Friday, October 30, 2015

படிப்பது எப்படி?



படிக்கறதெல்லாம் அப்ப ஞாபகம் இருந்திச்சு இப்ப மறந்திருச்சி.

கேள்வியைக் கொஞ்சம் டிவிஸ்ட் பண்ணிட்டாம்பா. குழம்பிட்டேன்.

இது எங்கியோ கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் சரியா ஞாபகமில்ல.

இப்படி புலம்புபவர்கள் ஆயிரம் பேர் உண்டு, ஆனால் சிலர் நீங்க எதைச் சொன்னாலும் அதைப் பற்றி 4 மணி நேரம் சொற்பொழிவு செய்வார்கள்.

இதை அனைவருமே எளிதில் சாத்தியமாக்கலாம். ஆனால் அதற்குத் தேவை பயிற்சி செய்யும் மனம்.

கஜினி படம் பார்த்தவர்களுக்கு தெரியும். மூளையில் இரண்டு விதமான நினைவகங்கள் உண்டு.

1. ஷார்ட் டெர்ம் மெமரி
2. லாங்க் டெர்ம் மெமரி

நாம் இப்பொழுது படிப்பவை நினைப்பவை எல்லாமே ஷார்ட் டெர்ம் மெமரியில்தான் பதிவாகும்.

உதாரணமாக  உங்களிடம் செப்டெம்பர் 30, 2015 மதியம் என்ன லஞ்ச் சாப்பிட்டீங்க என்றால் திருதிருவென முழிப்பீர்கள். காரணம் அது தற்காலிக நினைவகத்தில் இருந்தது. அதேசமயம் உங்கள் பிறந்த நாள் டின்னர் என்ன என்று கேட்டால்,  ஞாபகம் இருக்க சாத்தியம் இருக்கிறது, அதை நீங்கள் கொண்டாடி இருந்தால்...

அதையே இன்னும் 5 வருடம் கழித்து கேட்டால் மறந்திருக்க வாய்ப்புண்டு.

மூளையில் நீண்ட கால நினைவகத்தில் ஒரு தகவல் இடம் பெற வேண்டுமென்றால் அதற்கு மூன்று விஷயங்கள் முக்கியம்.

1. அதற்கென்று ஒரு தொடுப்பு இருக்க வேண்டும். உதாரணமாக ஆம்பூர் என்றவுடன் பிரியாணி ஞாபகம் வரும். விஞ்ஞானி என்றால் ஐன்ஸ்டீன் ஞாபகம் வருவார், அதற்கென TAG அதாவது குறிப்பிணைப்பு இருக்க வேண்டும். பிறந்த நாளைக்கு ஹோட்டல் உமர்கோட்டில் பார்ட்டி. இப்படி எதோ ஒன்று. உதாரணமாக என் அண்ணன் இறந்தது நவம்பர் 4, 2006. இதற்கான தொடுப்புகள் : அண்ணனின் பிறந்த நாள் நவம்பர் 11. அதற்கு ஒரு வாரம் முன்பு இறந்தார். 2007 ல் நாங்கள் புதுவீடு கிரஹப்பிரவேசம் செய்தோம் அதற்கு முதலாமாண்டு இறந்தார். இப்படி இணைப்புகள் உண்டு. இப்படி ஒவ்வொன்றையும் முதலே தெரிந்த ஒன்றோடு இணைத்து டேக் செய்து வைக்கவேண்டும்.

2. அதைப் பற்றி பலமுறை எண்ணியோ, பேசியோ இருக்க வேண்டும்.. பாபநாசம் படத்தில் கமல் 2 ஆம் தேதியை அனைவர் மனதிலும் பதிய வைப்பது போல் பலமுறை அதை பரிச்சயப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது அதைப் பற்றி பலரிடம் பலமுறை பேசவேண்டும். நாம் விரும்பும் நடிகர்களின் படவரிசை பாடல் வரிகள் மனதில் பதிவது இப்படித்தான். கிரிக்கெட்டின் புள்ளி விவரங்கள் மனதில் பதிவது இப்படித்தான். மாணவர்கள் முதன் முறை TAG செய்து படித்த பின் பாடங்களை தங்களுக்குள் குழு விவாதம் செய்வதால் மனதில் ஆழமாக பதியும். வெகு சிலரால் மட்டும் தனக்குள்ளேயே விவாதம் செய்து கொள்ள இயலும். அதற்கான வழிமுறை கீழே

3. கீழே உள்ள படத்தை கவனியுங்கள்




இதுதான் நமது சர்க்யூட் டயாக்ராம். நமக்கு ஐந்து வகை உணர்வுகள் உண்டு. பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடு உணர்வு என ஐந்து உணர்வுகள். இதில் பார்த்தல், கேட்டல் மூலமே நாம் அதிகம் கற்கிறோம்.

ஒரு தகவலைப் படித்த உடனே, கண்ணை மூடி அதை காட்சியாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும். புரிந்திருந்தால் காட்சியாக்குவது எளிது. உதாரணமாக சூரியகிரஹணத்தில் சூரியனை நிலா மறைக்கிறது. இதை நம்மால் கற்பனை செய்ய முடியும். நிலா வட்டம், சூரியன் வட்டம், மஞ்சள் வட்டத்தை கருப்பு வட்டம் மறைக்கிறது.

இதை இரண்டு மூன்று முறை பதிவு செய்துவிட்டால் மேலே படிக்கும் பொழுது எளிதாக இருக்கும். அடுத்து பகுதி சூரிய கிரகணம்..

