Wednesday, December 9, 2009

கவிதையை பிரித்து மேய்வது எப்படி? - பாகம் 2

கல்வியின் தலைவியாக :

கல்வி என்பது வேண்டிப் பெறுவது அல்ல, அந்தக் கல்வி தீயில் இட்டாலும் வேகாது அழியாது..

கலைமகளுக்கு வெண்தாமரை தான் இருக்கை. அதாவது தூய்மையும் மென்மையும் இனிமைகொண்ட தேனும் கொண்டது. அந்த கலைமகள் வாழுமிடம் அதே போல், இனிமையாக தூய்மையாக, மென்மையாக இருத்தல் வேண்டும்..

ஆக நானில்லாத உன் கவிதை இருக்க வேண்டாம் என்றாயே!! அப்படி இருக்க வேண்டுமானால் உன் கவிதையில் இவை இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்.

தமிழாக :

வேண்டுமெனச் சொன்னால் நான் வந்திடுவேனா! இப்படிப் பிழைகள் மலிய எழுத அந்தக் கொழுந்து விட்டெறியும் தீயில் நான் வெந்திடுவேனா?

நானில்லாத என் கவிதை உன் கவிதை வேண்டாமென்றாயே!.. கவிதை வேண்டாம்.. நானிருக்க வெண்தாமரை போன்ற இனிய உள்ளங்கள் இருக்கின்றன.


சாம்பவியாய் :

(ஏன்னா அவருக்கும் இந்தத் தமிழ்க் குழப்படி தெரிஞ்சு போச்சு)

சாம்பவியாய் அவர் சொன்னது இறுதி வரிகள் மட்டுமே..


நானில்லா உன்கவிதை வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை வெண்டாமரையே... !

நான் வேண்டுமென்று கேட்டால் வந்து விடுவேனா..?
கொழுந்தி(யாள்) நீ இனி எனில் நானும் மனதில் நினைத்து வாடி வெந்து விடுவேனா...?

என்னைப்பற்றி எழுதாத உன் கவிதை வேண்டாம் என்றாயே... (ஏன்?)
நா (பேச விடாமல்) நிற்க என் இரு கைகளும் வெண்தாமரையாக காட்சி தருவதாலா..?

(நானிருக்க ஆசைப்படுவது, என் இருக்கை யாக இருக்க வேண்டியது வெள்ளை உள்ளம் கொண்ட தாமரையின் இருக்கை.. அவரைப் போல வர வேண்டுமென ஆசைப்படுகிறேன் எனச் சிலேடையாய் இன்னொன்றும் எழுதி விட்டிருக்கிறார்.)

பொருள் - 7
பித்தா என இறைவன் எடுத்துக் கொடுத்த அடியைப் போல் என்னிருக்கை வெண்டாமரை என என் இதயத்தில் சட்டமாய் அமர்ந்து கொள்வேன் என சாம்பவி சொன்னது "தமிழுக்கு ஒரு தாலாட்டில்"

-----------------------------எந்தன்
உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
--- உட்கார்ந்து கொண்டாயடி

என்று என்றோ எழுதிய ஒரு வரிக்கு தமிழே வந்து ஒப்புதல் சொன்னது போல் அமைந்திருந்தது..

வெண்டாமரை புகழ்ச்சி தந்த வெட்கத்தில் முகம் சிவக்க யோசித்தது..

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

என் உணர்ச்சியை அப்படியே எழுதி விட்டு

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

வண்டாருந்தமிழ் என்பதை வண்டாரும் அருந்தமிழாய் தளைக்காய் சீரமைத்தேன்..

தமிழாய் இங்கே அமர்ந்திர்ப்பது சாம்பவி.. அந்தத் தமிழ் தன் இதழிலிருந்து வார்த்தது தேனை.. உதடுகளுக்கும் இதழ்கள் என்றுதானே பெயர்.. ஆக அந்த இதழ்கள் பூவிதழ்கள் இல்லை.. தமிழின் இதழ்கள்..


உண்டார் அமரர்

தமிழே அமிர்தமல்லவா? அதை உண்டவர் அமரர் அல்லவா? அதாவது தமிழே நீ பொழிந்த தேன்சுவை அமிர்தத்தை உண்டார் அமரர்..

உண்ணார் அமரர் கண்டார் ஆதிச் செந்தமிழே!!

