Thursday, December 24, 2009

தாமரை பதில்கள் : 5 to 8

கேள்வி எண் : 5
கேட்டவர் : Aren


குசேலன் படத்தில் ரஜினி உண்மைகளைச் சொல்லி தன் ரசிகர்களின் கனவுகளை ஏமாற்றிவிட்டாரா? ஆம் என்றால் கொஞ்சம் விளக்கம் தேவை



ஒரு வகையில் இந்தக் கேள்விக்கு ஆம் என்ற பதில்தான் சொல்லியாக வேண்டியதாகிறது.

ரசிகர்கள் கனவு கண்டனர். ஆனால் கனவிலிருந்த காலம் எவ்வளவு? 1996 முதல் 2008 வரை, பனிரெண்டு ஆண்டுகாலம்.

நான் வெகுகாலம் யோசித்தேன். இது எனக்குச் சரிப்பட்டு வருகிற மாதிரி தெரியலை, அதனால் இனி வரமாட்டேன் எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் திடீரென அதை நான் சொல்லலை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இதைப் பற்றி பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன். ஒரு சிலரின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக பலரின் கனவுகளை வளர்ப்பது சரியில்லைதான். அதே சமயம் நானா சொன்னேன் என பல்டியடிப்பது மிகவும் தவறு.

எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகளைச் சரியாய் வைத்துக் கொள்வது மிக முக்கியம். இந்த டயலாக் வச்சம்னா குறைந்த பட்சம் 10 லட்சம் லாபம் வரும் சார் என மற்றவர்கள் சொல்லி இருக்கலாம். அதே போல் என்ன ரியாக்ஷன் வருகிறது என நாடி பிடித்தும் பார்த்திருக்கலாம். 


ஆனால் பாபா, ராகவேந்தர் ஆன்மீகம் என்று ஒரு புறம் ஒருமுகம் காட்டி குறுகிய கால ஆதாயத்திற்காக எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது சரியல்ல.


=======================================================

கேள்வி எண் : 6
கேட்டவர் : தீபன்


காதலித்து கைப்பிடித்த கன்னி இடைநடுவே இறந்துவிட்டால் இன்னொரு காதல் செய்வது முதல் காதலுக்கு செய்யும் துரோகமாகுமா...?


இன்னொருத்தியை மணந்து கொண்ட பிறகு முதல் காதலியையே நினைத்துக் கொண்டிருத்தல், அவளிடம் முதல் காதலியையே காணமுயற்சித்தல் போன்றவையே துரோகம் ஆகும். காதலி இறந்த பிறகு இன்னொரு காதல் செய்வது துரோகமில்லை.


=======================================================


 கேள்வி எண் : 7
கேட்டவர் : அமரன்


அண்ணே!நையாண்டி எப்படி இருக்க வேண்டும்?


மூணு முக்கிய மூலப் பொருட்கள் இருக்கணும்

1. உண்மை இருக்கணும்
2. நன்மை இருக்கணும்
3. தன்(ண்)மை இருக்கணும்

இவற்றைக் கருத்துடன் கலந்து கெட்டியாப் பிசைந்து உருண்டையாக்கி நகைச்சுவையில் முக்கி எடுத்து வார்த்தை நயம் என்கிற எண்ணெயில் சுட்டுப் பாருங்க, நையாண்டி போண்டா ருசியாய் இருக்கும்.

இன்னும் எளிமையாய் உதாரணம் சொல்லப்போனால் ஆர்.கே.ல்ஷ்மண், மதன் போன்றவர்களின் கார்ட்டூன்கள்


=======================================================

கேள்வி எண் : 8
கேட்டவர் : ஓவியன்


அண்ணா, ஒருவர் தன்னுடைய பல்துறை ஆற்றலை (ஆல் ரவுண்டர் எனலாம்..! ) வளர்த்துக் கொள்ள என்ன, என்ன செய்ய வேண்டும்...??



1. முதல்ல ஒரு துறையிலாவது ஆழமான அறிவை வளர்த்துக்கணும்.

2. பல விஷயங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை கூர்ந்து கண்காணிக்கத் தெரிஞ்சிக்கணும்.

3. இது நமக்கு வரவே வராது என என்றும் துவளக் கூடாது. நிறைய பரிசோதனை செய்து பார்க்கணும்.

4. நிறைய படிக்கணும். படிக்கிற விஷயங்களை அப்படியே நம்பாம பல கோணங்களில் சிந்திச்சுப் பார்க்கணும்.

5. தைரியமா நினைப்பதைச் சொல்லவும், தவறிருந்தால் ஒத்துக்கொண்டு திருத்திக்கவும் மன உறுதி இருக்கணும்.

6. அதுக்கு மேல ஒரே விஷயத்தில் அளவுக்கு மிஞ்சி மூழ்காமல் அளவு தெரிந்து வெளிவரக் கத்துக்கணும்.

இவை எல்லாம் கத்துகிட்டா, எதை வேணும்னாலும் கத்துக்கலாம்.
 
 

No comments:

Post a Comment