பகுதி சூரிய கிரகணம் என்றால் சூரியனில் ஒரு பகுதி மட்டுமே மறையும். ஒரு கையை இன்னொரு கையால் மறைத்தால் முழுதாக மறையும். ஆனால் இரண்டு கைகளும் ஒரே மையம் இல்லாமல் சற்று விலகி இருந்தால்? உடனே நமக்கு மாஸ்டர் கார்ட் சிம்பள் ஞாபகம் வரும். ஒரு மஞ்சள் வட்டம், ஒரு கருப்பு வட்டம். கொஞ்சம் மஞ்சள்  வட்டம் கருப்பு வட்டத்தால் மறைக்கப்பட்டது புரியும்.

அடுத்து கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால்? கங்கணம் என்றால் வளையல். அதாவது மஞ்சள் வட்டம் பெரிது.  கருப்புவட்டம் சிறியது. அப்படி இருக்கும் பொழுது கருப்பு வட்டத்தால் மஞ்சள் வட்டத்தை மறைத்தால் மஞ்சள் வளையம் தெரியும். அதேதான். அதான் கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால் வளையல். இப்போது கங்கண சூரிய கிரகணம் எப்போ வரும்னு பார்ப்போம். சூரியனின் மையமும் சந்திரனின் மையமும் நேர் கோட்டில் இருக்கணும். சூரியம் பெரிதாக இருக்கணும். எப்போ சூரியன் பெரியதா இருக்கும்? பூமி நீள்வட்டப் பாதையில் சுத்தி வருது. அதில் ஒரு பக்கப் பாதி சூரியனுக்கு அருகே இருக்கும். ஜனவரி 7 என்கிறது என் நினைவடுக்கு. அதே போல் சந்திரன் சின்னதாக இருக்கணும். அதாவது சந்திரன் பூமியில் இருந்து நீள்வட்டப்பாதையில் தொலைவில் இருக்கணும். சந்திரன் 27 நாட்களுக்கு ஒரு முறை அருகில் வரும். அமாவாசையோ 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அதனால் எதோ ஒரு அமாவாசை அன்றுதான் இந்த நிகழ்வு  நடக்க வாய்ப்பிருக்கு.

இந்த விரிவான அலசலில் தெரியும் இன்னொரு சேதி, குளிர்காலத்தில் அதாவது கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் மட்டுமே கங்கண சூரிய கிரகணம் சாத்தியம்.

இப்படி முழுமையாக படித்ததை மனதிற்குள் உங்களால் அப்படியே ஒரு மஞ்சள் வட்டம், கருப்பு வட்டம் கொண்டு காட்சிப் படுத்திக் கொள்ள முடிய வேண்டும்.

படத்தில் பாருங்கள், சிவப்பு வண்ணமிட்ட பாதைகள் தெரியும், சூரிய கிரகணம் பற்றி நான் விவரித்ததை வரிக்கு வரி மனதில் நினைத்தீர்கள் என்றால் அது அந்த சிவப்பு பாதையில் பயணிப்பதை குறிக்கும்.

சூரியன் மஞ்சள் உருண்டை. சந்திரன் கருப்பு உருண்டை, முழு கிரகணம். மஞ்சளை விட கருப்பு பெரிசு அல்லது சமம். ஒரே மையம். பகுதி கிரகணம் மையங்கள் தள்ளி உள்ளன. கங்கண கிரகணம். கறுப்பு வட்டம் சிறிது. வளையல். இப்படி மனதில் பிட்டு பிட்டாக முழு விவரங்களும் தொடுப்புகளுடன் நீண்ட கால நினைவகத்திற்கு செல்ல ஆரம்பிக்கும்.

அடுத்த நாள் இதை இன்னொருவனுக்கு சொல்லித் தரலாம். அல்லது விவாதிக்கலாம். இரண்டு வட்டங்களைக் கொண்டு கிரகணத்தின் பல நிலைகளை மனதில் காணலாம்.

இதை மட்டும் சரியாக செய்துவிட்டால் சூரிய கிரகணம் பற்றி   நினைத்தாலே அருவியாக மனதில் இருந்து தகவல்கள் கொட்டும். இந்த சூரிய கிரகண வகைகளை மட்டும் உங்களால் சரியா புரிந்து கொள்ள முடிந்தால் அவ்வளவுதாங்க படிப்பு. படிக்கும் போது மனதில் அது பற்றிய உருவங்களைப் பார்க்கணும்.

இதில் கடைசியா மன உணர்வு என்று ஒரு டப்பா இருக்கு பாத்தீங்களா, அது படிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தால் தூண்டப்படுவது. நீங்கள் மேற்கண்ட முறையில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அது ஆக்டிவேட் ஆகும். ஒரு விஷயத்தைப் படிக்கும் பொழுது அது சம்பந்தமான பல தகவல்களை அது உங்களுக்குத் தயாராக எடுத்துத் தரும்.

கபில் என்றால் 434 என்ற எண்ணையும், அவுட் ஸ்விங்கரையும் விவியன் ரிச்சர்ட்ஸை அவுட்டாக்கியதும் நினைவுக்கு வரும். அதை இந்த உணர்வு கொண்டு வரும். இந்த உணர்வு டப்பா வேலை செய்ய ஆரம்பித்தால் அதன் பின்னால் படிப்பது மிக எளிதாகி விடும். எதை படித்தாலும் புரிய ஆரம்பிக்கும். மற்றவர்கள் சாதாரணமாக வாசிக்கும் வேகத்தில் நாம் ஆழமாக வாசிக்க ஆரம்பித்து விடுவோம்.

No comments:

Post a Comment