அப்படி உன் தமிழினிமையைக் உண்டு அனுபவித்தவர்கூட ஆதியின் தமிழைக் கண்டால் -- தமிழை உண்ண மாட்டார்கள் (அவ்வளவு பிழை மலிந்திருக்கிறது ) என எழுதினேன்

இது தளைக்காக

உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்

என்று மாறியது..

எழுதிய பிறகு, இதில் புகழ்ச்சி எப்படி இருக்கிறது எனச் சரிபார்த்தேன்

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட -

என்பதில் தமிழின் இதழ்கள் வடித்த தேன் என்பது மறைந்து அந்த இதழ்கள் தாமரைக்குச் சொந்தமானதாக ஒலிப்பதை அறிந்தேன்..

ஆக இரண்டாம் பொருள் பிறந்தது.. இப்பொழுது அமிர்தத் தேன்சுவை தாமரை இதழில் பொழிந்த தமிழுக்கு என மருவியது..

ஆக வெண்டாமரையில் தமிழமர புகழ்ச்சியில் வெட்கிச் சிவந்த தாமரை இதழ்களில் அருந்தமிழ் தேன் கசிய, (தமிழமிழ்திலமிழ்ந்தமிழ்ந்து கசியும் இதழமிழ்ததமிழ் - நினைவிருக்கிறதா??)

அதை உண்பார் அமிழ்துண்ட அமரர் ஆவார். அந்தத் தேனை உண்ணாதார் இவர்களுக்குச் சமமாக அமராமல் ஆதியின் தமிழைச் செந்தமிழ் எனக் கண்டார் எனப் பொருள் வந்தது..



தமிழே, எடுத்துக் கொடுத்த அடி, வீணாய்ப் போகுமா?

ஆதி என்பது நம் ஆதி மட்டும் தானா பழைமை என்றும் பொருளல்லவா? பழமை என்பது மட்டுமல்ல, ஆரம்பகால

ஆக, பழையச் செந்தமிழ் என்றால் என்ன பொருளாகிறது?

முதலில் மனதில் தொன்றிய உருவம், தமிழ் பாட்டி.. பழைய தமிழ் என்பது ஒரு கிழவி தானே..

ஆக ஒரு இளம்மனைவி, ஒரு வயது முதிர்ந்தவள்.. மத்தியில் ஒரு ஆண் அப்ப ஊடல் வரத்தானே செய்யும் என யோசிக்க

அந்த மருதத் திணை அர்த்தம் பொருந்தியது..


இதன் பிறகு கவிதை பதியப் பட,

அதன் பின்னர்தான் மறுபடி சாம்பவியின் தமிழவதாரத்தை மறந்து படித்த பொழுது, அர்த்தங்கள் மொட்டு விட்டு மலரத் தொடங்கின..

பொருள் - 8

தமிழன்னை திட்ட மட்டுமா செய்வாள்?
தட்டிக் கொடுத்து வட்டிலில் அன்னமிட்டு நிலா காட்டிச் சோறூட்டவும் செய்வாளே!

நானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாயே! கலீல் ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளை படிக்கும் ஆதியே, அவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்போம் என்றார் பாரதி..

ஆக
அப்படி நானில்லா உன்கவிதை வேண்டாம் என்றாயே

அப்படி நான் இருக்க வேண்டுமானால் என் இருக்கை இருப்பு வெண்டு (பழுக்காமலேயே உதிரும் காய்கள்) ஆம் அரையே!(வெண்டாமரையே)

அதாவது நான் பாதித் தமிழாய் மட்டுமே இருப்பேன்..!!

இன்னொரு பார்வை!!!

நானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாய்.. அப்படி இல்லாவிட்டால், நான் இருக்க (அதை மொழிமாற்றம் செய்ய, அதில் நான் இருக்க) என் (இருக்கை) இரு கைகளும் தேன் வாரி வழங்கும் வெண் தாமரைகளன்றோ!!!


சாம்பவி இப்படியும் எழுதி இருக்க...

இதன் பதில் எப்படி இருக்கிறது??

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

வாரி வழங்கும் வெண்தாமரை கைகள் செந்தாமரையாய் மலர்ந்து..

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

வண்டுகள் மொய்க்கும் சுவைத்தேனை இதழ்களின் மூலம் அருமைத் தமிழ் வார்த்திட

வெண்டாமரை செந்தாமரையாகக் காரணம் வெட்கம். என்ன வெட்கம்?

