Friday, December 18, 2009

நிழலுக்கு உயிர் கவிதை - 5


மடி சேர்ந்த நெடுமரம்
கண்ணீர் சிந்திப் பட்ட தடமோ
வடிவழகி வெம்பியதால்
கொடி பூத்த வியர்வைத் தடமோ


தாய்மடியில்
தலைசாய்த்தார் போல்
இலை மடியில்
தலைசாய்த்த பூமகள்

பனித்த கண்களுடன்
தலைகோதி ஆதராவாய்
தாய்ச்செடி!

இதுவே செடியை மகளாகக் கொண்டால்

பட்ட வலிகளெல்லாம்
உன் இலை நெஞ்சில்
பதிந்த
பனித்துளிப் பதக்கங்களில்
காணாமல் போகிறதே

தலைவாழை இலையில்
நீர் தெளித்து
நடந்தது திருமண விருந்து
விழாவுடன் எல்லாம் முடிந்தது
எச்சில் இலையாய்
இன்னுமொரு இலையிலுமா
நீர்தெளித்து?

இன்னுமோர் திருமணமா
இவளாவது வாழ்வாளா?

பருவம்
அவளுக்குப் பொய்த்தது
அதற்காவது பொய்க்கவில்லையே
கனத்த மனதிலும்
தோழிக்கு வாழ்த்து!

மழையும் நிறுவிட்டது
என்னுடைய கண்ணீரும் வற்றிவிட்டது
காதல் காய்ந்து போன
உன் தோள்களில்
ஒட்டாமல் கிடந்தத் கண்ணீர்த் துளிகள் போல்
இந்தத் துளிகளும் தான் ஒட்டாமல் நிற்கின்றன
முகிலே முகிலே
நானொருத்தி போதும்
அழுவதற்கு

உன்
விழிநீர் தாங்கி
விம்முகிறதே இலைகள்..
தலைசாய்க்கத் தாயின்றி
செடித்தாயிடம்
வெடித்தாயோ!
பொறுத்துக் கொள் கண்மணியே!
தாய்நாட்டுக் கடமை
இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது!

சிறப்பு சிந்தனை!!!

நிராகரிக்கப் படும் பெண்கள். பெண் கறுப்பு, பெண்ணிற்குப் பல்தூக்கல், மூக்கு மொக்கை, பெண் வேலைக்குப் போகலை, பெண் உயரம் குறைவு இப்படிக் குத்திப் பேசும் நிராகரிப்புகள். கரிப்புகள் கருக்கிய உள்ளங்கள்.

காதலில் ஆண்கள் நிராகரிக்கப் படுகிறார்கள். கல்யாணத்தில் பெண்கள் நிராகரிக்கப் படுகிறார்கள். பெண்கள் கூட்டம் செடிகளுக்குப் பின். ஆண்கள் கூட்டம் தாடிகளுக்குப் பின்.


இலைகள் பெண்கள்தான். அன்னை அன்புகூட்டிச் சமைப்பதுபோல், செடிகளுக்கு உணவாம் ஸ்டார்ச் தயாரிப்பது இலைகள் தானே

பனித்துளிகள் இலையின் வியர்வையோ, கண்ணீரோ, இதழ் வடிக்கும் எச்சிலோ அல்ல.

பனித்துளிகள் சிறுவாடு. செடிகளுக்கு தேவையான நீரை உறிஞ்சித் தருவது தந்தையான வேர்களின் வேலையாம். ஆனால் மழை இல்லாக் காலங்களில் நிலம் மறந்த நீரை எங்கிருந்து தான் பெறும்?

இலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் குளிர்வித்துத் துளித்துளியாய் நீராக்கி வேரில் வார்க்க, வேர் அதை உறிஞ்சி செடிகளுக்குப் பாய்ச்ச, அடுத்த மழைக்காலம் வரை இலை இப்பணியைச் செய்து கொண்டே இருக்கும்.

,

No comments:

Post a Comment