Monday, August 8, 2016

வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!


இந்தியாவின் இலக்கிய வளம் மிக மிக அதிசயிக்கத்தக்கது. 


தர்மம் என்பதை நிர்ணயித்து அதை விளக்கி, அதை விளங்கிக் கொள்ள பல வகை படைப்புகளும் கொண்டது இந்த நாடு. உலகில் எந்த மதமும் இப்படி விரிவான தர்ம அமைப்பைக் கொண்டது அல்ல. 

வைதீக மதமான இந்திய மதம், வேதங்களை அடிப்படையாய் கொண்டது. அவ்வேதங்களை விளக்கும் உபனிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என மிகப் பெரிய அமைப்பைக் கொண்டது இம்மதம். 

இதில் இதிகாசங்களுக்கு தனி இடம் உண்டு. 

உலகின் மிக எளிமையான விளையாட்டு சாதனம் எது? 
பந்து. 

உலகின் மிகச் சிறந்த விளையாட்டுச் சாதனம் எது என்றாலும் அதுவும் பந்துதான். 

சிறுகுழந்தையாய் இருக்கையில் பந்துடன் விளையாட ஆரம்பிக்கும் நாம் முது கிழவர் ஆன பின்னும் பந்துடன் விளையாடிக் கொண்டிருப்போம் சலிப்பதில்லை.
 
அது போலவே இதிகாசங்கள். சிறுகுழந்தைகளாய் இருக்கும்போதே அனுமனின் சாகசங்களையும் பீமன் அர்ச்சுனன் சாகசங்களையும் வாய் பிளந்து கேட்கும் நாம் இறுதிக் காலத்திலும் இதிகாசங்களை அலசிக் கொண்டே இருப்போம். 

இதிகாசங்கள் - தர்மங்களை செயல்முறையாக விளக்கப் பிறந்தவை. இது தர்மம் என்பதுடன் அவை நின்று விடுவதில்லை. இது ஏன் தர்மம். இது ஏன் அதர்மம். எனப் பிரித்தரிய வைக்கும். 

திருவள்ளுவர் பாடிய திருக்குறளில் கூட அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என வரிசைப்படுத்திய காரணம் உண்டு. . முதலில் எது தர்மம், எது அறம், எது நல்லது என அறிய வேண்டும். பின்னர் அந்த அறவழியில் பொருளீட்ட வேண்டும். பின்னர் அந்த அறவழியில் வந்த பொருளால் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். 

அப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் முதல்கடமையும் எது நல்லது, எது அறம், எது தர்மம் என்பதைக் கற்றலே ஆகும். அப்படி கற்பதினாலேயே வாழ்க்கையில் பொருட்கடலையும் காமக்கடலையும் நீந்திக் கடந்து வீடுபேற்றை எட்ட முடியும். 

அதனடிப்படையிலேயே இதிகாசங்கள் குழந்தைகளில் இருந்து ஞான குருமார்கள் வரை அனைவருக்கும் உகந்ததாக எழுதப்பட்டன.   அதிலும் இரு இதிகாசங்களாக படைத்ததன் காரணமும் உண்டு. ஒரு கதை மூலம் தர்மத்தை முழுமையாக விளக்கிட முடியாது. அதில் உண்டாகும் சந்தேகங்களை இன்னொரு கோணத்தில் கண்டு விளங்கிக் கொள்ள இன்னொரு நிகழ்வு தேவைப்படுகிறது. இராமயணமும் - மஹாபாரதமும் அப்படியான இரட்டைக் காப்பியங்களே. 


அப்படி ஒரு ஒப்பீட்டு நிகழ்வே வாலி வதமும் - கர்ணன் மரணமும்.  

 
இராவணன் அட்டகாசம் அதிகரித்த காலம். இராவணன் கதை முடிக்க தேவர்கள் விஷ்ணுவுடன் வேண்டியபோது தன்னுடைய அவதாரம் பற்றிச் சொல்லி, தேவர்களை வானரராய் பிறக்கும்படியும் விஷ்ணு சொல்கிறார்.  
இதனால் வாலி - சுக்ரீவன் ஜனனம் நிகழ்கிறது. வாலி - இந்திரனின் அம்சம். இந்திரன் அவனுக்கு ஒரு வரமும் தருகிறான். வாலியுடம் யார் மோதினாலும் அவரின் பலத்தில் பாதி வாலியைச் சேரும். 

