அந்த ஏழு நாட்கள்! - பாகம் 1
எத்தனை நாட்கள்தான் இப்படியே போகப் போகிறது! ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வருமே.. "Every dog has it's own day!"
ஒரு நாளாவது ஹீரோவா வாழ்ந்திடனும். அதுக்காகத்தான் எத்தனைச் சிரமப் பட்டாச்சு.. சனியன் சந்து முனையில எப்பவுமே காத்துகிட்டே இருப்பார் போல இருக்கு கவுக்கிறதுக்கு..
அப்படித்தாங்க அன்னிக்குன்னு மனைவிகிட்ட சவால் விட்டாச்சு.. ஒரு வாரம்தானே! நான் எட்டு வருஷமா சமைச்சு சாப்பிட்டவனாக்கும். 30 பேர் வந்தாலும் முக்கா மணி நேரத்தில விருந்து பண்ணி அசத்திட மாட்டேன்.. நாலு அடுப்பில நாலு பாகங்கள் ஒரே சமயத்தில பண்ற கில்லாடியாக்கும்.. என்ன நினைச்ச நீ. ஒரு வாரம் தனியா இருக்க மாட்டனா என்ன? எனக்கு வேலை இருக்கு நீ போய்ட்டு வா! (அதுக்குள்ள எனக்குள்ள நான் தங்கமணி ஊருக்கு போயிட்டான்னு பத்து முறையாவது குதிச்சாச்சு).
அந்த ஒரு மங்களகரமான புதன்கிழமை.. காலை 10:00 மணிக்கு அவளை ட்ரெய்ன்ல ஏத்தி விட்டாச்சு. ஆமாம் குழந்தைங்க சகிதமாத்தான். அப்பதான் பாசம் பெருக்கெடுக்க மினரல் வாட்டரென்ன, குர்குரே என்ன, வார மாத புத்தகம் என்ன? ஜாக்கிரதையா போகணும்.. அம்மா கூடவே இருக்கணும்.. எல்லாம் சொல்ல..
பாத்துங்க.. வேளா வேளைக்குச் சாப்பிடுங்க.. கச்ச்ட்ஜ்வ்ட் வ்க்ஜ்ப் வ்ட்வ் ட்வ்ப்ஜ்பொ வ்fவ்ப்ன்fப்
யாரு கேட்டா என்ன சொன்னாள்னு .. அப்படித்தான் எதோ கசமுசன்னு உளறிக்கிட்டிருந்தா! நான் தான் வேற உலகத்தில இருந்தனே!.. எவன் கேட்டான் இவள் உளறலையெல்லாம்.. இந்த ட்ரெய்ன் வேற ஒரு கழுத்தறுப்பு நேரத்துக்கு எடுக்க மாட்டானே.. பஸ் மாதிரி விசிலடிச்சனா எடுத்தனான்னு இல்லாம, ஹாரனாம், சிக்னலாம், பச்சைக் கொடியாம்.. விட்டா ஒவ்வொரு பொட்டியிலிருந்தும் சிக்னல் குடுப்பாங்க போல இருக்கு எடுத்துத் தொலைங்கடா! என் பொறுமையைச் சோதிக்கவே பொறப்பெடுத்திருக்கானுங்க..
பின்ன என்னங்க.. வந்தமா ஏறனமா போனமான்னு இருக்கா ட்ரெய்னு.. ஒண்ணரை மணி நேரத்துக்கு முன்னால வீட்ல இருந்து புறப்பட்டு டிராஃபிக்ல புலம்பிகிட்டே ஹாரன் அடிச்சி, சிக்னலில் புலம்பி, கட் பண்ற பைக்காரன்களை திட்டி ஸ்டெஷனுக்கு வந்தா பார்க்கிங் லாட்ல சுத்தி கிடைச்ச ஒரு சந்தில காரைச் சொருகி நிறுத்திட்டு, லக்கேஜைத் தூக்கிகிட்டு லொங்கு லொங்குன்னு நடந்து பிரிட்ஜேறி இறங்கி, கம்பார்ட்மெண்ட் தேடி எல்லாத்தையும் ஏற்றி விட்டு, அப்புறம் என்ன வேணும்னு கேட்டு எல்லாத்தையும் வாங்கித் தந்து அந்தப் புலம்பலையெல்லாம் கேட்காமல் கேட்கற மாதிரி நடிச்சு.. இவ்வளவு கஷ்டமெல்லாம் எதுக்கு?
