Thursday, January 7, 2010

தாமரை பதில்கள் - 41 to 48

கேள்வி எண் : 41
கேட்டவர் : தீபன்


”பிரபஞ்ச வெடிப்பு” பற்றி அண்மைக்காலமாக சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கிறதே. அது என்ன என்பது பற்றி விளக்குங்களேன்.


அது என்ன என்பதை அறிவியலார் இங்கே விளக்கமாய் தந்திருக்கிறார்கள்


இதனால் என்ன பயன்? 

மனிதனின் அறிவுப் பசிக்குத் தீனி. மனிதனின் எல்லாவற்றையும் தான் படைக்கவேண்டும் என்ற ஆசையை நோக்கி மெல்ல நகரும் பயணம். இது கூட ஒரு சின்ன ஒப்பு நோக்குச் சோதனைதானே தவிர இது வெற்றிகரமாக நடந்தால் இப்படித்தான் அண்டம் தோன்றியது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சில ஆதாரங்கள் அவ்வளவுதான்.

என்ன பயம்?

நிதானமிழந்த சக்தித் துகள்கள் கட்டுப்படுத்த இயலாமல் அவை மற்ற அணுக்களை ஸ்திரமில்லாதததாக மாற்றிவிட்டால் என அடிவயிற்றில் ஒரு பட்டாம் பூச்சி... சொந்த செலவில் சூனியமா என்று..

தேவையா?

முடிந்த வரை அனைத்தையும் அறிந்து கொள் என்பதைப் போலத்தான் நமக்கு அறிவு கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இது போன்றச் சோதனைகள் தேவை. அதே சமயம் ஒரு முழு அளவிலான சோதனை என்னும் பொழுது அதை அயல் கிரகத்தில் செய்வது வசதி.. சின்னச் சோதனைகளை இங்கு செய்யலாம். இதன் முடிவின் அடிப்படையில் சற்றுப் பெரிதாக சந்திரனில் செய்யலாம்.


=======================================================



கேள்வி எண் : 42
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


நாலுபேரு மதிக்கிற மாதிரி நடந்துக்கோ.. நாலுபேருக்கு தெரிஞ்சா என்னவாகும்.. நாலுபேரும் நாலுவிதமா பேசுவாங்க.. போகும்போது நாலுபேருக்காவது நல்லவனா இருந்துட்டு போகனும்.. இப்படி எதுக்கெடுத்தாலும் நாலுபேரு நாலுபேருன்னு சொல்லுறாங்களே.. யாரந்த நாலுபேரு..??


பிறக்கும் போது கிடைக்கும் இரத்த சொந்தம்
வளரும் போது கிடைக்கும் நண்பர்கள்
வாழும் பொழுது கிடைக்கும் சமுதாய சொந்தங்கள்
விட்டுச் செல்லப் போகிற புதிய தலைமுறை...

இவைகள் எல்லாம் அடங்கியதுதான் நால்வரணி...

நாலு என்பது மறைமுகமாக உலகெலாம் என்பதைக் குறிப்பது ஆகும். நான்கு திசையிலுமிருப்போர் என்பதைக் குறிக்கும் பதமாகும்.

நாலும் தெரிந்தவன் என்று எல்லாம் தெரிந்தவனைச் சொல்கிறோம். நாலும் நடக்கலாம் என்றால் எதுவும் நடக்கலாம் என்று பொருள்..


 கேள்வி எண் : 43
கேட்டவர் : விக்ரம்


கோழி முதல்ல வந்திச்சா, முட்டை முதல்ல வந்திச்சா

முட்டைக்கு கால்கள் கிடையாது. அதனால் பறக்கவும் முடியாது. ஆகவே கோழிதான் முதலில் வந்திருக்க முடியும்.. (ஓட்டப் பந்தயத்தில தானே கேட்டீங்க?). இற(ர)க்கத்தில மட்டும் முட்டையை முதல்ல விடலாம் கோழி


=======================================================

 கேள்வி எண் : 44
கேட்டவர் : ரவுத்திரன்


"இதுவரை நான் பொய் சொன்னதில்லை.. ஆனால் எவருடனும் உண்மையாய் பழகியதிலை" இப்படி ஒருவர் சொன்னார். அவர் என்ன சொல்கிறார்?

உண்மைக்கும் விசுவாசத்திற்கும் (நேர்மைக்கும்) உள்ள வித்தியாசத்தைச் சொல்கிறார்.


=======================================================

கேள்வி எண் : 45
கேட்டவர் : தீபன்


”ரிஷிப் பிண்டம் இராத் தங்காது” என்பதற்கு என்ன அர்த்தம்?



பிண்டம் என்பதற்கு இரு அர்த்தங்கள் உண்டு. 

1. கரு
2. இறந்தோருக்குக் கொடுக்கும் பிண்டம் (நீத்தார் கடன்)

ரிஷிகளால் உருவாகும் கர்ப்பம் 10 மாதங்கள் இருப்பதில்லை. உடனடியாய் குழந்தையாகும் என்பது மக்களால் இதுவரை பொதுவாக அறியப்படும் பொருள். இது மகாபாரதத்தில் காணப்படுவது ஆகும்.