சுக்ரீவன் சூரியனின் அம்சம். வாலி மூத்தவன் என்பதால் அரசனாகிறான். அவனுடைய கடமை இராமனுக்காக காத்திருத்தல். ஆனால்... 

உலகியல்பின்படி வாலி தன் சுக வாழ்வில் மூழ்குகிறான். அவனை எதிர்த்தோரை எல்லாம் பரலோகம் அனுப்புகிறான். துந்துபி, மாயாவி என அவன் பலி பட்டியல் பெரிது. இராவணனையும் வெல்கிறான். அவனை தன் மகன் அங்கதனனின் தொட்டிலில் விளையாட்டு பொம்மையாக தொங்க விடுகிறான். 

வாலி ஒவ்வொரு போரில் வெல்லும்பொழுதும் ஒவ்வொரு பிரச்சனை உண்டாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் காரணத்தால் துந்துபிக்கும் வாலிக்கும் விரோதம் இருந்தது.  அதில் ஏற்பட்ட கைகலப்பில் வாலி, துந்துபியைக் கொன்றுவிட்டான்.  அவனுடைய சகோதரனான மாயாவி, இந்தக் காரணத்தால் வாலியோடு சண்டை போட வந்தான்... என்று வால்மீகியின் சம்பவக் கோர்வை விரிகிறது.   

துந்துபியைக் கொன்றபோது மதங்க முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறான். 

மாயாவியைக் கொன்றபோது சுக்ரீவன் வாலி இறந்து விட்டதாக கருதி, அமைச்சர்களின் வற்புறுத்தலின் பேரில் அரசனாக... 

சுக்ரீவனை சதிகாரனாகக் கருதி அடித்து விரட்டியதோடு அல்லாமல் அவன் மனைவி ருமாவையும் கவர்ந்து கொள்கிறான். 

இராவணனை வென்றாலும் இராவணனுடன் நட்பு கொள்கிறான். என்னதான் இராவணன் அவன் வீரத்திற்கு பெயர் பெற்றவன் என்றாலும் அவன் சிறந்த இராஜதந்திரிதான். அவனை வென்ற வாலியையே நண்பனாக பெற்று விடுகிறான். 

ஆக வாலி பலம் மிக்கவன் என்றாலும் அறிவும் தர்ம சிந்தனையும் குறைந்தவன். வாலியே சொல்வான் . இராமன் வாலியிடம் வேண்டியிருந்தால் சிறிது நேரத்திலேயே சீதையை மீட்டுக் கொடுத்திருப்பேன் என. 

அனுமனும் ஜாம்பவானும் சுக்ரீவனும் வாலியின் பலம் பற்றி இராமனுக்குச் சொல்லித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மறைந்திருந்து கொல்லும் திட்டத்தையே இராமன் உருவாக்குகிறான். 

இது எங்கே மஹாபாரதத்தில் வந்து சேர்கிறது? 

துவாரகையில் இருந்து பிரபாஷ சேத்திரம் வரும் கிருஷ்ணன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும் கிருஷ்ணனின் பாதத்தை மான் என்று எண்ணும் வேடன்  தூரத்தில் இருந்து ஒரு வேடன்  அம்பால் அடித்தான் அந்த அம்பு கிருஷ்ணனின் மேல் பட்டு கிருஷ்ணனின் முடிவுக்கு காரணமானது.

அருகே வந்த வேடன்  கிருஷ்ணன் அடிபட்டதைப் பார்த்து மனம் பதறி  மன்னிப்புக் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன் மேல் தவறில்லை ராமாவதாரத்தில் நீ வாலி , உன்னை நான் மறைந்திருந்து அடித்தேன் அதைத்தானே இப்போது  நீ செய்திருக்கிறாய் என்று சமாதானப்படுத்தி அனுப்பினான் கிருஷ்ணன். 

