Wednesday, December 23, 2009

தொழிலும் சமுதாய நோக்கும்!!! - பாகம் 2



மென்பொருள் நிபுணன் - அதீத சம்பளம் என்ற என்பதை விடுங்கள். இந்தக் கம்பெனியை விட அந்தக் கம்பெனியில் 30% அதிகச் சம்பளம். என் எக்ஸ்பீரியன்ஸூக்கு அந்தக் கம்பெனியில் 40% அதிகச் சம்பளம் என விலையேற்றிக் கொண்டே போகிறோமே தவிர நமது அறிவை முழுமையாக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகிறோமா என்றுதான் கேள்வி.

நான் செய்யும் வேலை இவ்வளவு மதிப்பு மிக்கது என ஒருவரும் அதன் பயன்பாட்டினைச் சொல்லி இதுவரை ஊதிய உயர்வு கேட்டதில்லை. ஒரு கம்பேரிசன். இண்டலில் இவ்வளவு தருகின்றார்கள், மைக்ரோசாஃப்டில் இவ்வளவு தருகிறார்கள், ஹெச் பி யில் இவ்வளவு தருகிறார்கள் என ஒப்பீடுதான்,,

கம்பெனி என் வேலையால் இவ்வளவு பலன் பெறுகிறது.. அதனால் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என யாருக்கும் சொல்லத் தெரிவதில்லை..

சொல்லப் போனால் கணிணிக் கல்வி இன்னும் 10-15 வருடங்களில் மேம்பட்டு நிறைவு பெறும் பொழுது தானே புரியும்..

தான் செய்யும் பணியின் அடக்க மதிப்பு தெரியாதவன் போட்டிகள் குவியும் பொழுது காணாமல் போய்விடுகிறான்.


நமது சந்தோஷத்திற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம் என்பதே பொழுது போக்கிற்கு நாம் செலவழிப்பது சுட்டிக் காண்பிக்கிறது. நாம் ஆக்க பூர்வமாக பணி செய்யும் காலங்களை விட பொழுது போக்கும் நேரங்கள் அதிகரித்து வருகின்றன.


ஆனால், வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப் பாருங்கள்.. அவர்கள் பொழுது போக்கிற்காக செலவிடும் நேரத்தைப் பாருங்கள்.. சூட்சமம் அங்கே தான் இருக்கிறது.

புகழ் போதை, சொகுசுத்தனம், கர்வம் இவை அதிகரிப்பதால்தான் நாம் இந்த வலையில் அகப்பட்டுக் கொண்டுள்ளோம். இதனாலேயே எளிதில் பணம் செய்யும் வழிகளை தேடுகிறோம். ஏமாற்றவும் தயங்குவதில்லை.

எந்த ஒரு தொழிலும் நமக்கு இப்பொழுது முழுமையாகத் தெரிவதில்லை. ஒரு சிறு பகுதியையே செய்கிறோம்.. மற்ற பகுதிகளைப் பற்றிய அறிவின்றியே நாம் செய்யும் வேலை கிரேட் என மார்தட்டிக் கொள்கிறோம்...

ஆனால் எளிமையானவை என நாம் கருதும் பல தொழில்கள் உண்மையிலேயே முக்கியமானவை. இதைக் கருத்தில் கொள்ளவேண்டும்..

இன்னும் சில தொழில்கள், புகையிலைத் தொழில்கள் / மதுபானத் தொழில்கள், இவை அளவற்ற தீமை தருபவை.. இவற்றை அங்கீகரித்து மிகப்பெரிய தொழிற்சாலைகள் இதன் மூலம் இயக்குகிறோம். இதனால் மனித சமுதாயத்திற்குக் கேடுதானே.

தொழில்களை நான்கு விதமாக பிரிப்போம்.

1. அன்றாடத் தேவைகளுக்கான தொழில்கள், உணவு, குடிநீர், இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து, தொலைதொடர்பு என தினம் தினம் நமக்கு தேவையைத் தீர்க்கும் தொழில்கள்.

2. நீண்ட நாள் திட்டங்களுக்கான வேலைகள் - மருந்து ஆராய்ட்சி, விண்வெளி ஆராய்ட்சி.. தொழில் நுட்ப ஆராய்ட்சி போன்றவை.. இதைச் செய்பவருக்கு செய்முறை கிடையாது.. மிகுந்த அறிவு தேவைப்படும் தொழில்கள். கணிணிப் பொறியாளர்களாகிய பலர் முதலாம் வகை தொழில் செய்தாலும், அதை இரண்டாம் வகைத் தொழிலாக காட்டிக் கொள்கிறார்கள். அந்தக் குட்டு உடையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

3. பொழுதுபோக்கு.. முதலிரண்டு தொழில் புரிவோர் மனம் உற்சாகப்பட, அவர்களின் மனதை புத்துணர்வு ஊட்டும் வகையில் கலைகளைக் கொண்டு பணிபுரிவது.. மகிழ்ச்சியுடன் சம்பந்தப் படுவதினாலேயே, இவர்களின் வருமானம் அதிகமாக இருக்கிறது.. சந்தோசமா இருக்கும் பொழுது வாரி வாரிக் கொடுக்கும் வள்ளல் மனம் கொண்ட அடிப்படை மனோதத்துவம் தான் இவர்களின் அளவுக்கு மீறிய வருமானத்திற்குக் காரணம்

4. கெடு தொழில்கள். சமுதாயத்திற்கே எதிரான தொழில்கள்.. சிகரெட் தயாரிப்பு சொன்னேனல்லவா அது மாதிரி..


முதல் வகைத் தொழில் செய்பவர்கள் இவ்வுலகில் மிக அதிகம்.

இரண்டாம் வகைத் தொழில் செய்பவர்கள் நீங்கள் சொல்லும் அந்த அறிவு, மற்றும் டெடிகேசனுக்காக அதிக ஊதியம் பெற வேண்டியவர்கள்..


மூன்றாம் வகைத் தொழில் செய்பவர்கள் எண்ணிக்கையில் இரண்டாம் நிலையில் இருக்கிறார்கள்


ஆனால் இவர்களை எல்லாம் விட, இந்தத் தொழில்களை இணைக்கும் வியாபாரிகளே அதிக லாபம் பெறுகின்றனர் இல்லையா?


எங்கு எது தேவை? எங்கு எது கிடைக்கிறது?

டிமாண்ட் அண்ட் சப்ளை..

இதை சரியான முறையில் இணைக்கும் வியாபாரிதான் அதிகம் சம்பாதிக்கிறான்..

சமுதாயத்தினால் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மறக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் இது..

சமுதாயத்தை இப்பொழுது நம்முடைய ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்..

நாம் சமுதாயத்தின் ஒரு பகுதி என்பதை மெல்ல மெல்ல மறந்துகொண்டு..




.

No comments:

Post a Comment