Monday, January 25, 2010

படிச்சதும் - கடிச்சதும் :

படிச்சது :


ஒரு தெரு நாயின் அடி மனதிலிருந்து

வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தாங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன்.

என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். நாய் நன்றியுள்ள ஜீவன் என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, நன்றி கெட்ட நாயேன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம்.

"இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்க. "கல்லைக் கண்டா நாயைக் காணும்; நாயைக் கண்டா கல்லைக் காணும்" என்று பழமொழி வேற, ஹூம்!

எங்க அப்பா, தாத்தா காலத்தில எல்லாம், மக்கள் உட்கார்ந்து நிதானமா சாப்பிடுவாங்க. இப்ப தான் fast food கலாச்சாரம் வந்து எல்லாம் எங்களை மாதிரி நின்னுக்கிட்டே சாப்பிடுறாங்க. அதனால எனக்கு என்னன்னு கேட்கிறீங்களா? விஷயம் இருக்கு. ஒரு நாள் மழைக்கால சாயங்கால நேரம், பக்கத்து வீதியில குடியிருக்கிற ஜிம்மியை சைட் அடிச்சுட்டு வேகமா ஓடி வந்திட்டிருந்தேன். மழைக்காலம் வேறயா, இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லலாமுன்னு, பக்கத்துல இருந்த போஸ்ட் கம்பத்தில கால தூக்கி அடக்கி வச்ச அவஸ்தைய தீர்த்துட்டு மெதுவா நடந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது போஸ்ட் கம்பமில்லை, fast food சாப்பிட்டு கொண்டிருந்த உயரமான ஒருத்தனோட காலுன்னு, தன் கறுப்பு பேண்ட் ஈரமானதுல கடுப்பான அவன் விட்டான் பாருங்க ஒரு உதை, அதில இருந்து, கழுத்து வலிச்சாலும் நிமிர்ந்து பார்த்து அது போஸ்ட் கம்பமா என்று உறுதிப்படுத்திட்டு தான் காலைத் தூக்கிறதே.

என்னமோ நாங்க கடிக்கிறதால மட்டும் தான், ரேபீஸ் நோய் பரவுர மாதிரி ஒரு பிரம்மைய உருவாக்கிட்டாங்க. ஏன் பூனை, குரங்கு, வவ்வால் கடிச்சா கூட தான் ரேபீஸ் வரும். ஒரு மனுஷனைக் கடிப்பதற்கு முன்னாடி நாங்க எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு தெரியுமா? மனுஷ ரத்தத்தின் மூலமாத் தான் எவ்வளவோ நோய்கள் பரவுதே. சரி, தெருவில தான் இப்படி நாய் படாத பாடு படுறோம். ஏதாவது வேலைக்குப் போகலாம்னு போலீஸ் நாய் கிடலாம்ன்னு போனேங்க. ஆனா பாருங்க எங்கிட்ட போலீஸ்ல சேருவதற்கு தகுதி, அதாங்க தொப்பை இல்லைன்னுட்டாங்க.

மனுஷங்களுக்குள்ள தான் ஜாதி, மதம் என்று அடிச்சுக்கிறாங்கன்னா எங்களுக்குள்ளயும் ஜாதியை நுழைச்சுட்டாங்கப்பா. பஞ்சை உருட்டி வச்ச மாதிரி, வெள்ளை உடம்பில இங்க் தெளிச்ச மாதிரி இருக்கிற காவல் காக்காத உதவாக்கரை நாய்கள் எல்லாம் உயர்ஜாதியாம். அதுங்களுக்கு வேலையே ஏ.சி. ரூம்ல, வேளாவேளைக்கு Pedigree சாப்பிட்டு, காரில் ஜன்னல் வழியா தலை நீட்டி ஊர்சுற்றிட்டு, எஜமானர்கள் கிட்ட போய் குழைவது தான். நாங்க மழை, வெயில்ன்னு பார்க்காம தெருவில அலைஞ்சு, கார்ப்பரேஷன் காரங்க கண்ணில படாம, நீங்க வேணாம்னு தூக்கிப்போடறதையெல்லாம் சாப்பிட்டு, அதுக்கு நன்றியா தெருவுக்கு காவலா இருந்தா, நாங்கெல்லாம் கீழ்ஜாதி நாட்டு நாய்களாம்.