கர்ம பலன் என்பதை இப்படி இரண்டையும் இணைத்துக் காட்டுகிறது இதிகாசங்கள். 

வாலியைக் கொன்றபின் வாலிக்கும் இராமனுக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடக்கிறது. 

செருக் களத்து உருத்து எய்யாதே,

வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால் எவ்வியது என்னை…………. ………….. …….?’

வாலியிடமிருந்து கிளம்புகிறது. சரியான இந்தக் கேள்விக்கு முறையாகப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறான் இராமன். இதுவரை பேசாமல் நின்றிருந்த இலக்குவன் அப்போது குறிக்கிடுகிறான்; வாலி பெற்ற வரத்தை நினைவுறுத்தி, அவன் எதிரே இராமன் வந்திருந்தால் பாதி வலிமை வாலிக்குப் போய் விடும் எனக் கருதியே இராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று கூறவில்லை இலக்குவன். மாறாக, முழுமுதல் சரணாகதியான சுக்கிரிவனுக்கு இராமன் அடைக்கலம் தந்துவிட்டான் ; அப்படி இருக்க, வாலியும் அடைக்கலம் என்று கேட்டுவிட்டால் மறுக்கவும் முடியாமல் கொடுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாவானே இராமன் என்றுதான் மறைந்திருந்து தாக்கினான் என்பது இலக்குவன் விளக்கம். 

இன்னும் சில விவாதங்கள் 


1. எப்போது வாலி அடுத்தவன் மனைவியை கவர்ந்தானோ அப்போதே வாலி தர்மத்திலிருந்து வழுவி விட்டான் 

2. மிருகங்களை மறைந்திருந்து கொல்லலாம் என்பது விதி. வாலி குரங்கு எனும் மிருக வகையை சேர்ந்தவன் 

அதை விட இன்னுமொரு முக்கிய சூட்சமும் உண்டு. 
சுக்ரீவன் சூரியனின் மகன். இராமனும் சூரிய வம்சத்தவன். எனில் சுக்ரீவனின் மனைவியும் சூரிய வம்சத்து மருமகளே. ஆக சுக்ரீவனின் மனைவியை மீட்காமல் சீதையை மட்டுமே இராமன் மீட்க முடியாது.  

வாலியை இராமன் மறைந்திருந்து அம்பெய்து வீழ்த்தினான் என்ற பழி அவனுக்கு மாறுவதாக இல்லை.  

இதை தத்துவார்த்துவமாக இப்படி காணலாம். 

நம் மனதிலேயே வாலியும் சுக்ரீவனும் இருக்கிறார்கள்.  
வாலி இந்திரனின் மகன். போகன். அதாவது எதையும் அனுபவிக்க ஆசைப்படுபவன். அவனுக்கு எதாவது கிட்டவில்லை என்றால் அதன் மீதான விருப்பம் இரட்டிப்பாகும். வெறிகொண்டு அடைய ஆசைப்படுவான். ஆக ஆசைதான் வாலி. 

சுக்ரீவன் சூரிய புத்திரன். அடக்கமானவன்.  புத்தி என்பதே சுக்ரீவனாகும். ஆசை புத்தியை ஒரு கட்டத்தில் புறந்தள்ளி அழிக்க நினைக்கும்.  

ஆங்கிலத்தின் will என்ற பதம் வாலியையேக் குறிப்பதாக கொள்ளலாம். ஆசைக்கு நிகரான பலம் பெற்றது எதுவுமே இல்லை.

புத்தி தனக்கான சரியான துணை கிட்டும் வரை ஆசையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இறை சிந்தனை என்னும் இராம நட்பு கிடைத்த பின்னரே புத்திக்கு ஆசையுடன் போரிடும் திடம் கிடைக்கிறது.  