பராசரருக்கு மச்சகந்தியின் மூலம் வியாசரும், வியாசர் மூலம் பாண்டு, த்ருதிராஷ்டிரன், விதுரன் போன்றோரும், பரத்வாஜருக்கு துரோணரும், துரோணருக்கு அசுவத்தாமனும், விசுவாமித்ரனுக்கு சகுந்தலையும், குந்தி புத்திரர் நால்வரும், நகுல சகாதேவரும் இப்படி ஒரு பொழுது கர்ப்பத்தில் பிறந்தவரே.

இவர்களின் பிறப்பினால் இவர்களின் தாய்மாரின் கன்னித்தன்மை பாதிக்கப்படவில்லை என்பதையும் அறிதல் வேண்டும். புராணங்களை நம்புவோரை விட புராணங்களை எதிர்ப்பவர்களாலேயே இது அதிகம் உபயோகப்படுத்தப் படுகிறது.. கிண்டலாக.


=======================================================


கேள்வி எண் : 46
கேட்டவர் : பாரதி


உங்கள் பார்வையில் அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தலில், தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறப்போகும் கட்சி எது?


அடுத்து நடைபெற இருப்பது பாராளுமன்றத் தேர்தல்.. அந்த நோக்கில் பார்க்கும் பொழுது மக்கள் பார்க்கக் கூடிய பார்வை காங்கிரஸா அல்லது எதிர்கட்சியா எனத்தான். காங்கிரஸ் சிறிது எதிர்ப்பைச் சம்பாதித்து இருப்பதால் ஓட்டு அதற்கு எதிராக விழும். அப்படிப் பார்க்கையில் அ.தி.மு,க அதிக இடங்களில் வெல்லும்..( 15 - 20 தொகுதிகள்) 


=======================================================



 கேள்வி எண் : 47
கேட்டவர் : பாரதி


உங்களை வியக்க வைத்த குப்பை மின்னஞ்சல் ஏதாவது இருக்கிறதா?



இதை 100 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும். அழித்தீர்களானால் உங்களுக்கு வேலைபோகும்.. கை போகும், கால் போகும் என்னும் மின்னஞ்சல் குப்பைகள் தான். இவை யார் யார் நட்பைக் கூட தம் சுய நலத்திற்கு காவு கொடுக்க தயாராய் இருக்கின்றனர் எனக் காட்டிக் கொடுத்து விடுகிறதே. (விஷயமுள்ளது குப்பைக்குப் போவதில்லை. விஷமுள்ளதுதான்)

நான் ரசித்த சில மின்னஞ்சல் குப்பைகள் நம் மன்றத்தில் ரத்தக் களரியாக்கப்பட்ட நகைச்சுவைகளாக என்னால் பதில் அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.



=======================================================

கேள்வி எண் : 48
கேட்டவர் : பென்ஸ்



ஆண்கள் சட்டையில் "பட்டன்" வலப்புறமிருது இடப்புறமும், பெண்கள் சட்டையில் "பட்டன்" இடப்புறம் இருந்து வலப்புறமும் மட்டுவதற்க்கு என்ன காரணம் ..???


ஆண்களை முதலில் கவனிப்போம்.. வலக்கை பழக்கமுள்ளவர்கள் அதிகம்.ஆண்களைப் பொருத்தவரை எல்லாப் பொருள்களையும், வலக்கையால் உபயோகிக்கிற மாதிரி தான் வைத்துக் கொண்டிருப்போம். வாள் இடப்பக்க இடுப்பில். துப்பாக்கி இடப்பக்க இடுப்பில்,, பர்ஸ் வலப்புற பின் பாக்கெட்.. சாவி வலப்புற பாக்கெட்.. சட்டைப் பாக்கெட் இடப்புறம்.. அதே போல் அவசர அவசரமாய் சட்டையை மாட்டிக் கொள்ள வசதியாக பொத்தான்கள் வலப்புறம்....

பெண்களுக்கு அந்தக் காலத்தில் இப்படி அவசரங்கள் இல்லை, சட்டையை மாட்டிவிடக் கூட ஒரு பணியாள். அந்தப் பணியாளுக்கு வலப்புறமாய் பொத்தான் வைப்பதால் பெண்களுக்கு இடப்புறம்.

இதனால் இன்றும் பயன் இருக்கிறது. இப்படி வசதிக் குறைவாக பொத்தான் வைத்துவிட்டு பெண் உடை மாற்ற அதிக நேரம் பிடிக்கிறது என்று கூப்பாடு போட்டு, நகைச்சுவைகள் எழுதி ஆண்கள் தங்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். 



ஒரு பெண் தன் சட்டையைத் தானே கழற்றி மாட்டுகிறாள் என்றால் அவள் தன் மதிப்பை இழந்துவிட்டாள் என்று அர்த்தமாம்.





No comments:

Post a Comment