புது இடமல்லவா? ஏன் புது இடம், தமிழ் இடம் பெறாத உமர்கய்யாம், கலீல்ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளில் தமிழ் அமர்கிறாள்..

அப்படி அமரும் பொழுது வெட்கத்தில் சிவந்து வெண்டாமரைக் கைகள் சிவக்குமளவுக்கு தேனை வார்க்கிறாள்..

உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே
கண்டா ராதிச் செந்தமிழ்

அதை உண்டு மகிழ்பவர்கள் அமுதுண்டவர்..

ஆதியின் செந்தமிழைக் கண்ட அமரர் இனி தேனை உண்ணார், அந்தத் தமிழை மட்டுமே உண்ணுவார்

இப்படி ஒரு அர்த்தப் பொதிவும் நேர்ப் புகழச்சியாய் மறைந்து நின்று எட்டிப் பார்க்கிறது.

பொருள் - 9

எப்படி இத்தனைப் பொருட்கள் தோண்டத் தோண்ட புதையல் போல வந்து கொண்டே இருக்கின்றன..

கண்டார் ஆதியின் செந்தமிழ் என ஒரு இன் விகுதி வந்திருந்தால் ஒரு பொருளாகி இருக்க வேண்டியது

கண்டார் ஆதிச் செந்தமிழ் என்ற போது

ஆதியின் செந்தமிழ்
பழமைச் சிறப்பு பொருந்திய செந்தமிழ்
வயதான தமிழ்க் கிழவி


இது மட்டுமல்ல

உண்டார் அமரர் - அமரர் இத்தேனைப் பருகினார்
கண்டார் ஆதி இச் செந்தமிழ் - ஆதி இச்செந்தமிழைக் கண்டார்
உண்ணார் அமரரே - மெல்லவும் முடியாமல் ஜீரணிக்கவும் முடியாமல், என்போமல்லவா அப்படி இதைச் சுவைக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பார்

இன்னும் இருக்கே!!!

கண்டு+ஆராதி+(இச்)+செந்தமிழ்

அதாவது இச் செந்தமிழின் பெருமையைக் கண்டு ஆராதியுங்கள்..

உண்ணார் அமரரே

இதுவரை சுவைக்காமல் அமர்ந்திருப்பவர்களே!
கண்டுகொண்டு போற்றுங்கள் இச் செந்தமிழை

என

அழகாக சிலேடை ஒளிந்து கொண்டு விளையாடுவதை கவனிக்க தவறி இருப்பீர்கள்..

இதில் உள்ள அணியும் சிலேடை அணிதான். அமரர், கண்டாராதிச் செந்தமிழ், தாமரை எனப் பலசொற்கள் பல அர்த்தங்களைத் தருமாறு உபயொகப்படுத்தப் பட்டுள்ளன. கவிதைகளில் ஒரு அணி மேலோங்கி நின்றாலும் மற்ற அணிகளும் இருக்கும்..

வெண்தாமரை / செந்தாமரை ஆகி தேன் சொரிந்தது என்பது உவமேயம் இல்லாத உவமை. இது பிறிதுமொழிதல் அணியாகி விடுகிறது.. உவமேயப் பொருளாய் கூறப்பட்டது எது என்பது வாசகரின் கருத்துக்கு விடப்பட்டு விடுகிறது..

அமரர் அமரரே என்பது பின்வரு நிலையணி என்ற போதும் இரண்டாம் அமரரில் சிலேடை மிக்கச் சிறப்பதால், பின்வருநிலையணி மயங்கி விடுகிறது..

மறைபொருளாய் இன்னும் ஒரு பொருள் இருக்கிறது...
பொருள் - 10

ஆதி என்னும் சொல்லுக்கு, அனைத்திற்கும் ஆதியான இறைவனை பொருளாய் கொள்வதினால் நீங்கள் கடைந்து திரட்டிய வெண்ணெய் கிடைக்கப் பெறுகிறது சாலை அவர்களே!

தமிழ்ப் பாடல் சுவைத்துணர்ந்து மகிழும் ஆதிசிவன். தமிழினின் இனிமை உணர்ந்து தானே புலவன் வடிவம் தரித்து தமிழ் பாடி, புலவர்களுடன் விளையாடி ருசித்த தமிழ்...

வெண்டா மரைவெட்கிச் செந்தாமரை மலர

சம்பந்தன் இறை மயங்கிக் கைத்தாளமிட வெண்தாமரைக் கைகள் சிவந்து செந்தாமரையாக ( கண்டு பொற்றாளம் தந்தவர்..)