புத்தியால் ஆசை வெல்லப்பட இறை சிந்தனை அதன் பின்னின்று கணை தொடுக்கும். ஆசை அறுக்கப்படும். இறை சிந்தனை ஆசையுடன் நேரிடையாகப் போரிட முடியாது. அது ஞானத்தின் பின் நின்றே போரிட்டு மாய்க்கிறது.  
இப்படி ஒரு தர்மம் வாலிவதத்தில் உண்டு. ஆசையை புத்தியால் வெல்ல முடியாது, ஆசையுடன் புத்தியுடன் போரிடும்பொழுது புத்தியின் பின் மறைந்திருந்து ஆசையை இறைசிந்தனை கொல்லும்.  

ஆக வாலிவதம் என்பதை ஆசையைக் கொன்று புத்தியை அரசுகட்டிலேற்றி அதன் துணையால் எதிரிகளை வெல்லுதலாம்.  

இராமன் ஏன் வாலியுடன் போர்புரியவில்லை? 

இராமன் ஒரு தபஸ்வியாகத்தான் இருக்கிறான். அவன் யாருக்கும் அறைகூவல் விடுக்கக் கூடாது. இராவணனைக் கூட அவன் அறைகூவல் விட்டு அழைக்கவில்லை. தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே தபஸ்விக்கு உண்டு. இராமன் அரசனாக பதினான்கு ஆண்டும் நடக்கவில்லை. 


வாலியை நேருக்கு நேர் சந்தித்து இருந்தால் இராமன் தோற்றிருப்பானா? 

சாத்தியம் இல்லை. காரணம் வாலி கதை கொண்டு அடிப்பானென்றாலும் ஒரு பாணத்தில் உயிரிழப்பான் என்பதே உண்மை. வாலியை நேரடியாக இராமன் ஒரு பாணத்தில் அடித்திருந்தால் வாலியைப் பற்றி இனியும் நாம் பேசிக்கொண்டிருக்கப்போவதில்லை. 

இன்னும் பேசலாமே... 

இன்னும் ஒரு கேள்வி.. 

இராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இந்திரனை வென்றான். 

இந்திரனின் மகனான வாலி இராவணனை வென்றான். 

ஏன் இந்திரஜித் இந்திரனுடன் போரிட்ட போது இந்திரன் வாலியின் உதவியை கேட்கவில்லை? எது முந்தைய போர் எது பிந்தைய போர்?  

 வாலி வதம் ஒரு குற்றம் - ஒரு அம்பு! 

வாலி வதம் மட்டுமே தனியாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் அது குழப்பமாய் இருக்கும். 

இராமாயணத்தில் நான்கு பலவான்கள் உண்டு.

1. வாலி 

2. இராவணன் 

3. கும்பகர்ணன் 

4. அனுமான் 

இதில் முதல் மூவரும் பலத்தை எப்படி உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உதாரணம். அனுமான் பலத்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதன் உதாரணம். 

வாலி தன் பலத்தை எண்ணி கொண்ட கர்வம் அவனை அனைவரிடமும் வலுச்சண்டைக்கு போகவைத்தது. 
இராவணன் தன் பலத்தை எளியவர்களைக் கொடுமைப்படுத்தி அக்கிரமங்களை அரங்கேற்றவே பயன்படுத்தினான்.

கும்பகர்ணன் அண்ணனின் அத்தனை ஆட்டங்களுக்கும் துணை நின்றான். 

வாலியின் மரணத்தின் போது இராமன் இன்னொன்றையும் சொல்கிறான். 

உலகம் முழுதும் இஷ்வாகு குலத்தினரின் ஆட்சி. அந்த குலத்தைச் சேர்ந்த பரதனின் ஆட்சியில் நடக்கும் தவறுகளை தண்டிக்கும் உரிமை பெற்றவனாக இராமன் தன்னைச் சொல்லிக் கொள்கிறான். 

குற்றவாளியை எந்த அதிகாரியும் துவந்த யுத்தத்திற்கு அழைப்பதில்லை. விலங்குகளை மறைந்திருந்தே வேட்டையாடல் உத்தமம் போன்ற பல வாதங்கள் இங்கே இருக்கின்றன  


 கர்ண வதம் 



வாலி வதத்தில் ஒரே ஒரு காரணம். ஒரே ஒரு பாணம். 
அதுவே கர்ணனின் மரணம் எடுத்தால் பல காரணங்கள். பல பாணங்கள். கர்ணன் சூரியனின் மகன் என்றாலும் சூதனாக வளர்கிறான். சூழ்னிலையால் வாலி இராவணனை தோழமை கொண்டது போல துரியோதனனை தோழமை கொள்கிறான் கர்ணன். 

