Friday, October 30, 2015

தாமரைக் குறள்கள் - பகுதி 2




அறிவும் உணர்வும் அளவாய்க் கலந்து
செறியும் சிறப்பே மனம்


மனம் என்பது என்ன? மனம் என்பது உணர்வுகளால் ஆனது. அதே சமயம் மனதிற்கு இன்னொரு பகுதியும் உண்டு. அதற்கு அறிவு என்று பெயர்.

உணர்வகளற்று வெறும் அறிவினால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜடங்களாக இருப்போம்.

அறிவற்று வெறும் உணர்வுகளால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜந்துகள் ஆகி இருப்போம். அறிவும் உணர்வும் சரியான விகிதத்தில் கலந்து இருப்பதே நல்ல மனமாகும்.



கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.


ஒரு சொல்லை சொல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கூறப்போகும் சொல்லை கூறு கூறாக பிரித்து ( உதாரணம் உண்மை = உள் + மெய்)

அதன் கூறாய்ந்து - அது எப்படி சரியாகப் பொருந்துகிறது என ஆராயந்து

(உதாரணம்

கசியும் கண்ணீர்  - இரக்கத்தாலும் கருணையினாலும்

வழியும் கண்ணீர்  - வேதனையினால்

பெருகும் கண்ணீர் - ஆற்றாமையினால்

சொட்டும் கண்ணீர்,

கண்ணிலேயே அடைந்து நிறைந்து கண்ணீரணை உடைத்து வெள்ளமாய் ஓடும் கண்ணீர்

என ஒவ்வொரு வகையான கண்ணீருக்கும் ஒவ்வொரு குணமிருக்கு. இல்லையா??

பாருங்க, இதைப் படிச்சிட்டு உங்க கண்ணில ஆனந்தக் கண்ணீர்..ஊறுது )


கூறுடனே - அழகுறப் பொருத்தி, எதுகை மோனை சந்த நயம் இத்யாதி அலங்காரங்களுடன் பொருத்தி

கூராக்கி - கூர்மையானதாக்கி

கூறு - சொல்.



போரே புகுவோரே புண்ணின்றி மீளாரே
ஆரே எனினும் அவர்.


தருமன் பக்கம் தர்மம் இருந்தது.

அவன் பக்கம் கடவுளே இருந்தார்.

ஆயினும் போர் என வந்தபின் அபிமன்யூ, கடோத்கஜன், இளம் பஞ்ச பாண்டவர், விராடன், துருபதன், த்ருஷ்டதுய்மன், சிகண்டி இப்படிப் பலப்பல வீராதி வீரர்களை இழந்தான். போரின் இயல்பு அப்படி.

சண்டை என்று வந்து விட்டால் சண்டையில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இழப்புகள் வரும். அவர் யாராய் இருந்தாலும் சரி அவருக்கு யார் துணை இருந்தாலும் சரி காயம் உறுதி.

எனவே இயன்றவரை போரைத் தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment