Friday, October 2, 2015

குற்றம் கடிதல் - கதை விமர்சனம்


இயக்குனர் பிரம்மா.ஜி
தயாரிப்பாளர் ஜெ.சதீஷ் குமார், கிறிஸ்டி சிலுவப்பன்
நடிப்பு சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா
இசையமைப்பு சங்கர் ரெங்கராஜன்
ஒளிப்பதிவு மணிகண்டன் D.F.Tech
படத்தொகுப்பு சி. எஸ். பிரேம்





தலைப்பை நன்கு கவனிக்கவும். இது திரைப்பட விமர்சனத்தின் ஒரு பகுதி மட்டுமே. நடிப்பு,
இசை, பாடல்கள் என எதையும் நான் விமர்சிக்க போவதில்லை.

குற்றம் கடிதல் என்பதன் பொருள் - தண்டனை அளித்தல், திருத்துதல் என எதுவும் இல்லை.
குற்றம் ஒன்று நடக்குமானால் எப்படி அதை எதிர்கொண்டு குற்றத்தை நீக்க வேண்டும் என்பதே
தவிர குற்றவாளியை தண்டித்தல் அல்ல.


ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு கார் ஒருவரை இடித்து விட்டது. உடனே செய்ய வேண்டியது என்ன?


இடித்தவரை அடிப்பது அல்ல. அடிபட்டவரைக் காப்பாற்றுவது, சம்பவத்தால்
பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பது.


அதை சம்பவத்திற்குக் காரணமானவரே செய்து விட்டால் தண்டனைகளே
தேவையில்லை.
மன்னிப்பே அங்கே தண்டனையாகிறது. குற்றம் கடிதலின்
முழுக் கதைக்கும் இதுவே
மையக்கருவாக அமைகிறது.


அந்தப் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தது, ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒரு மாணவிக்கு முத்தம்

கொடுத்து ஹேப்பி பர்த்டே சொல்கிறான்.


அது தப்பில்லையா என்று ஆசிரியை கேட்க உங்களுக்கும் கூட முத்தம் தருவேன் என்கிறான்.


அந்த ஆசிரியை அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை சுருக்கமாக அந்தச் சிறுவனின் 
தாயாக அதை அணுகி இருக்க வேண்டும் என்று சொல்கிறார் இயக்குனர்.


இங்கு மட்டும் சிறு திருத்தம் உண்டு. அதைக் கடைசியில் சொல்கிறேன்.


அந்த ஆசிரியை அவனை உணர்ச்சி மேலீட்டால் ஒரு அடி அடித்து விட அவன் சுருண்டு
விழுகிறான். மூக்கில் ரத்தம்.மயக்கமாகிறான்.


இந்த ஒரு சம்பவத்தை யார் யார் எப்படி எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் கதை.


ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்று பலரும்
விமர்சிக்கிறார்கள்.


தவறு.


அரசாங்கமும், நீதிமன்றங்களும் ஊடகங்களும் முக்கியமாக  கவனிக்க வேண்டிய படம்.


ஒரு சம்பவம் நடந்தால்



பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்.

சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள்  பொறுப்பேற்க வேண்டும்.

யார் தவறு என்பதை விட என்ன தவறு என்பது பற்றிய தெளிவைப் பெற வேண்டும்.
எது தவறு என்று அறிந்த பின் எது சரி என்ற ஆராய்ட்சி இருக்க வேண்டும். அந்தப் படிப்பினை
அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.



முக்கியமாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியவர்கள் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட
வேண்டும் என்று போராடும் போராளிகள். நீதிபதிகள், போலீஸ், வக்கீல்கள், மற்றும்
ஊடகவியலார்.


தோழர் பாத்திரத்தின் மூலம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எப்படி அணுக வேண்டும்
என்று அழகாகக் காட்டி இருக்கிறார் இயக்குனர்.