அந்த ஒரு வாரச் சுதந்திரத்துக்குத் தானே!
அதுலயும் இப்படி டிலே பண்ணினா எப்படி?
ஒருவழியா ட்ரெய்ன் கிளம்பியாச்சு.. ட்ரெய்ன் வேகமெடுக்க வேகமெடுக்க மெதுவா போய்கிட்டு இருந்த காலமும் வேகமெடுத்திச்சு.. சந்தோஷம் வந்துட்டாத்தான் இந்த வாட்சுக்கு கூட புது எனர்ஜி வந்துரும் போல.. முள்ளுங்க ரெண்டும் குடுகுடுன்னு ஓடுதே!..
ஆஃபிஸில் ரெண்டு மணிநேரம் பர்மிஷன் போட்டிருக்கு. போனா கொஞ்ச நேரத்தில லஞ்ச் அவுட் போகணும்.. பின்ன கொண்டாட்டத்தோட தொடங்க வேணாமா?
சரக்கென்று கார்பார்க்கிங்கில் இருந்து காரை உருவினேன்,, டங்கென்ற சத்தம்..
தொடரும்.
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 2
காரோட பின் பக்கம் பம்பர் அந்தப் பில்லரில் மோதி மூளியாகி இருந்தது.. என்னடா இது ஆரம்பமே அடிவிழுதே!
ம்ம்ம்.. எல்லாம் அவளோட பொருமல்தான்னு நினைக்கிறேன்.. இதுக்கெல்லாம் அசருவமா? ஆனா திரும்பி வந்தா பின்னிப் பெடலெடுத்துடுவாளே! இன்னிக்கே ரிப்பேருக்கு விட்டா போச்சு, ரெகுலர் சர்வீஸ்னு மழுப்பிரலாம்
மெல்ல வெளிய வந்தேன்.. மணி 11:00. ஆஃபீஸூக்கு போனா 12:00. அப்படி இப்படிச் சுத்தி எல்லாத்துக்கும் ஹாய் சொல்லிட்டு திரும்ப வந்தா கேங் ரெடி..
எங்க போலாம்? சைனீஷ்? இடாலியன்? ஜெர்மன்? மெக்ஸிகன்? செட்டிநாடு? முகல்? பார்பேக்யூ? 30 நிமிஷ டிஸ்கஷனுக்கு பின்னால பார்பேக்யூ முடிவாச்சு.
மூணு காரு.. எல்லாரும் துக்கம் விசாரிக்க, ஒரு டூ வீலர் சிக்னல்ல நிக்கும் போது இடிச்சுட்டான், பாவமா இருந்துச்சு மன்னிச்சு உட்டுட்டேன்னு சின்னதா சுத்திட்டு போனேன்.
ஏதோ பார்பேக்யூன்னா கொஞ்சம் ஐட்டங்கள்தான் இருக்கும்னு போனா அதிர்ச்சி.. பஃபே 450 ரூபா.. 12 பேரு.. சர்வீஸ் டேக்ஸ் 12% பில் 6048.. டிப்ஸ் என்ன வைக்கலாம்னு யோசிச்சு (100க்கு கம்மியா வச்சா நம்ம மரியாதை என்னாறது) 6200 ரவுண்டா (தலையும்தான் ரவுண்டா மொட்டை).