கர்ணனின் கவச குண்டலப் பாதுகாப்பால் கர்ணன் தன்னுடைய எல்லாப் போரையுமே வென்றிருக்க வேண்டும். ஆனால் வென்றானா என்பது முதல் கேள்வி. 

கந்தர்வர்களுடன் தோற்றான், துருபதனிடம் தோற்றான், அர்ச்சுனனிடம் தோற்றான். இதெல்லாம் கவசம் அவன் உடலில் இருந்த காலத்தில்தான். 

ஆக வெற்றி தோல்வி கவசத்தில் இல்லை. குருஷேத்திரப் போருக்கும் அதற்கு முன் நடந்த போர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் குருஷேத்திரப் போர், நீண்ட யுத்தம். மரணிக்கும் வரைப் போராடும் யுத்தமாகும். 

கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தி இருக்கலாம். உலகின் மிக உயர்ந்த மூன்று அஸ்திரங்கள் பிரம்மாஸ்திரம் - நாராயணாஸ்திரம் - பாசுபதாஸ்திரம். அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல வேண்டும் என வெறியுடன் இருந்திருந்தால் பாசுபதாஸ்திரம் உபயோகித்துச் சாய்த்திருக்கலாம். அபிமன்யூ இறந்தவுடனே பாசுபதாஸ்திரம் உபயோகித்திருக்கலாம். ஆனால் அவன் கண்ணனிடம் அவன் தன்னை முற்றிலும் ஒப்படைத்திருந்தான். கண்ணன் சொன்னதை மட்டுமே செய்தான். அதனால் கண்ணனின் தர்மமே அவன் தர்மம் ஆகியது. 

கண்ணனே, கர்ணனுக்கான மரணத் திட்டத்தை வகுக்கிறான். 

கர்ணன் செய்த தவறுகள் அத்தனையும் அவன் வீழ்ச்சியில் பங்கெடுக்கின்றன. அதுதான் தர்மம். 

பரசுராமரின் சாபம், பிராம்மண சாபம், பூமாதேவியின் சாபம் இவை அனைத்தும் பலிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை கண்ணன் தலையில் அல்லவா உள்ளது. அவையெல்லாம் உண்டாக்கினான். 

கர்ணன் என்ன செய்ய ஆசைப்பட்டான்? அர்ச்சுனனை விடத் தான் சிறந்த வில்லாளி என நிரூபிக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதனால்தான் தன் திறமை முழுக்க வெளிப்படும் வரை அவன் சக்தி ஆயுதத்தை உபயோகிக்கவில்லை.  ஆனால் கண்ணன் கடோத்கஜன் மூலம் அதை பறித்துவிட்டார். 

கர்ணனின் ஆசையை நிறைவேற்றவே அவன் ஆயுதம் ஏந்தாக் காலத்தில் அவனைக் கொல்ல உத்தரவிட்டார். அர்ச்சுனனை பாசுபதாஸ்திரம் உபயோகி எனச் சொல்லி இருந்தால் கர்ணனால் என்ன செய்திருக்க முடியும்? கர்ணன் மிகப் பெரிய வில்லாளி என இன்று பேச எதாவது உங்களிடம் மிச்சமிருக்குமா? 

பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் அது அதர்மம். ஆனால் இப்படித்தான் சாகவேண்டும் என்பதைத் தர்மம்தான் தீர்மானிக்கிறது. 

கர்ணனுக்கு மாவீரன் என்ற பட்டத்தைக் கண்ணனே அளித்திருக்கிறான். அவன் அதற்காகத்தான் போரிட்டான். அதை அளிக்க இதை விட உன்னதமான வழி இல்லை. 
வாலி - இராவணனின் நட்பை யாரும் சிலாகிப்பதே இல்லை. ஆனால் கர்ணன் - துரியோதனின் நட்பு புகழப்படுகிறது. 
வாலி போல அறியாமல் மரிக்கவில்லை கர்ணன். அவனின் மரணம் அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது. 

