Tuesday, January 12, 2010

தாமரை பதில்கள் - 71 to 76




கேள்வி எண் 71:
கேட்டவர் : பாரதி


நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களை மிகவும் கவர்ந்த புத்தகம் எது? அதற்கு என்ன காரணம்?


கவிஞர் கண்ணதாசனின் சேரமான் காதலி. கதாநாயகத்தனம் இல்லாமல் சராசரி குணமுள்ள ஒரு அரசன். அழகான ஆழமான கருத்துள்ள வரிகள். கதையைப் திரும்பத் திரும்பப் படிக்க பாஸ்கர ரவிவர்மன் மனதில் உயர்ந்து கொண்டே போகும் அந்த ஆழமான மனப்போராட்டங்கள்.. கவிஞரை முழுதுமாக உணரவேண்டுமானால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசித்தே ஆக வேண்டும். மதம், காதல், வாழ்க்கை என அனைத்து வழிகளையும் காட்டும் நாவல்.



இன்னொரு புத்தகமும் உண்டு. ஆரேகான் பாதை. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். இதில் காணும் பயணம், காட்டெருமைகள்.. அவற்றை வேட்டையாடும் விதம், நாடோடிகள் வாழ்க்கை முறை என புத்தகத்தின் நிகழ்வுகள் கண்ணின் முன்னே விரியுமாறு எழுதப்பட்ட மொழிமாற்றக் கதை.



=======================================================


கேள்வி எண் 72:
கேட்டவர் : அன்புரசிகன்



கருத்துச்சுதந்திரம் என்பது என்ன? அதன் வரையறை என்ன? எவற்றைப்பற்றி ஒரு நாட்டில் கருத்து வெளியிடமுடியாது?



சுதந்திரம் என்ற வார்த்தைக்கே தனிப்பொருள் உண்டு. அதில் தந்திரம் (தன் திறம்)உண்டு... அந்திரம் உண்டு, ஆனால் முன்னால் உள்ள சு என்பதற்கு சுபம் என்ற விரிவும் உண்டு.. ஆக நன்மைக்காகவே பயன்படுத்தப் படவேண்டியது சு-தந்திரம்.

எல்லாச் சுதந்திரத்திற்கும் இந்த வரையறைப் பொருந்தும். ஒவ்வொரு கருத்தையும் வெளிப்படுத்த அதற்குரிய இடங்கள் உண்டு. அந்தந்தக் கருத்துக்களை அந்தந்த இடத்தில் பேசலாம். உதாரணமாக் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலி இயக்கத்தை ஆதரித்து, தடையை நீக்கச் சொல்லி சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பேசலாம்.

நம் கருத்துக்களைப் பேசுவதற்கும் அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு.

சரியான இடங்களில் எந்தக் கருத்தையும் சொல்லலாம்.



=======================================================



கேள்வி எண் 73:
கேட்டவர் : Narathar



இலங்கை பிரச்சனை?

இதே பிரச்சனை உலகில் பல நாடுகளில் பல காலகட்டங்களில் இருந்திருக்கிறது. 

சரியான கோணத்தில் இந்தப் பிரச்சனை இன்னும் உலகின் பார்வைக்கு வரவில்லை. அங்குதான் தோல்வி.

நோயின் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, போன்றவை.. அவை நோய்கள் அல்ல. 

"ட்ரீட்மெண்ட் ஈஸ் ஃபாட் டிஸீஸ், நாட் ஃபார் த சிம்டம்ஸ்"



=======================================================


கேள்வி எண் 74:
கேட்டவர் : சிவாஜி



இலவசங்களை எக்குத்தப்பாக வாரி வழங்கும் தமிழக முதல்வர் மீது பொதுநல வழக்கு போட முடியுமா? அவர் வாரியிறைப்பது பொதுமக்களின் பணத்தை. எனவே கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையிருக்கிறது என்பது எனது கருத்து. ஆனால் சட்டம் என்ன சொல்கிறது?

வழக்குப் போடலாம்.. ஆனால் முதலில் கவர்னரின் ஒப்புதல் பெற வேண்டும். அப்படியே ஒப்புதல் கிடைத்தாலும் சட்டமன்ற நடவடிக்கையான திட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே உடனடியாகத் தள்ளுபடியாகி விடும்.

முதல்வர் தன்னிச்சையாக இலவசங்களை வாரி வழங்குவதில்லை, 

234 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நிதி அமைச்சர் மூலம் ஒரு இலவச அறிவுப்புத் திட்டம் சபையில் வைக்கப் படுகிறது. அதற்கு நிதியும் ஒதுக்கப் படுகிறது. இதற்கான கோரிக்கையை சட்டசபையில் பாதிக்கும் மேற்பட்டவர் ஆதரித்தால் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது, சட்டமன்றத்தின் இந்த முடிவுகளைப் பற்றிச் சட்டமன்றம் தவிர வேறு எங்கும் கேள்விகள் எழுப்ப முடியாது.

கேள்விகளைக் கேட்க வேண்டுமானால் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.

1. உச்ச நீதி மன்ற உத்தரவை அமல் செய்யக்கூடாது எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம்.. 

2. நீதி மன்றங்கள் சட்டங்களை நடைமுறைப் படுத்த மட்டுமே. சட்டங்களை உருவாக்குவதும் நீக்குவதும் சட்டசபை, பாராளுமன்றம் இவற்றால் மட்டுமே முடியும்.



=======================================================


 கேள்வி எண் 75:
கேட்டவர் : அமரன்



"சம்பவம்" என்றால் நிகழ்ந்த ஒன்றுதானே. அப்படி இருக்க "உண்மைச்சம்பவம்" என்று பயன்படுத்துவது பற்றி...


நிகழ்ந்ததுதான்,.. ஆனால் எங்கே என்பதும் உண்டல்லவா.. மனதில் தோன்றியது. கனவில் வந்தது.. காதில் கேட்டது.. எங்கோ படித்தது.. கற்பனையில் தோண்றியது என ஸ்திரமில்லா சம்பவங்களும் உண்டல்லவா..?


சம்பவம் என்பது நிகழ்வு மட்டும்தான். உண்மை என்பது வேறல்லவா.. இல்லையென்றால் கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய் என்ற பழமொழிக்கு பொருளில்லாமல் போய்விடுமே!!!



=======================================================


கேள்வி எண் 76:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்கொடி எங்கள் காங்கிரஸ்கொடி" என்கிறார்களே தமிழகத்தில் சிலர். அவர்கள் சொல்வது உண்மையா..??

இல்லை தவறு. கல்வீச்சு, மண்ணெடுத்துத் தூற்றல் போன்றவை காங்கிரஸிற்கு முன்பே தோன்றிவிட்டன.. 
 

No comments:

Post a Comment