Thursday, December 24, 2009

வினாடிக் கவிதைகள்

முதல் வார்த்தையைக் கொண்டு நொடிப்பொழுதில் எழுதிய கவிதைகள்

அழுதழுது வற்றிய கண்கள். ஒரு துன்பத்தில் இறுகிப் போய் அழ மறந்து மரத்துப் போனால் நீலிக் கண்ணீர் வடிக்கும் கண்களின் இடிப்புரை:

கண்ணீர் கண்கள்
அழுது
வற்றிப் போன கண்களைப்
பார்த்து சொல்லின
என்ன அழுத்தம் இவளுக்கு!




ஓடிப்போன கணவன். ஒற்றைக் கொம்பாய் பொறுப்பறியா மகன். அன்னையின் ஏக்கம் இங்கே

வந்தாயோ
இன்னும் ஒருமுறை!
செல்லமாய் அதட்டலிட்டு
வட்டிலில் அன்னமிட்டு
துளிர்க்கும் கண்களுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
நீயாவது
வீட்டில் இரு.. 


 ஒரு முதிர் கன்னியைப் பெண்பார்க்கும் பொழுது அவளுக்குள் எழும் எண்ணங்கள்.


காண்பதற்காக
ஏறிட்ட விழிகள்
ஏறிட்ட விழிகளில்
ஊறிட்ட எண்ணங்கள்
கண்ணீரில்

எனக்குப் பிடிக்குமா
என்ற கவலைகள் போய்
இவரா இவர்தானா என்ற
எதிர்பார்ப்புகள் போய்
இவருக்காவது என்ற
வருத்தங்கள் போய்
விரக்தியில்

மெல்ல பார்க்கின்றேன்
என்னில் என்ன தேடுகிறாய்
இளமையா
பத்து வருடங்கள்
தாமதித்து விட்டாய்

இதயமா
நசுங்கி கிடப்பது
காண முடிகிறதா

இல்லை பணச்செழிப்பா?
அது இருந்திருந்தால்தான்
என்றோ செல்லுபடி
ஆகி இருப்பேனே!

காஃபிக் கோப்பையில்
இதழ் பதித்து பார்த்த ருசி
உன் கண்கள்
எனில் பதிந்து பார்த்த ருசி

எச்சில் பாத்திரம்
மறுபடி கழுவ வேண்டும்
ஆம்
நீ சென்ற பின்னே
உன் பார்வை எச்சில் பட்ட
என்னையும்தான்


.

No comments:

Post a Comment