குந்தியிடமும் கண்ணனிடமும் தன் இறப்பை முன்னறிவிக்கிறான் கர்ணன். தான் சேற்றில் சிக்கிக் கொண்டதையே சொல்கிறான். அவனுக்கு வாய்ப்பு இருக்கிறது, துரியோதனனுக்காய் போரிட்டாலும் தர்மன் ஆள்வதே இறுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குமே இருக்கிறது. 

அவனுள்ளத்தில் எத்தனை போராட்டங்கள் இருந்திருக்கும் என்று எண்ணும் போதே தலை சுற்றி கிறுகிறுக்கும்.  
வாலி பலவான். கர்ணன் திறமை மிக்கவன். வாலிக்கு இராமன் தூதனுப்பவில்லை. கர்ணனிடம் தானும் பேசுகிறார். குந்தியையும் பேச வைக்கிறார்.  

வாலியோ கர்ணனோ இராமனும், கிருஷ்ணனும் விதிமீறல் செய்வார்கள் என்பதை நம்பவே இல்லை. 


கர்ணனின் மரணத்தில் பல தர்ம விவாதங்கள் செய்யப்பட்டு அவனின் மரணத்தின் காரணம் அலசப்பட்டது போல வாலியின் மரணமும் பட்டி மன்றக் கருப்பொருளாகவே இருக்கிறது. 


வாலியின் தரப்பில் பேசப்படும் பொழுது அவன் கொல்லப்பட்ட விதம் மட்டுமல்ல, அவன் ஏன் கொல்லப்பட்டான் என்ற காரணமும் விவாதத்திற்கு ஆளாகிறது. 


காரணம் வாலியின் மரணத்திற்குப் பின் தாரையை சுக்ரீவன் சேர்த்துக் கொண்டான் என்பதுதான். 


அது விதவை மறுமணமா என்பதையும் ஆராய்தல் வேண்டும்.  


மகாபாரதத்தின் கர்ணன் வதம் ஒப்பிடத்தகுந்த ஒரு தர்மமே ஆகும். 

வாலியைப் பற்றி நாம் அறிந்ததை விட கர்ணனைப் பற்றி நாம் அறிந்தது மிக அதிகம். 

வாலி அங்கீகாரம் பெற்ற வீரன். கர்ணன் அங்கீகாரத்திற்கு ஏங்கும் வீரன்.

வாலிக்கும் கூடா நட்பு இருந்தது. கர்ணனுக்கும் கூடா நட்பு இருந்தது. 

வாலி சினத்தின் வசப்பட்டு தம்பியின் மனைவியை கவர்ந்தான்.

கர்ணனும் உணர்ச்சியின் வசப்பட்டே தம்பியரின் மனைவியின் மானபங்கத்திற்கு துணையாய் நின்றான்.  

வாலியோ கர்ணனோ வேறுவிதமாய் இருந்திருந்தால் மிகப் பெரிய யுத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். 

கர்ணனின் கவசகுண்டலமோ வாலியின் வரமோ அவர்களைக் காக்கவில்லை. 

இப்படி வாலி-கர்ணன் மத்தியில் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். 


இந்த உலகில் எது மிக அதிகம் நினைக்கப்படும்? 


வள்ளுவர் மிக அழகாக இதை மிக அழகாக சொல்லுவார். 


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும். 

இது அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் வருவது. பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் எப்பொழுதும் விவாதிக்கப்படும். எண்ணப்படும். அது அவ்வளவு எளிதில் மனிதர்களால் மறக்கப்படாது. 

உலகத்தில் பலகதைகள் இந்த ஒரு காரணத்தினாலே மிகவும் புகழ்பெற்றதாக இருக்கின்றன. 

ஆரம்பத்தில் இருந்தே தர்மம் ஜெயித்தது. .தர்மம் ஜெயித்துக் கொண்டே இருக்கிறது என்று இருந்திருந்தால் இந்தக்கதைகள் இரு தலைமுறைகளைத் தாண்டி இருக்குமா என்பது சந்தேகம்தான். 

