Friday, July 18, 2014

வருகிறது திருவிழா - ஆடி பெருக்கு!





 
நம்ம நண்பரிடம் இருந்து ஒரு தனிமடல் வந்தது.. அதன் சாரம் இதுதான்.

தீபாவளி, பொங்கல் தவிர மற்றவை எல்லாம் பெரும்பாலும் மறந்தே போய்விடுகிறது. என் அம்மா நினைவுபடுத்தினால்தான் உண்டு. தமிழ் மாதக் காலண்டரும் வீட்டிலில்லாததால் விசேஷங்கள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.
சரி சரி அடுத்து என்ன திருவிழா வருது.. அதுக்கு என்ன அர்த்தம் என்பதையும் சொல்ல ஒரு பக்கம் இருக்கட்டுமே என்று இந்தப் பக்கம் 
    ஆ"ரம்பம்."

உத்தராயணம் தட்சிணாயனம் என்று இரு ஆறு மாதங்களாக ஒரு வருடம் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆடி மாதம் கடகரேகைக்கு உச்சியில் இருக்கும் சூரியன் தன் பயணத்தைத் தெற்கு நோக்கித் தொடங்கும் தட்சிணாயணக் காலம் ஆகும்.

ஆடி அழைச்சிகிட்டு வரும். தை துடைச்சிகிட்டுப் போகும் என்பது பெரியோரின் பழமொழி. ஆடி மாதம் தொடங்கி பல மதச்சார்புள்ள திருவிழாக்கள் வர ஆரம்பிக்கும். தை மாதத்திற்குப் பின் அது குறைந்து விடும்.

ஆடி மாதம் கிராமத்தில் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். விருமாண்டிக்குக் கூட ஆடி வெள்ளியில் தான் பூசை என்று விருமாண்டிப் படத்தில் பார்த்து இருப்பீர்களே. மிகப் பெரிய கிராமமான சேலத்தில் கூட ஆடி மாதம் தான் காவல் தெய்வமான மாரியம்மனுக்கு விழா.

ஆடி மழைக்காலத்தின் துவக்கம் ஆகும்.

ஆமாம் ஆடி பதினெட்டை ஏன் ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறோம்? ஏன் ஆடி 5 ஆடி 30 என்று கொண்டாடக் கூடாதா என்ற கேள்வி எழணும்.

ஆடி என்பது மழைக்காலம் அல்லவா? மழையின் விளைவு ஆற்றில் வெள்ளம். ஆற்றில் வெள்ளம் வர 18 நாளா என்று யோசிப்போமா?

அப்படி இல்லை. அத்தனை நதிகளும் பெண்கள் என்கிறது நமது கலாச்சாரம். ஒரு பெண் பதினெட்டாம் வயதிலே பருவமடைந்து செழுசெழுப்பாக இருப்பாள் அல்லவா.. அப்படி நதியாகிய பெண்ணும் அப்படி ஒரு மங்கையாகப் பரிணமித்து விருத்திக்குத் தயாரான பெண்ணாக இருக்கிறாள் என்பதால் ஆடிப் பதினெட்டு.

ஆடிப் பதினெட்டும் கன்னிமார் பூசையும் இணைந்த காரணம் இதுவாகும்.

எனவே நதியிலே புதுவெள்ளம் வரும் என்பது மேலெழுந்த வாரியாக இருந்தாலும் நதிமகள் வளர்ந்து மங்கையானாள் என்பதையே ஆடிப்பெருக்கு மூலம் கொண்டாடுகிறோம்.(ஆதவா இனி இதை பூப்புனித நீராட்டு விழா என பண்பட்டவர் பகுதியில் கவிதையாய் எழுதக் கூடும்.)

இதனால் இதே போல் விருத்திக்குத் தயாரான புத்தம் புது மணமக்கள் ஆடிப் பெருக்கை விஷேசமாய் கொண்டாடுகின்றனர். (நாம எப்பவும் புது மாப்பிள்ளைதானே.. அமோகமா கொண்டாடிருவோம்)

ஆடிப் பெருக்கு மகாபாரத யுத்தம் முடிந்து ஆயுதங்களைக் கழுவியதால் ஆற்று நீர் செந்நீராக ஓடும் எனச் சில பெரியவர்கள் கதை சொல்வார்கள். இரத்த ஆறு வேணாம் என முகம் சுழிப்பவர்கள் அந்தக் கதையைக் கண்டுக்காதீங்க.

ஆடிப் பெருக்கு அன்று காவிரிக்கரை கொண்டாட்டங்கள் மிகவும் கொண்டாட்டமானவை.

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் பவானிகூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கூடி புனித நீராடுவார்கள்



ஏராளமான புதுமணத்தம்பதிகள் ஆற்றில் புனித நீராடியதோடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்துவர். இல்லத்தரசிகளும் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு செய்வர்.


கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொள்வர்.

வீடுகளில் விரதமிருந்து பெண்கள், முளைப்பாரியை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்து. எல்லா வளமும் பெருக வேண்டும் என்று இளம்பெண்கள் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்


விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி வணங்குவார்கள். மேட்டூர், ஒகேனக்கல்லில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் புனித நீராடி மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்துவர்

இதேபோல் திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டத்தில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா இன்று சிறப்பாக கொண்டாடப்ப்டும்.

கன்னிமார் பூசை..

இப்பூசைக்கு ஏழு கற்கள் தேர்வு செய்யப்படும். இவை ஏழு புண்ணிய நதிகளைக் குறிக்கும். அவற்றை காவிரிக் கரையில் பிரதிஷ்டை செய்து, காவிரி நீரால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம், பூ என மங்கலப் பொருள்களைக் கொண்டு பூஜை செய்வார்கள்..



கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி (யாராவது இதை மொழிபழிப்பு செய்தால் உதைவிழும்)

அவள் விரும்பி மணந்தது சேரர் குலத்தைச் சேர்ந்த ஆட்டனத்தியை. ஒரு முறை இதே போன்ற ஒரு ஆடிப் பெருக்கின் போது புதுவெள்ளத்தில் நீச்சல் நடனம் செய்தான் ஆட்டனத்தி.

அப்பொழுது சுழித்தோடும் காவிரி அவனை தன் குழலில் ஒளித்து இழுத்துச் சென்றுவிட்டாள்.

நாகப்பட்டினத்துக் கடற்கரையுக் மூர்ச்சையுற்றுக் கிடந்த ஆட்டனத்தியை மருதி என்ற மீனவ மகள் காப்பாற்றினாள். காவிரிக் கரையோரமாகவே காவிரியிடம் தன் கணவனை திருப்பிக் கொடுக்க வேண்டி அரற்றி வந்த ஆதிமந்தி கணவனை அடைந்தாள்.

இதற்கும் இன்று நடக்கும் புதுமணத்தம்பதிகளின் வழிபாட்டிற்கும் சிங்க் ஆகுதில்ல..

இதை முக்கியமாக மகளிரே செய்வார்கள்.

ஆடிப்பெருக்கு காவிரியுடன் இணைந்தே வளர்ந்து வந்திருக்கிறது. சோழர்களின் பண்டையக் கொண்டாட்டங்களாம் சித்திரை இந்திரவிழா, ஆடிப் பெருக்கு, தைப் பொங்கல், மாசி அல்லது பங்குனியில் வசந்த விழா போன்ற இயற்கையோடு கலந்த திருவிழாக்கள் ஆகும்.

அதில் ஆடிப் பெருக்கு 18 வயது பருவமங்கையைக் கொண்டாடும் விழா என்பதால்..

இந்த வருடம் நண்பர்கள் பலர் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment