Sunday, June 13, 2010

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி. -பாகம் 3



பெட்டி மிதந்த வந்த ஆத்தில உஜ்ஜயினி இளவரசன் உதயகுமாரன் குளிச்சுகிட்டு இருந்தான். என்னடா இது பெரிய பெட்டியா இருக்கே என்று பெட்டியை இழுத்துப் பார்த்தான்.. பெட்டியில் ஒரு அழகான பொண்ணு...

பெட்டியை கரைக்கு இழுத்து கொண்டு வந்த இளவரசன், அதை வைத்தியர் வீட்டுக்கு கொண்டுபோனான். வைத்தியர் மரகத வல்லியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். பிறகு இது ஏதோ விஷக் கடியா இருக்கலாம் என்று தன் மனைவியை மரகதவல்லியின் உடல் முழுக்க சோதிக்கச் சொன்னார்..

பாதத்தில் பதிந்திருந்த பல்லைக் வைத்தியர் மனைவி சொல்ல வைத்தியர் அந்தப் பல்லைப் பிடுங்கி எறிந்து விட்டு பச்சிலைகளை அரைத்து கட்ட, மரகத வல்லியின் உடம்பிலிருந்து விஷம் மெல்ல மெல்ல இறங்கியது.

மரகதவல்லி விழித்து எழுந்தாள். இளவரசனுக்கு மரகதவல்லியை ரொம்ப பிடிச்சுப் போச்சு. மரகதவல்லியைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும் என முடிவு பண்ணிட்டான்..

மரகதவல்லியை ஒரு மாளிகையில் தங்க வச்சிட்டு ராஜாவைப் பார்க்கப் போனான் உதயகுமாரன்..

வா மகனே வா.. உனக்கு நூறாயுசு. இப்பதான் உன்னைப் பற்றி நினைச்சேன், வா வா அப்படின்னு வரவேற்றார் ராஜா..

என்ன விஷயம் அப்பா அப்படின்னு உதயகுமாரன் கேட்க.. உனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு பண்ணி இருக்கேன், அதுக்காக அங்க நாட்டு இளவரசிகளை வரவழைச்சு இருக்கேன்.. அங்க நாட்டு மன்னர் நமக்கு மிகவும் நெருங்கிய உறவு, பலம் வாய்ந்தவர் ராஜா சொல்லச் சொல்ல ..

இளவரசன் மன்னிக்கனும் அரசே இன்னிக்கு நான் ஒரு பெண்ணை பார்த்தேன், அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துக்கணும் என விரும்புகிறேன் அப்படின்னான்..

உதயகுமாரா, நீ நாளைக்கு மன்னனாகப் போகிறவன்.. அப்படின்னா நாளைக்கு இராணியாகப் போகிறவ்க்களுக்கு சகல தகுதிகளும் வேணும் இல்லியா? அந்தப் பொண்ணு அரசகுமாரியா? எந்த நாட்டு அரசகுமாரி? இல்லை யாருடைய மகள் அப்படின்னு கேட்க இளவரசன் சகலத்தையும் சொன்னான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் இளவரசி மாதிரிதான் இருக்கு. ஆனால் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லலை. என்றான்.

அப்படின்னா ஒண்ணு செய்வோம்.. இங்கே வந்திருக்கிற இளவரசிகளுக்கும் நீ பார்த்திருக்கும் பெண்ணுக்கும் போட்டிகள் வைப்போம். அந்தப் பொண்ணு அந்தப் போட்டிகளில் ஜெயிச்சா அந்தப் பொண்ணைக் கட்டிக்கோ.. இல்லைன்னா போட்டியில ஜெயிக்கிற பெண்ணைத்தான் கட்டிக்கணும் அப்படின்னு ராஜா சொல்லிட்டாரு..

மரகதவல்லி பிழைச்சதைப் பார்த்ததும் கிளிகளுக்கு ஒரே சந்தோஷம். எல்லோரும் போனது மாளிகைக்குள் போய் மரகதவல்லியைச் சந்திச்சன. அவைகளுக்கு ஒரே குஷி..

மரகதவல்லிக்கும் கிளிகளைப் பார்த்ததும் தான் மனசே நிம்மதியாச்சு. கிளிகளெல்லாம் சேர்ந்து இளவரசனுக்கே மரகதவல்லியைத் திருமணம் செஞ்சு வச்சிடணும்னு முடிவு பண்ணின,

அடுத்த நாள் காலையில இளவரசன் வந்தான்.. கூடவே மந்திரி ஒருத்தரும் வந்தார்..

