Thursday, July 24, 2014

சுட்ட பொன்!

காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்
பேச்சற் றவரே பிறவார் பராபரமே


தாயுமானவர்



சுட்டால் பொன் சிவக்கும் உண்மைதான். ஆனால் அடுத்து அவர் கொடுத்திருக்கும் உவமேயத்தில் குழப்பம் வரலாம்.

அதைப் புரிந்து கொள்ள அடுத்து அவர் சொல்லும் வார்த்தையைக் கவனிக்க வேண்டியது இருக்கிறது..

பிறவார் - பிறக்கவே மாட்டார்கள்.

யார் பிறக்க மாட்டார்கள்?  பேச்சற்றவர்கள்.

இதில் உள்ள பொற்கட்டி எது? காச்சுதல் எது?

காச்சுதல் - பேசுதல் ????
பொற்கட்டி - யோசிக்கப்படவேண்டும்

பொற்கட்டி காய்ச்சக் காய்ச்ச ஒளிபெறுகிறது..

அதே போல் சிவனைப் பற்றிப் பேசப் பேச ஒளிபெறுவது அவனது அடியார்களே.

நிர்மலம் என்றால் அப்பழுக்கற்ற என்று பொருள். மனதில் அப்பழுக்கின்றி மோனத்தில் ஆழ்ந்தவர்கள் பிறவாமையைப் பெற இயலும்.. என்கிறாரோ?

அப்படித்தான் இருந்தாக வேண்டும்.

ஆனால் உவமையையும் உவமேயத்தையும் இணைக்கும் ஒன்று விடுபட்டிருக்கிறது.

காச்சுதல்.

அது என்ன? மற்றவர்கள் நம்மைப் பற்றிப் பேசும் பேச்சுகளா? நமக்கு வரும் துன்பங்களா?

ஆமாம் அனைத்துமே காய்ச்சுதல்தான்.

திருவிளையாடலின் அடிப்படையே உரியவருக்கு உரிய இடம் தந்தான் ஈசன் என்று உலகிற்கு அறிவிக்கத்தானே? அவனின் அந்த விளையாடல்கள் அன்பருக்கன்றி வேறு யாருக்கும் கிட்டியதில்லையே.

காய்ச்சுதல் என்று சொன்னது மிக அழகான உபயோகம். சுடுதல் என்பது குத்திக் காட்டுதல் தண்டித்தல் என்று ஆகலாம். ஆனால் காய்ச்சுதல் என்பது பக்குவப் படுத்தல் என்று பொருள்தரும். காய்ச்சுவதால் எதுவும் அழிந்து போவதில்லை. தீமைகளைத் தவிர.

ஆக..

பிறவாமைக்கு அழகாக வழி சொல்லுகிறார் தாயுமானவர் இந்தப் பதிகத்தில்.

பொன்னைக் காய்ச்சி உருக்கி சுத்தமான பொற்கட்டி செய்வது போல, சோதனைகளைத் தந்து நம்மையெல்லாம் காய்ச்சுகிறான் இறைவன்.

அதில் குறையுள்ள அசுத்தங்கள் எல்லாம் விலக... அப்பழுக்கற்ற பொன் வெளிப்படுவது போல..

இறைவனை, பகைவனை, உறவினரை, இயற்கையை இப்படி எதையுமே குறைசொல்லாமல்

அனைத்தையும் தாங்கி எந்த வித மாசும் இல்லாமல் அமைதியாய் இருப்பவர்கள் பிறவாமை எய்துவார்கள். சுட்ட பொன்னாய் ஜொலிப்பார்கள்.

இதில் தாயுமானவர் சொல்லும் தத்துவம்.. என்ன துன்பம் வந்தாலும் யாரையும் பழிக்காதீர்கள். நிர்மலமாய் இருங்கள். அமைதியோடு துன்பங்களை எதிர் கொள்ளுங்கள். அவை உங்களை புடம்போடும்.

எல்லாம் அவன் விளையாட்டே என்றறிந்தால் கோபமும் வருமா என்ன?


பின்குறிப்பு : நானெல்லாம் பேசற பேச்சுக்கு இன்னும் எத்தனைக் கோடிப் பிறவிகள் இருக்கோ?

1 comment:

  1. காச்சுதல் என்பதற்கு பேசுதல் என்று பொருள் உரைத்தது நன்று.

    ReplyDelete