அப்படி எல்லா சம்பவங்களையும் அணுகினோம் ஆனால் சிறு தவறுகள் பெரிய குற்றவாளிகளை
உருவாக்காது என்பதை உறுதிபடக் கூறலாம்.


அந்தத் தாயின் மன்னிப்பும், அந்தத் தோழரின் மன்னிப்புமே மிகச் சிறந்த தண்டனைகளாக
அமைந்து விடுகின்றன.


இப்படித்தான் குற்றங்கள் அணுகப் பட வேண்டும் என்பது குற்ற தண்டனைச் சட்டத்தின்
அடிப்படை வரையறையாக இப்படம் அமைந்திருக்கிறது.



நான் சொல்லும் திருத்தம்


அந்த ஆசிரியைக்கு தோழர் சொல்கிறார், அந்தச் சிறுவனை  நீங்கள் அவனின் தாயாக அணுகி
இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கும் தாயாக அந்த டீச்சர் இருந்திருக்க
வேண்டும். முதலில் அவளை ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். அவன் உன் சகோதரன்தான்
தவறில்லை. என அமைதியாக்கி இருக்க வேண்டும். சிறுவனை தனியே அழைத்து அறிவுரை
சொல்ல வேண்டும்


ஊடக ஆர்ப்பாட்டங்கள், போலீஸ் நடவடிக்கைகள், என எதையும் பெரிதாக காட்டாமல்
கதையில் எது முக்கியமோ அதைக் காட்டியிருக்கார் பிரம்மன். மிகச் சரியான அணுகுமுறை,


குற்றம் கடிதல்


ஊடகம், நீதித்துறை, மக்கள் என அனைவரையுமே சரியாகவே கடிந்திருக்கிறது.


நண்பர் தியாகுவின் பாராட்டு


அன்புள்ள நண்பர்களுக்கு,

குற்றம் கடிதல்......பற்றிய கற்றுகொள்ள வேண்டிய கடிதம்.

இது யதார்த்தமான திரைபடங்கள் வரிசையில் ஒன்று........

கற்றது தமிழ்......சூது கவ்வும்.....ரௌத்திரம்.......மூடர் கூடம்......சதுரங்க வேட்டை......கோலி சோடா......காக்கா முட்டை.......இப்படி silent killer வகை படங்களில் ஒன்று.......

ஆனால்......சற்று புதுமை......ஒரே ஒரு நடிகர்.....அதுவும் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்தவர் மட்டுமே...நமக்கு தெரியும்.....கிட்டதிட்ட அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களும்...ஆஹா...ஏதோ அவர்களிடம் போய் அவர்கள் வாழும் வாழ்க்கையை படம் பிடித்தது மாதிரியான உணர்வு..........

ஒரு....செயல்...தவறு அல்லது...குற்றம் என்பதைவிட....அதை உணர்சசிவசப்பட்டு செய்துவிட்டு...அதற்கு பிறகு ஏற்படும் குற்ற உணர்ச்சி இருக்கிறதே..... இதில் விவரிக்கபட்டிருக்கிறது.......

உயிர்களை படைப்பது ப்ரம்மா எண்பார்கள்.....ஆம்....இந்த அரிய படத்தை படைத்த இயக்குனரின் பெயரும் ப்ரம்மா தான்

காதல்,..திருமணம், மதம், கடவுள் நம்பிக்கை, பாலியல் கல்வி, ஏழ்மை, உழைப்பு, மனிதநேயம், நட்பு, ஒற்றுமை, கோபம், வெறுப்பு, சிறுவர் குறும்பு மற்றும் புத்திசாலிதனம்,    சமுக சிந்தனை, புரட்சி, மருத்துவம், மென்பொருள்,  ஊடகம், முக்கியமாக கூத்து நாடக கலை......இப்படி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும்......அழகாக கோடிட்டு காட்டிய காவியம்......

இந்த படத்தை பார்க்க மேலும் தூண்டிய தாமரைக்கு நன்றி

இந்த படத்தை.....MCE89....குழுமத்தில் உள்ள அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
தியாகு.

No comments:

Post a Comment