இறுதியில் தர்மம் ஜெயித்தது என்று சொல்லி இருந்தால் ஒரு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தர்மம் எது என்று ஒரு கேள்வியை வாசகனை நோக்கி வீசி அவனுடைய மனதை ஆராயத் தூண்டும் கர்ணன் மரணம் மற்றும் வாலி மரணம் ஆகிய இரண்டும் மஹாபாரதத்தில் நம்மைக் கட்டி நிறுத்துகின்றன. 

தன்னை விட மிகப்பலவானான ஒருவனை வீழ்த்த வாலிவதம் எப்பொழுதும் உதாரணமாகிப் போகிறது. எதிரியைப் பலமுனை யுத்தத்தில் சிக்க விட்டு பலவீனமாக்கி வெல்வதற்கு கர்ண வதம் உதாரணமாகிப் போகிறது. 
வெற்றியில் பெருமை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்பதை இரண்டுமே உணர்த்தும். 

பலம் மிக்கவர்களின் கேடு என்ற கோணத்தில் இந்த இரு நிகழ்ச்சிகளும் எப்பொழுதும் ஆராயப் பட்டுக் கொண்டே இருக்கும். 


இன்னொரு சுவாரஸ்யமான தொடர்பு... இராமாயணத்தில் இந்திரன் மகனைக் கொல்ல சூரியன் மகனுக்கு உதவுகிறான் இராமன். இந்தக் கணக்கை நேர் செய்ய  மகாபாரதத்தில் சூரியன் மகனைக் கொல்ல இந்திரன் மகனுக்கு உதவுகிறான் கிருஷ்ணன். 

கர்ணன் என்ற ஒரு பாத்திரம் இல்லாவிட்டால் துரியோதனன் இந்த அளவு ஆடியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான். சகுனியையோ தம்பியரையோ நம்பி இவ்வளவு பெரிய இக்கட்டில் அவன் காய் நகர்த்தி இருக்கவே முடியாது. 
கர்ணனின் வீரம், அஸ்திர ஞானம் மற்றும் திறமை பற்றிய பல விளக்கவுரைகள் உண்டு. அவனுடைய வில் விஜயம் என்னும் வில். பரசுராமரின் வில். 

பரசுராமனின் இன்னொரு வில் மிகப் புகழ் பெற்றது, அதன் பெயர் கோதண்டம். விஷ்ணுவின் வில் எனப்படும் அது பரசுராமனால் இராமனுக்கு அளிக்கப்பட்டது. 
பரசுராமர் தன்னுடைய அனைத்து ஆயுதங்களையும் அஸ்திரங்களையும் துரோணருக்குக் கொடுத்தார். 

பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் அவரே குரு. ஆக பரசுராமர் இதன் மூலம் மீண்டும் ஷத்ரிய குல அழிவிற்கு வழி வகுக்கிறார். அவரின் சீடர்கள் இன்றி மகாபாரதமே இல்லை.அவரின் பரசு ஓய்வெடுத்தாலும் ரவுசு தீரலையே!!! 


கண்ணன் கீதையில் கர்மங்கள் தன்னை தீண்டாது என்று அர்ஜூனனுக்கு உரைக்கிறான். அப்படி இருக்கையில் கர்ம வசத்தினால் வேடன் கையால் அடிபட வேண்டிய அவசியம் என்ன? கடந்த பிறவியின் கர்மங்களை இந்த பிறவியில் நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் பரமாத்மாவான கண்ணன் ஏன் வாலி வதத்திற்கு இந்த பிறவியில் பலனை அனுபவிக்க வேண்டும்?  கண்ணன் நினைத்திருந்தால் வேறு வகையில் கூட புறப்பட்டு போயிருக்கலாம் அல்லவா? 


பரசுராமனும் அதே விஷ்ணுவின் அவதாரம்தானே!.. இராவணன் மூவரிடம் தோற்கிறான். 


1. கார்த்தவீர்யார்ச்சுனன் ( இவரும் விஷ்ணுவின் அவதாரம்) 
2. வாலி 
3. இராமன். 

கார்த்தவீர்யார்ச்சுனனை சாய்த்த பரசுராமரே இராவணனைச் சாய்த்திருக்கலாமே?  இன்னொரு அவதாரம் ஏன் அவசியமானது? 

1. பிரம்மன் தூக்கத்தில் தொலைத்த வேதங்களை மீட்க எடுத்தது இமைகளே இல்லா மீன் அவதாரம். 
2. அவசரத்தில் தவறுகள் செய்து பலமிழந்த தேவர்களுக்கு அமிர்தம் கடைய அமைதியே உருவான நிதானமான கூர்மாவதாரம்.
3. பூமியைக் காக்க சேற்றில் புரளும் வராக அவதாரம். 
4. மனித மிருகத்தை அழிக்க மிருக மனிதனாய் நரசிம்மம். 
5. கொடையாய் உயர்ந்தோனை குடையுடன் கூடிய குட்டையனாய் அடக்கியது . 
6. வெறிகொண்ட ஷத்ரியரை அழிக்க ஞானம் கொண்ட முனிகுமாரனாக பரசுராமன். 
7. பெண் பித்தனை அழிக்க ஏகபத்தினி விரதனாய் இராமன். 
8. முள்ளை முள்ளால் எடுப்பது போல சூதை சூதால் அழிக்கும் கண்ணன். 

இப்படி அவனது அனைத்து அவதாரக் காரணங்களிலும் ஆற்றும் காரியத்திற்கேற்ப தன்னை தகுதிபடுத்திக் கொள்கிறான் இறைவன். 

தன்னுடைய எந்த காரியத்திற்கும் ஒரு காரணத்தை இணைத்தே காட்டுகிறான் அவன். இறைவனும் அவனுரைக்கும் தர்மத்திற்கு உட்பட்டவனே என்பதையே இது காட்டும். உலகில் எந்த மதத்திற்கும் இல்லா பெருமை, இறைவன் தானே தர்மப்படி வாழ்ந்து காட்டுவது என்பது இந்து மதத்தில் மட்டுமே உண்டு. உங்களில் நான் இருக்கின்றேன்.. உலகெங்கும் இறைவனே இருக்கிறான் என்ற தத்துவங்கள் இதனால் மட்டுமே நிலைபெறுகின்றன. 
இராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரம் இரண்டுமே முழு அவதாரங்கள் ஆகும். ஆகவே அவ்வவதாரங்களில் உண்டாகும் கர்ம வினைகளை தீர்க்க வேண்டியது அவருக்கும் கடமை ஆகிவிடுகிறது. 

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்பது மாபெரும் தத்துவம். 

துன்பம் வரும் வேளையில் ஒரு நிமிடம் பொறுமையாய் சிந்திப்போம். இத்துன்பம் வரக் காரணம் எதோ கர்ம பலன். ஆக இத்துன்பத்தை அனுபவிப்பதால் ஒரு கெட்ட கர்மம் தொலைகிறது என எண்ணிக் கொள்ள வேண்டும். அப்பொழுது துன்பமே கூட கடவுளாய் தெரியும். சிரிக்க முடியும். 

மற்ற அவதாரங்களுக்கு முழுமையான வாழ்க்கை கிடையாது. பரசுராமருக்கு மரணமில்லை. எனவே இராமாவதாரத்தில் செய்த கர்மங்களை நீக்கிக் கொள்வது கிருஷ்ணனுக்கு சரியானதே. 

இறைவனும் தர்மத்திற்கு கட்டுப்பட்டவனே என்ற எண்ணமே தர்மத்தின் மீதான மதிப்பை வளர்க்கும். 
நமது புராணங்களைப் படித்தால் ஒன்று புரியும். 

"வரம் வாங்காத அசுரனும் இல்லை" 

"சாபம் வாங்காத தேவனும் இல்லை" 


இருந்தும் அசுரர் அழிய  - அகங்காரமும்  

தேவர்கள் வாழ - தவறுணர்ந்து திருந்தலும்  

காரணம் என்பதே புராணங்கள் சொல்லும் கருத்து. 

No comments:

Post a Comment