3 மணிக்கு ஆஃபீஸ் வந்தாச்சு. கொடுத்த காசுக்கு வஞ்சனியில்லாம தின்னதுக்கு தூக்கம் கண்னைக் கட்டுது.. இதில வேலை எங்க பாக்க.. எழுத்தெல்லாம் ஏரித்தண்ணி காத்திலாடற மாதிரி அலையலையா தெரியுது, அப்படியே அக்கம் பக்கத்தில அரட்டை அடிச்சு டயத்தை ஓட்டியாச்சு.. சரி சரி.. பொறு பொறு எழுமணிக்குத்தானே ஆரம்பம்.. அதையும் இதையும் மேஞ்சுட்டு 6:30 மணிக்கே கடையைச் சாத்தியச்சு!
அவசராவசரமாக் காரைக் கிளப்பி அந்த பப்புக்கு போனேன். 8;00 மணி வரைக்கும்தானே ஹேப்பி ஹவர்.. ஒண்ணு வாங்கினா இன்னொன்னு ஃபிரீ. இதுக்குன்னு கம்பெனி குடுக்கறதுக்குத்தானே நம்ம கேங்கே இருக்கு. எல்லாரும் ஆஜர்.
2000, 5000 என ஆரம்பித்தது. செக்கச் செவேல் என ஆடையுடுத்தி சிக்கன்கள் அணிவகுக்க, கேலியும் கூத்துமாய் கழிந்தது..
ஸார், கிச்சன் இஸ் க்ளோசிங்.. ஃபுட் ஆர்டர்.. சர்வரின் கடைசிக் கெஞ்சலுக்கு நானும், சில ஐட்டங்களும் ஆர்டர் ஆக.. மணி 11:30 எட்டியபோது சிக்கன் எலும்புகள் வெளுத்துக் கிடக்க, காலிக் கோப்பைகளும், அவசரமாய் கொறிக்கப்பட்ட சில பல நான் துண்டுகளும் சிதறிக் கிடக்க.. எவ்வளவோ பில் கொடுத்து புறப்பட்டோம்
வீட்டுக்கு வந்து, கதவைத் திறந்து உடை மாற்றிப் படுக்கையில் விழுந்தேன்.. எவ்வளவு நேரம்னு தெரியாது.. கண்கள் கூச, தலையில் சம்மட்டிக் கொண்டு யாரோ அடிக்க வலியுடன் கண் திறந்தேன்.. டி.வி. ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தது.. எழுந்து பார்த்தால் வாசல் கதவு அடையா நெடுங்கதவு மாதிரி திறந்து கிடந்தது.. காஃபி.. வாய்க்குள்ளே அந்த வார்த்தையை விழுங்கிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தேன்
தொடரும்.
அந்த 7 நாட்கள் - பாகம் 3
பால் இல்லை.. அதானே டோக்கன் வச்சாதானே பால் போடுவான்.. எத்தனை முறை தட்டிப் பாத்தானோ, இல்ல உள்ள வந்து எதையாவது தூக்கிட்டுப் போனானோ தெரியலையே!
தலைவலிக்க வறட்டீ (பிளாக் டீ) யாவது போடலாம்னு அடுப்பில பாத்திரம் வச்சு தண்ணீர் டீத்தூள் சர்க்கரைப் போட்டு வச்சிட்டு பல்லு விளக்க வந்தேன்.
இந்த பல்லு விளக்கறது இருக்கே, சின்ன பிராஸஸ்தான். பிரஸ்ல கொஞ்சமாக்க பேஸ்ட் வச்சு மேலும் கீழும் அசைத்து சர்க்கிள் மோஷன் அப் அண்ட் டௌன் மோஷன், சைட்வைஸ் மோஷன்..