என்னங்க பண்றது. எங்க வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், இந்த மனுஷங்களைத் திருத்த முடியாது. இருந்தாலும் இந்தியாவுல பொறந்ததற்கு சந்தோஷப்படுறேங்க. ஏன்னு கேக்குறீங்களா? தாய்லாந்துலயோ, கொரியாவுலயோ பிறந்திருந்தா, இந்நேரம் நாய் நைண்டி பைவ் ஆகியிருப்பேன் இல்லையா.


கடிச்சது

ஒரு தெரு நாய்க்கு மனிதனின் பதில்


என்னமோ நல்லாயிருங்க.. ஆனால் ஜாக்கிரதை நேரங்கெட்ட நேரத்தில ஹோட்டல் பக்கம் மட்டும் போகாதீங்க.. அது உங்களுக்கும் ஆபத்து எங்களுக்கும் ஆபத்து..

உங்களுக்குன்னு அப்பப்ப சாதம் வச்சாலும் எங்க பாப்பா ஆய் போன டயபரைத் தானே திருடி தின்ன பாக்கறீங்க.. ஏதோ எங்களால முடிஞ்ச எலும்புத் துண்டு போட்டதுக்கு, வீட்டுப் பக்கத்தில இருக்கிற காலி இடத்தை ஆக்ரமிப்பு பண்ணி இப்ப குழந்தை குட்டிகள் அப்படின்னு ஆயி சௌக்கியமா இருக்கீங்க..

போஸ்ட் மேன் பேர்ல போஸ்ட் இருக்குதான் ஒத்துக்கறேன்.. அதுக்காக அவர் போஸ்ட் கம்பம் போலத்தான் நிக்கணுமா? நகர்ந்தா குலைச்சு கடிச்சு ஒரு வழி ஆக்கிடறீங்களே.. உங்களால போஸ்ட்மேன் தெரு முக்கிலிருந்து மிஸ்டு கால் விட்டு வந்து லட்டரைக் கலெக்ட் பண்ணிக்குங்கன்னு சொல்றார்..

நன்றி கெட்ட நாயே திட்டறது தப்பான்னு உங்க ஆதங்கம்.. இங்க மனுஷங்க கிட்டதான் நன்றியே இல்லியே.. இருந்தாதானே கெட முடியும்.. இல்லாதது எப்படி கெட முடியும்..

உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, நீ மட்டும் பணங்காசு பாக்கறதில்லையா? ஏ.சி கார்ல போறவங்களைப் பார்த்தா சும்மா விட்டுட்டு இந்த டூ வீலர்ல போற பசங்களை விரட்டி விரட்டி கொலைக்கிறியே இது உனக்கே ஞாயமா?

ஏதோ பணக்கார நாயிங்க அப்படித்தான் விட்டுத்தள்ளு.. எங்கத் தலைவர் மட்டும் வரட்டும் உங்களுக்கும் இட ஒதுக்கீடு, இலவச நிலம், உங்க எடத்துக்கே ரேஷன் அரிசி எல்லாம் வந்திடும்... மத்த கட்சி கொடி பிடிச்சவனை மட்டும் அந்த ஸ்கூல் பக்கம் வரவிட்டுடாதே!!!..

.



1 comment:

  1. ப‌ல‌ வாச‌க‌ர்க‌ளை சென்ற‌டைய‌ வேண்டிய‌ எழுத்து கூகிள் ஏதோ தேடும் போது கிடைத்த‌து‍... அனாதையாக‌ இங்கு தூங்குதோ என்று தோனுகிற‌து.

    ReplyDelete