Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 12

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கப் போட்டிகள் மூணு செண்டர்ல நடந்தது. அதில் கவிதை போட்டி ஆரம்பிச்சப்பவே கேட்டேன்.. அய்யா கவிதை எழுதணுமா இல்லைப் பாட்டூ எழுதணுமா என்று. எது வேணும்னாலும் எழுதுங்கா அப்படீன்னு சொல்லிட்டாங்க.. மூணு தலைப்புகள். என் இந்தியா, பழைய சோறும் பாதாம் கீரும் அப்புறம் இன்னொரூ மனசில் நிக்காத தலைப்பு.. நான் பழைய சோறும் பாதாம் கீரும் தலைப்பை எடுத்துகிட்டேன். ஏன்னா யாரும் அந்தத் தலைப்பை எடுக்கலை. நம்ம பாழாப் போன உலகமே பாட்டை எழுதினேன்.

அப்புறம் ஓவியப் போட்டி.. (ஓவியன், இதைக் கவனிங்க).. எது வேணும்னாலும் கருத்தா இருக்கலாம் ஓவியம் வரையுங்க என்று சொல்லிட்டாங்க.. நானும் ஒரு கோரமான விரிசல்கள் விழுந்த மண்டையோட்டுத் தலையை வரைந்து அதன் கீழ் இரத்தம் வழியும் வாயினை மூக்கு கையாய் மாறி பொத்தி இருக்க அதற்கு (சு)தந்திரம் என்று பெயரிட்டேன். இது வெறும் கோட்டோவியம்தான்.

அடுத்து கட்டுரை போட்டி, அதையடுத்து புத்தக அறிவுப்போட்டி..
எல்லாம் முடிந்ததும், முதலில் கவிதைப் போட்டி ரிசலட் சொன்னார்கள். பழனியப்பன் முதல் பரிசு, இரண்டாம் பரிசு வேறு கல்லூரிக்கு, தாமரைச் செல்வன் மூன்றாம் பரிசு..

மற்ற முடிவுகள் வரத்தாமதாமாகும் என்பாதால், பரிசு பெற்ற கவிதைகளை வாசிக்கச் சொன்னார்கள். பழனியப்பனும், அடுத்த மாணவனும் வாசிக்க, மூன்றாவதாய் நான் எழுந்து உணர்ச்சிகரமாய் பாடலை மெட்டுடன் பாடிக் காட்டினேன்.

மெட்டுடன் கூடிய போதுதான் வார்த்தைகளின் அர்த்தம் முகத்திலறைந்தார்போல இருந்ததை கவனித்த நடுவர்கள்.. வருத்தம் தெரிவித்தனர்.. இன்னொரு பட்டுக்கோட்டையார் எங்கள் எதிரில் நின்றிருப்பது தெரியாமல் எளிமையினை கண்டு இகழந்துவிட்டோம்.. இப்பொழுது தலைகுனிகிறோம் என்று "நாட்டாமை தீர்ப்பை மாற்ற நினைக்க, சொன்ன தீர்ப்பு சொன்னதாக இருக்கட்டும், இப்பொழுது உங்கள் கண்களுக்குப் புரியாத அர்த்தங்கள் (காதுகளுக்கு புரிந்த அர்த்தங்கள்) இன்னொரு நடுவருக்கு எப்படிப் புரியும், இதனால் உம்மேல் அவர்களும் சந்தேகம் கொள்ள வாய்ப்பளிக்காதீர்கள் என் மறுத்தேன். கட்டுரை, புத்தக அறிவு மற்றும் ஓவியம் மூன்றிலும் முதல் பரிசு. இவை மாவட்ட அளவு பரீசீலனைக்கு அனுப்பப் பட்டதில் கட்டுரை, புத்தக அறிவில் மாவட்ட முதலிடமும் ஓவியத்தில் இரண்டாம் பரிசும் பெற்றது. முதல்பரிசு வெண்புறாவாய் பாதி மாறிய இராணுவத் தொப்பி, தலைப்பு அமைதிப் படை.

புத்தக அறிவா வெறும் மாத வார பத்திரிக்கைகள் துண்டு பேப்பர்கள் படித்தவனுக்கா என்று யோசிக்காதீர்கள். நான் தீவிரப் படிப்பாளியாய் இருந்த காலம் 6வது முதல் +2 படித்த வரை.. கொஞ்சம் ஃபிளாஷ் பேக் போய் வரலாம் வாருங்கள்.

தொடரும்
.

No comments:

Post a Comment