இந்த கண்ணாடி பாத்துகிட்டே வாயைப் பலவிதங்களில் திறந்து பலகோணங்களில் முகத்தை அலசி, நேத்தைக்கும் இன்னிக்கும் மத்தியில முகத்தில் கொஞ்சம் மாறிய சுருக்கங்கள், மூக்குக்கு சைட்ல சூட்டில் எழுந்த சின்ன வெள்ளைக் கொப்புளம், திருத்திய மீசையில் ஒழுங்கில்லாம வளர்ந்த சின்ன முடி (ஷேவ் பண்ணும் போது இதை ஒதுக்கிரணும்) கண்ணில் ஓடிய செவ்வரி ரேகை, புன்னகைக்கிற போது கன்னத்தில் விழற சின்னக்குழி எல்லாம் சரிபார்த்து வாயில் தண்ணீர் விட்டுக் கொப்புளிக்கும் போது சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற சத்தம் வந்தது..
ஓடிப் போய் பார்த்தா வறட்டீ பாத்திரம் வறண்டு கருகி...
போச்சுடா, சூட்டோட சூடா சுத்தம் பண்ணாட்டி மானத்தை வாங்கிடுமே..
ஒரு துண்டு புளி போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டேன்..
வறட்டீக்கும் வக்கில்லை.. சரின்னு தண்ணி சூடானதும்.. பாத்திரத்தை தேய்த்து விம் போட்டுக் கழுவ பளிச்...
நேரம் ஆயிட்டே இருக்கே.. அவசர அவசரமா குளிச்சு ரெடியாக பசிச்சது..
ரெண்டு முட்டையை அவிக்கப் போட்டேன்.. முட்டை அவிப்பதில் ஒரு சின்ன டிப்ஸ் இருக்குங்க.. முட்டை உடையாம இருக்கணும்னா தண்ணி ரேபிட் சூடு ஆகக் கூடாது.. முட்டை ஃப்ரிஜ்ல இருந்ததுன்னா எடுத்து தண்ணில போட்டு வச்சிரணும்.. கொஞ்ச நேரம் கழிச்சு, அடுப்பைப் பத்த வச்சு, முட்டைக்கு மேல ஒரு ஒண்ணரை இஞ்ச் தண்ணி இருக்கற மாதிரி தண்ணி ஊத்தணும்.. அதிகமா போச்சுன்னா முட்டை கொதிக்கற தண்ணில குதிச்சு உடைய சான்ஸ் இருக்கு,, கம்மியா போச்சுன்னா முட்டை அடிப்பாகத்தில் ஓவரா கட்டியாகி,, மேல கொழ கொழன்னு கொல்லும்..
அதே மாதிரிதான்.. முட்டையை அவசரமா உரிக்கணும்னா அவிச்ச முட்டையை ஓடும் பச்சைத்தண்ணியில லைட்டா காட்டுணமின்னா, ஓடு குளிரும்.. அப்ப டக்குன்னு ஒரு ஓரமா தட்டி உரிக்க ஆரம்பிச்சா நல்லா உரிக்கலாம். சூடு ஆறும்னு காத்துகிட்டு இருந்தா காத்து கிட்டேதான் இருக்கணும்..
சில பேர் முட்டைய வெட்டி, உப்பு , மிளகுத்தூள் போட்டு நிதானமா ரசிச்சுச் சாப்பிடுவாங்க சிலபேர் வெள்ளைதனியா பிச்சி எடுத்து சாப்டுட்டு அப்புறம் மஞ்சள் கருவை மட்டுமே தனியா மாவு மாதிரி ரசிச்சு சாப்பிடுவாங்க.. சிலபேர் அப்படியே சகட்டு மேனிக்கு கடிச்சு சாப்பிடுவாங்க..
ஆனா, வெட்டி, உப்பு மிளகு போட்டு அழகுபடுத்தி, ரசிச்சு சாப்பிடனுங்க முட்டைய.. அப்பதானுங்க திருப்தி இருக்கும்..
அப்படித்தான் சாப்பிட்டு விட்டு, ஆஃபீஸூக்கு கிளம்பினேன்..