மந்திரி மரகதவல்லிக்கு இந்த மாதிரி இளவரசன் மரகதவல்லியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறார்னு சொல்லி, ஆனா அதுக்கு மரகதவல்லி போட்டியில் கலந்துகிட்டு ஜெயிச்சாகணும். அது அரச கட்டளைன்னு சொன்னார், மரகதவல்லியும் போட்டிக்கு ஒத்துகிட்டா...

அங்க தேசத்து இளவரசிகளும் போட்டிக்கு ஒத்துகிட்டாங்க...

முதல் போட்டி

அவரவர் தங்கி இருக்கிற மாளிகைக்கு ஒரே இரவில் வர்ணம் பூசணும் இதுதான் முதல் போட்டி..

அங்க தேசத்து இளவரசிகள் ரொம்பச் செல்லமா வளர்ந்தவங்க.. அவங்களுக்கு போட்டி என்பது அவமானமா இருந்திச்சி.. ஆனாலும் உஜ்ஜயினி மிகப் பெரிய ராஜ்ஜியம். அதனோட மஹாராணி ஆகறது என்பது மிகப் பெரிய மரியாதை என்பதால பல்லைக் கடிச்சுகிட்டு வர்ணம் பூசுவதை ஆரம்பிச்சாங்க.. அவங்க வேலையாட்களெல்லாம் அவங்களோட உர்ட்டல் மிரட்டலுக்கு பயந்து அவசர அவசரமா வர்ணம் பூசினாங்க.

மரகதவல்லிக்கோ வீட்டைச் சுத்தமா வச்சுக்கறது பிரியமான வேலையாச்சே.. கூடவே கிளிகளும் சின்ன சின்ன குச்சுக்களால் வர்ணம் தொட்டு பறந்து பறந்து வர்ணம் பூசின.

அடுத்த நாள் காலையில் ராஜா மூணு பேர் மாளிகையயும் பார்க்க வந்தார்.. மற்றவர்கள் மாளிகையில் பாதி வேலை கூட நடக்கலை. ஆனா மரகதவல்லியோட மாளிகையோ வண்னக்கோலங்கள், அழகான பூச்சுகளோடு ரொம்ப அழகா இருந்திச்சு..

அடுத்த போட்டி இளவரசனுக்கு ஒரு பட்டுசட்டைத் தைக்கணும். அதுவும் கண்ணால் பார்த்த அளவைக் கொண்டு...

இளவரசிகளுக்கு இதுவும் புதுசு.. இதுவரை வாழ்க்கையில சட்டையே தைக்காதவங்க.. குண்டக்க மண்டக்க கோணிப்பை மாதிரி தெச்சாங்க.

ஒரு கிளி மட்டும் இளவரசோனோட மாளிகைக்குப் பறந்து போச்சு. இளவரசன் தூங்கிகிட்டு இருந்தான். சாளரம் வழியே உள்ளே போன கிளி இளவரசனை நல்லா அளந்துகொண்டு வந்தது.

அதன் பிறகு மரகதவல்லி சட்டையைத் தைக்க, கிளிகள் வண்ண மணிகளை எல்லாம் கோர்த்து சட்டையை அலங்காரம் செய்தன..

மறுநாள் காலையில் சட்டைகளைப் பார்த்த இராஜா அசந்து போனார் இதுவரை அதுமாதிரியான அலங்காரமானச் சட்டையை அவர் பார்த்ததே இல்லை, மிகவும் பாராட்டினார்..

மூன்றாவது போட்டி பத்து மூட்டை நெல்லை குத்தி அரிசி தனியா உமி தனியா பிரிக்கணும். அதுவும் ஒரு ராத்திரியில...

இந்தப் போட்டிதான் மரகதவல்லிக்கு ரொம்ப ஈஸியானது.. ஏன்னா கிளிகள் பட்படன்னு எல்லா நெல்லையும் கொத்திக் கொத்தி அரிசி தனியா உமி தனியா ஆக்கி விட்டன..

இளவரசிகளும் அவங்களோட வேலைக்காரர்களும் மாங்கு மாங்குன்னு நெல்லைக் குத்த எல்லாம் நொய் அரிசியாய்ப் போச்சு..


மூன்று போட்டிகளிலும் தோத்துப் போனது இளவரசிகளுக்கு அவமானமாப் போச்சு.. அவங்க உடனே தங்களுடைய அப்பாவுக்கு தகவலனுப்ப

அங்க தேசத்து ராஜா படையத் திரட்டிகிட்டு வந்தாரு... போருக்கு...

தொடரும்
.

No comments:

Post a Comment