் முழுக்க பேரனை வளர்த்த பாட்டிகள் உண்டு, அன்னைகள் உண்டு, மணம் செய்யாமல் குழந்தை வளர்த்த அப்பாக்கள் உண்டு...

நண்பர்கள் மாத்திரமே முழுதும் தாங்கிய மனிதன் உண்டா?  கர்ணன் என்பீர்கள். அது மட்டுமே உங்களின் பதிலாக இருக்க முடியும். தவறு. அவன் துரியோதனனை சந்திக்கும் வரை வளர்த்த அதிரதனுக்கும் இராதைக்கும் என்ன செய்தான்?

நல்ல நண்பன் தன்னை என்றுமே முன்னிறுத்துவதில்லை. நட்பை பற்றி மட்டுமே உயர்வாக பேசுவதில்லை. அவனுக்கு நண்பனின் வாழ்க்கை முக்கியம். நண்பர்கள் தங்கள் நண்பனின் மனைவியைத் தங்கையாகக் கருதுவார்கள்..

கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.


நண்பனை மகிழ்விப்பது என்பது வேறு, நண்பனுக்கு நன்மை செய்வது என்பது வேறு.

பல சமயங்களில் இன்று இக்கட்டான சூழ்நிலைகள் நண்பர்களாலேயே வருகின்றன என்பதே உண்மை.

உன் நல்ல நண்பன் உன்னை நல்லவனாக இருக்க வைப்பான், உனக்கு அம்மாவின் பெருமை தெரியும், அப்பாவின் அருமை புரியும். மனைவியின் தியாகம் புரியும். அண்ணனின் ஆதரவு தெரியும். தங்க்கையின் பாசம் புரியும். உறவின் மேன்மை புரியும். உனது கடமை புரியும்.. உன் நண்பன் நல்லவனாக இருந்தால்....

கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே.

2 comments:

  1. மன்னிக்கவும், எனக்கொரு கேள்வி. கண்ணன் கடவுளாக இருந்தாலும் நேர்மையாக நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது அந்த நட்பு ஒரு கூடாதா நட்பு தானே? மகாபாரதம் நடந்த கதை அல்ல இருந்தாலும், உங்கள் கோணம் வித்தியாசமாக உள்ளது.

    ReplyDelete
  2. http://mahabharatham.arasan.info/2014/09/are--deeds-of-Krishnaconspiracy-or-virtue.html

    ஒரு நிகழ்ச்சியை தனிப்படுத்திப் பார்த்து தர்ம அதர்மங்களை நிர்ணயிக்க முடியாது.

    பீமனா -- அர்ச்சுனனா --- தர்மமா?

    தர்மம்தான் மகாபாரத யுத்தத்தின் போக்கையும், அதன் ஒவ்வொரு விளைவுக்கும் காரணமாக அமைகிறது.

    தர்மத்தின் இந்த ஆளுமையை ஏற்றுக் கொண்டதால் பாண்டவர்கள் உயர்கிறார்கள்.

    கண்ணன் மட்டுமே இந்த தர்ம சூட்சமத்தை அறிந்தவர்.

    மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றது பாண்டவர்களோ அல்லது வேறு யாருமோ அல்ல.

    தர்மம் வென்றது. தர்மம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

    கண்ணன் தர்மம் மீறவில்லை, தர்மத்தை நிலை நாட்டினான், தர்மம் என்பதை வர்ணக் கண்ணாடிகளுடன் பார்ப்பதாலேயே கண்ணன் அதர்மம் செய்தான் எனச் சொல்கிறோம்.

    கண்ணன் யாருக்கு நேர்மையாக நடந்தான் என்றால் தர்மத்துக்கு மட்டுமே நேர்மையாக நடந்தான் எனச் சொல்லலாம்.

    ReplyDelete