கதவுக்குப் பின்னால இருந்த ஷீ செல்ஃப்ல இருந்து ஷூ பாலிஷ் எடுக்க (அட ஷூதான் கதவு பக்கத்தில இருக்கே.. ) கதவை மூட
கதவின் பின்னால அது இருந்தது...
தொடரும்.
அந்த 7 நட்கள் - பாகம் 4
கதவுக்குப் பின்னால் தர்மபத்தினி கடமையாய் எழுதி வைத்த போஸ்ட் இட் நோட்டுகள்.
1. கேஸை ஆஃப் செய்யவும்
2. ஹீட்டரை ஆஃப் செய்யவும்
3. பின் கதவு சரியாக சாத்தியிருக்கா கவனிக்கவும்
4. அனைத்து ஃபேன்களையும் ஆஃப் செய்யவும்
5. டெலிஃபோன் பில் கட்டவும்
7. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவும்
8. ஃபிரிட்ஜ் கதவை மூடி வைக்கவும்
9. கதவு பூட்டி இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ளவும்
10. கரண்ட் பில் கட்டவும்
11. செருப்பை வீட்டுக்கு வெளியே மட்டும் உபயோகிக்கவும்
யோசிச்சி யோசிச்சு எழுதின மாதிரி நான் எதெதை மறப்பனோ அத்தனையும் எழுதி ஒரு இருபது அம்சத் திட்டமே போட்டு வச்சிருந்தாக..
கடமையே கண்ணான நான் அதையெல்லாம்...
கண்டுக்காம ஷூவை மாட்டிக் கொண்டு கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன்..
டீ இல்லாததால் தலை விண் விண் எனத் தெரித்தது.. போகிற வழியில் ஒரு டீக்கடையில் டீ சாப்டு விட்டு ஆஃபீஸூக்குப் போயாச்சு..
வியாழக் கிழமை எப்பவுமே பிஸி நாள்.. காலையில உள்ள போன உடனே மீட்டிங்...
சின்ன சப்தமெல்லாம் தலை வலிக்கறப்ப பெரிய கூச்சலாத் தோணும்.. ஒண்ணுக்கு நாலு மடங்கா.. அதேதான் ஆச்சு,
எப்பதான் மீட்டிங் முடியுமோ திரும்பத் திரும்ப அதே முட்டாள்தனமான சந்தேகங்கள் எங்கிருந்து தான் வருமே.. டேய் முடிங்கடா சீக்கிட்ரம் பசி வயித்தைக் கிள்ளுதுறா....
எப்படியோ தப்பித்து 12:30 க்கு கேண்டீன்ல ஆஜர்.. ஃபுல் மீல் கட்டை முடிச்சு, தண்ணி குடிச்சு. காலாற ஒரு வாக்கிங் போய்ட்டு வந்தா..
வியாழக் கிழமையாச்சே டீம் மீட்டிங். ..அப்புறம் மேனேஜ்மெண்ட் மீட்டிங்
வரிசை கட்டி கான்ஃபெரன்ஸ் ரூம்ல இருந்து கன்ஃபெரன்ஸ் ரூமிற்கு ஓடிகிட்டே இருக்கேன்.
எல்லாம் முடிஞ்சு மெயில்பாக்ஸை ஓபன் பண்ணினா அங்க ஒரு முன்னூறு மெயில் என்னப் பாரு என் அழகைப் பாருன்னு..
எனக்கு ஒரு நல்லப் பழக்கம்.. மெயில் ஓபன் பண்ணினா ஒண்ணு பதில் எழுதிருவேன்.. இல்ல டெலீட் பண்ணிருவேன்.. இல்லைன்னா ஆக்சன் ஐடம் போட்டுடுவேன்.. பின்ன இத்தனை மெயிலை 2:00 மணி நேரத்தில சமாளிக்கிறது சும்மாவா?
