Friday, January 8, 2010

தாமரை பதில்கள் - 63 to 70

கேள்வி எண் 63:
கேட்டவர் : சிவாஜி


திரையில்லாமல் வெற்றுவெளியில் காட்சிகளை தெரியவைக்கிறார்களே அது என்ன தொழில்நுட்பம்..?

தொழில் சம்பந்தப் பட்டக் கேள்வின்னா இதைப் படிங்க..




நுட்பமான கேள்வின்னா என் பதில் அரசியல். தேர்தல் பிரச்சாரங்களைத் தானே கேட்டீங்க?




=======================================================



கேள்வி எண் 64:
கேட்டவர் : அன்புரசிகன்


ஒரு காலத்தில் இந்தியாவில் ஆட்சி மதமாக இருந்த பௌத்தம் (அசோகச்சக்கரவர்த்தி இறுதியாக பௌத்தமதம் தழுவியதாயின்) இன்று இல்லை என்ற அளவில் இந்தியாவில் உள்ளது. இந்தியாவிலிருந்து கொணரப்பட்ட இதே பௌத்தமதம் (மிகிந்த தேரர் சங்கமித்தை ஆகியோரால் - அசோகனால் அனுப்பப்பட்ட) இலங்கையில் இன்று ஆட்சி மதம் என்ற நிலைக்கு வந்திருக்கிறதே.. காரணம் என்ன? (நான் ஏழாவது படிக்கும் போது இதற்கு ஒருமைப்பாடு காரணம் என்று வரலாற்று பாடத்தில் கற்பித்தார்கள்... அப்படியாயின் அது என்ன???)


இந்தியாவைப் பற்றி நன்குத் தெரியும் என்பதால் இங்கு புத்தமதம் ஏன் இளைத்துப் போனது எனச் சொல்லமுடியும். மதங்களின் விஷயத்தில் இந்தியாவிற்குச் தனிச் சிறப்பு உண்டு. இங்கு நிலவிய மதங்களில் கேள்வி கேட்கும் உரிமை, சந்தேகப்படும் உரிமை ஆராயும் உரிமை, உண்மைத் தேடல், ஒப்புக் கொள்ளாமை ஆகியவை அடிப்படையிலேயே வழங்கப்பட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன. 

எனவே தேடல் என்ற பெயரில் பழையன கழிதலும் புதிய புகுதலும் இந்தியாவில் எப்பொழுதுமே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகவேதான் இந்தியாவில் மதங்கள் இன்னும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து அழிந்து கொண்டு இருக்கின்றன. 

சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற பிறந்த மதங்களும் சரி, இஸ்லாம், கிறித்துவம், யூதம் போன்ற வந்த மதங்களாயினும் சரி, இந்தச் சுதந்திரத்தை இந்தியாவில் சற்றாவது அளித்தே ஆக வேண்டும். 

ஹீனயானம் மஹாயானம் ஆனதை இந்தியா அனுமதித்தது. மஹாவீரர் சமணத்தைத் தோற்றுவித்தாலும் அவர் 27 ஆம் தீர்த்தங்கரர் என மாற இந்தியா அனுமதித்தது. பலப்பல சிறுதெய்வங்கள் உருவாவதை இந்தியா அனுமதித்தது. ஒரே தெய்வம் என்றாலும் கோட்பாடு வெவ்வேறு என்றுக் கருதும் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கூட சந்தேகங்களை எழுப்பித் தெளிவு பெற இந்தியா அனுமதிக்கிறது. எனவே இந்தியாவின் பெரும்பான்மை மதம் என்பது எப்பொழுதுமே மாற்றத்திற்கு உரியது.

அப்படி இருக்க புத்த மதம் இந்தியாவில் சிறுக்கக் காரணம் முனைவோர் குறைந்ததால்தான் எனச் சொல்லலாம். ஏனென்றால் இந்திய புத்தமதத்தினர், மதத்தைப் பின்பற்றுகின்றனரே தவிர பரப்பும் எண்ணம் குறைந்தவர்கள். புத்த மதத்தைப் பற்றி இப்பொழுது இந்தியாவில் கேள்விப்படுவதெல்லாம், திபெத், இலங்கை, சீனா, ஜப்பான் செய்திகளும், சில வகுப்பினர் தீண்டாமைக் கொடுமைக்காக புத்த மதத்திற்கு மாறும் செய்தியையும் தான்.

இன்னொரு காரணம் இந்துமதம். எல்லா மதங்களிலும் நல்லனவற்றைத் தன்னுள் வாங்கிக் கொள்வது இதன் வழக்கம். புத்த மதத்தின் கொல்லாமை, ஆசைகளைத் துறத்தில் போன்ற நல்ல கொள்கைகளை எல்லாம் இந்துமதமும் ஏற்கனவே தன்னுள் கொண்டோ அல்லது சுவீகரித்துக் கொண்டோ விட்டது. 