உண்டார் அமரர்தேன்

நாவுக்கரசனின் பாடல்களில் தேனருந்தி அமர்ந்தவர்..( வேதங்களினால் பூட்டப்பட்ட கதவை திறக்கச் சொல்லி அப்பர் பாட, அதன் சுவையினில் மகிழ்ந்து உண்டு அமர்ந்திருந்த இறைவன்)

உண்ணார் அமரரே

சுந்தரன் தமிழை இழக்க மண(ன)மின்றி தடுத்தாட்கொண்டவர் (அதுவரை சுந்தரன் பாடாதிருக்க, அவன் தமிழுண்ணா பெருமான், ஓடி வந்து பித்தா என அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்து தமிழமுதுண்டாரே )

இவையெல்லாம் எதற்கு..?


வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

அடியார்களின் இதழ்கள் தமிழ் பாடி இனிமை தருவதற்கன்றோ, வண்டார் தேன்சுவை தமிழ் அவர் வாய்மொழி பொழிய

கண்டாரா திச்செந் தமிழ்

ஆதிசிவன் கண்டார் (படைத்தார்) செந்தமிழை!!!


என்பது சித்த உட்பொருள். தமிழில் கலந்திருக்கும் இனிமையே இறைவனல்லவா!!!


பலாப்பழத்தின் ருசி காண எத்தனைப் போராட்டம் நடத்தவேண்டுமோ அத்தனை போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது இப்படி சுவை துய்க்க,,

வார்த்தைகள் எல்லாம் எளிய வார்த்தைகள், அவற்றை அடுக்கிய விதம் தான்.. செய்யுளை இப்படிச் சுரங்கமாக்கி விட்டது.

அதாவது வார்த்தைகள் தெளிக்கப்பட்டு அவற்றிற்கு இடையிலுள்ள தொடர்புகள் நீக்கப்பட்டு விட்டன.

வார்த்தைகளுக்கு இடையேயான அந்த உறவுகளை நிர்ணயிப்பது வாசகனின் மனம்..

குழந்தைகள் விளையாடும் துண்டுகளைப் பொருத்தி உருவம் கொண்டுவரும் முயற்சி..


கலைடாஸ்கோப் தெரியுமே உங்களுக்கு, வண்ணமணிகளை உள்ளே போட்டுக் குலுக்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தால் பல ஒழுங்குள்ள உருவங்கள் கிடைக்கும்.

இதிலும் பலவித புதிய உருவங்கள் வருகின்றன.. அர்த்தமுள்ள உருவங்கள், அர்த்தமில்லா உருவங்கள் என..

கவிதை அதனால் ஆழ்ந்து படிப்பவனுக்கு புதியதாகவே இருக்கிறது, மனம் சலித்துப் போகும் வரை..

இக் கலைடாஸ்கோப்பில், கலைதான் ஸ்கோப், கலையா ஸ்கோப் (நன்றி : சாம்பவி - சொற்சிலம்பம்).

ஆக அருமைச் செந்தமிழுக்கு நேர்புகழ்ச்சி, ஆதியின் தமிழுக்கு வஞ்சப் புகழ்ச்சி என அணிகளிலேயே சிலேடை அமர்ந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடும்.

கவிதையைச் சுவைப்பது என்பது மிக இன்பமானது, சுவை தெரிய வரும்பொழுது..

பத்ம வியூகம் சிக்கலானதாம், பாரதம் சொல்கிறது.. உடைக்கத் தெரிந்தோர் இருவர்தானாம்.. ஆனால் உள்சென்று திரும்பத் தெரிந்தோன் அர்ச்சுனன் மட்டும் தானாம்..

இது ஒன்றும் அப்படி அல்ல..

பிக்காஸோவின் மாடர்ன் ஆர்ட்டைப் போல கை கால் மூக்கு கண் என அங்கங்கே வார்த்தைகள் தெளிக்கப்பட்டு கவிஞனின் சிந்தனைத் திறனை விட வாசகனின் ரசனைத் திறனை நம்பி இருக்கும் இது ஒரு நவீன அணி.

எப்பொழுதாவது மாடர்ன் ஆர்ட்டை ரசித்து அர்த்தம் சொல்வதாய் கதை விடும்பொழுது உதட்டோரம் நெளியும் புன்சிரிப்பிலிருந்து கசியட்டும்

"தாமரைக் கவிதைகள்"

No comments:

Post a Comment