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதில் வழி என்பது மதம். வாத விவாதங்கள், போட்டிப் பொறாமைகள் பல்வேறு அரசகுலங்களின் ஆதரவு என இந்தியாவில் பல்முனைப் போட்டி நிலவியதால் மதங்கள் வளர்ந்தன தேய்ந்தன. ஆதரவிழந்த மதங்கள் அழிந்தன.

இலங்கையில் மட்டுமல்ல, மற்றும் பல இடங்களில் மதங்கள் அரசில் பங்கு வகுப்பதால், மக்களிடம் நிலைக்கின்றன. அரசு ஆதரவு என்பது முழுமை பெறாத மதங்கள் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள உதவுகின்றது,

ஒற்றுமை என்பது இன்னொரு காரணியாக இருக்கலாம். அதாவது அரசகுலங்கள் அரசியல்வாதிகளின்..



=======================================================


கேள்வி எண் 65:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


தமிழகத்தின் அண்டைமாநிலங்களாகட்டும் இலங்கையிலாகட்டும் தமிழர்களின் உரிமையை மறுப்பதில் எதிரணியில் இருப்பவர்கள் தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து ஓரணியில் செயல்படும்போது தமிழகத்திலும் தமிழீழத்திலும் மட்டும் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்கு குரல்கொடுப்பதில்கூட ஒன்றுப்பட்டு செயல்படாதது ஏன்..??



கொடுக்கும் நிலையில் உள்ளதற்கும், கேட்கும் நிலையில் உள்ளதற்குமான வித்தியாசம் இதுதான். நாம் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தால் வேற்றுமை தொலைந்து போகும். 

கேட்கும் பொழுது சாதரணமாகவே சுயநலம், பேராசை, நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று என்னும் எண்ணம், துரோகம், காக்காப் பிடித்தல் என அனைத்துமே இருக்கும். 

கொடுக்கும் நிலையில் இருப்பவர்கள், ஒரே குரலில் இல்லை போ என்று சொல்லுவதும் அடிப்படையில் இதனால்தான்.

தமிழனிடம் தனக்கு அது வேண்டும் இது வேண்டுமென ஏன் யாரும் கேட்பதில்லை.. நாம் தான் நீர் வேண்டும், நிதி வேண்டும், உரிமை வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறோம். 

சுயசார்பு இருந்தால் எல்லாம் சரியாய்ப் போகும். 


=======================================================


கேள்வி எண் 66:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


"எதிரி ஒரு கன்னத்தில் அடித்தால் மறுக்கன்னத்தையும் காட்டு" என்ற காந்தியவாதத்தை எதார்த்தத்தில் எதுவரை ஏற்கமுடியும்..??


அஹிம்சாவாதிக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். காந்திக்கு யாரும் எதிரிகள் கிடையாது, பிரிட்டிஷாரும் சரி, கோட்சேவும் சரி எதிரி கிடையாது. பிரிட்டிஷாரின் அடக்குமுறையை எதிர்த்தார். கண்மூடித்தனமாக பிரிட்டிஷாரை எதிர்க்கவில்லை. எதிர்ப்பு மனிதர்களுக்கு அல்ல. அவர்களின் செயல்களுக்கு. 

அடித்தவனுக்கு அடுத்தக் கன்னத்தைக் காட்டு என்றுச் சொன்னாரே ஒழிய அதை இரகசியமாக வை என்றுச் சொல்லவில்லை,

அடிக்காதவனை அடிப்பது அடிப்பவனுக்குத் தான் கேவலம். கோட்சேவின் வாக்கு மூலம் பாருங்கள். காந்தியை சுய விருப்பு வெறுப்புகளுக்காகச் சுடவில்லை. நாட்டில் இந்துக்களின் எதிர்காலம் கருதியே சுட்டேன் என்று சொல்லி இருப்பார்.

மறுகன்னத்தைக் காட்டுவது கழுத்து சுளுக்கும் வரை சாத்தியம். அப்புறம் அவரையே அடுத்தப் பக்கம் வந்து அடிச்சுக்க சொல்ல வேண்டியதுதான்.


=======================================================


கேள்வி எண் 67:
கேட்டவர் : அமரன்


தொடருந்துக் கதவு மூடப்பட்டும் நேரத்தில் ஏறுவதுக்காக ஓடிவருவோருக்காக கதவுகளை சாத்தவிடாது பிடித்திருப்பது எனது வழக்கம். 3 தொடக்கம் 15 நிமிடங்களுக்கு ஒரு தொடருந்து உண்டு என்பதையும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடருந்துகளில் பயணிக்க வேண்டியவர்களும் உள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு நான் செய்வது சரியா பிழையா என்று தெளிவு படுத்துங்களேன்.



எப்பொழுதாவது எதேச்சையாக யாருக்காவது இப்படி உதவி செய்வதில் தவறு இல்லை.

தேடித் தேடி உதவி செய்வது தவறு. எப்பொழுதுமே தொடருந்து கிளம்பும் வரை கதவருகில் நிற்கிறீர்களா? யாருக்காவது உதவி செய்த திருப்தி காணுகிறீர்களா? அப்படியானால் அது தவறு.

ஒருவருக்கு உதவி செய்ய எத்தனை பேருடைய நேரங்களில் சிறிதளவை நாம் விரயமாக்குகிறோம் என்பதிலும் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டும். தினம் தினம் இப்படிச் செய்வதால் ஓரிருவர் அதை தவறாக உபயோகிக்கலாம். நிறுத்த மேடையில் உலவி விட்டு கடைசி நொடியில் ஓடி வருவது, யாரையாவது பார்த்தால் நின்று பேசி விட்டு வண்டி கிளம்பும் போது ஓடி வருவது போன்றவற்றிற்கு ஊக்கமளிப்பது போல் ஆகும்.


=======================================================


கேள்வி எண் 68:
கேட்டவர் : ஓவியன்


வேகம், விவேகம் எதற்கு வல்லமை அதிகம், கொஞ்சம் விளக்குங்களேன்...??



அறிவுக்கும் விவேகத்திற்கும் வித்தியாசம் உண்டு. விவேகத்திற்கு முக்கியத் தேவை இரண்டு

1. அறிவு
2. வேகம்

வேகமாய் அறிவுப் பூர்வமான காரியத்தைச் செய்வது விவேகம் எனப்படும். அப்படின்னா வல்லமை எதற்கு அதிகம்னு எளிதாகப் புரியுமே ஓவியன்.

சில இடங்களில் நிதானமா இருப்பதுதானே விவேகம்னு யோசிப்பீங்களே.. அது வேகமில்லாமை இல்லை. வேகமாக வேகத்தைக் குறைப்பது அது. அந்தச் சூழ்நிலைகளை ஆராய்ந்தால் உணர்வுகள் அளவுக்கதிகமான வேகத்துடன் இருப்பது புரியும். அந்த வேகத்தை வேகமாய் குறைக்கிறோம். அதை நிதானம் என்கிறோம்.

அதாவது அறிவைத் தகுந்த காலத்தில் தகுந்த வேகத்தில் உபயோகப் படுத்துவது விவேகம்.

அ(இ)துதான் விவேகம்.  


=======================================================
=
கேள்வி எண் 69:
கேட்டவர் : மன்மதன்


’ராஜ் தாக்ரே’ ?

ரொம்பவேத் தாக்கரே!!! (யாரைச் சொல்றேன்னு புரியுதா? 3 பெயர்களைப் போட்டுக்கலாம். )



=======================================================


கேள்வி எண் 70:
கேட்டவர் : அன்புரசிகன்



அண்ணா.. நாட்டின் இறையாண்மையை பாதுகாத்தல் என்கிறார்களே... இறையாண்மை என்றால் என்ன? (இதன் ஆங்கிலப்பதத்தினையும் தாருங்களேன்)



ஒரு நாட்டின் புனிதப் பண்புகளாக கருதப்படுபவை அந்த நாட்டின் இறையாண்மை. இங்கு இறைவனுக்கும் சம்பந்தமில்லை. ஆண்மைக்கும் சம்பந்தமில்லை.

இறையாண்மை என்ற வார்த்தையைக் கோர்த்தவர்களே இறைவன் இல்லை என்றும் ஆணும் பெண்ணும் சமம் எனப் பேசிவந்தச் சிலர்தான்.

எந்தச் சிலப் பண்புகளை, கொள்கைகளை உயிருக்கும் மேலாக கருதுகிறோமோ அதை இறையாண்மை என்கிறோம். ஆங்கிலத்தில் Sacret Principles என்றுச் சொல்லலாம். இறையாண்மையைக் காப்பது என்பது புனிதமாக, உயிர்மூச்சாகக் கொண்ட கொள்கைகளைக் காப்பதே ஆகும். 

இந்தியாவிற்கு இறையாண்மைகளாக சமத்துவம், சமாதானம், அஹிம்சை போன்றவை இருக்க வேண்டும். இருக்கிறதா என்பதற்கு நோ கமெண்ட்ஸ்!!!.
 
 

No comments:

Post a Comment