இன்னிக்குக் கொஞ்சம் அதிக மெயில்தான்.. படிச்சு முடிக்கவே மணி 8:00 ஆயிடுச்சி.. பசி வயித்தக் கிள்ள..
கார் இன்றும் அதே பார் வாசலில் போய் நின்றது.
தொடரும்.
அந்த ஏழு நாட்கள் - பாகம் 5
பார் முன் கார் நின்றபோது லகலகலகலகலகலக லகலகலகலகலகலக என்று சத்தம் வர.. (அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க) எடுத்தேன்..
பத்தினிதான்
ஏங்க வீட்டுக்கு வந்தாச்சா? எப்படி இருக்கீங்க என்று ஆரம்பிக்க
இல்லம்மா ஆஃபீஸ்ல இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு கான் கால் இருக்கு,, அது முடிய எப்படியும் இண்ணும் ஒண்ணரை மணி நேரம் ஆகும் அப்புறம் எங்கயாவது சாப்டுட்டு தான் வீட்டுக்குப் போகணும்...
இது பொய்யா மெய்யான்னு கேட்கற உங்களுக்கே புரியலை இல்லை. அந்தப் பக்கம் இருக்கிற அம்மணியும் இது பொய்யா மெய்யாங்கற கன்ஃபியூசன்லியே போனைக் கட்பண்ண..
தினம் தினம் இப்படி பாருக்கெல்லாம் போககூடாது.. .எனக்குள்ள இருந்த அவன் எனக்கு அறிவுரை சொல்ல பணிவுடன் கேட்டுக் கொண்டே உள்ளே போனேன்,
வழக்கம் போலத்தான்....
ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்தவனாச்சே.. இன்னும் எத்தனை நாள் பாக்கி இருக்கு? 5 நாள்.. 5x120 = 620... ஆக
பாத்தீங்களா பசங்க பக்குன்னு பத்திகிட்டானுக நீங்கதான் முழிக்கிறீக.. அதாங்க ஒரு நாளைக்கு ரெண்டு லார்ஜ்னா, 5 நாளைக்கு ஒரு ஃபுல்..
இந்த கணக்கு கூடத் தெரியாதா?
ஆமாம், ஹீரோ இருந்தா மட்டும் போதுமா, ஹீரோயின், வில்லன், காமெடியன், எல்லாம் வேணுமே! கடைசி நிமிடத்தில அந்த கடைக்குப் போய் சாஃப்ட் டிரிங்க்ஸ், கொறிக்க..
அப்புறம், ஃப்ரோசன் சிக்கன் லாலிபாப்ஸ், ஹைதராபாத் பிரியாணி, அது இதுன்னு அஞ்சு நாளைக்குக் கால்குலேட் பண்ணி எல்லாம் வாங்கியாச்சி..
இனிக் கவலையில்லை.. சாயங்காலம் ஆனா வீட்லயே எல்லாம் பண்ணிக்க்லாம்.. நல்ல பையனா காலா காலத்தில வீடு போய் நிம்மதியா சாப்டுகிட்டே சாப்பிடலாம்...
இன்னிக்குக் கொஞ்சம் தெளிவாவே இருந்தேன்..
தலைவலி இன்னும் லேசா இருந்து பால் கூப்பனை எடுத்து வைக்க நினவு செய்தது..
வீட்டை பூட்டிக் கொண்டு, ஹாலில் உட்கார்ந்து டிவி யை ஆன் செய்தேன்..
எல்லாச் சேனல்களையும் சுத்தி வந்து நல்ல தெலுங்கு பாடல் சேனலா செலக்ட் பண்ணி போட்டேன்,,
--------------------------------------------
எதோ கண்ணுக்கு முன்னால மின்மினிகள் சுத்தி வர்ரா மாதிரி வெளிச்சங்கள் அணைந்து அணைந்து எறிய எதையோ வாங்கச் சொல்லி யாரோ ஒரு பொண்ணு ரெகமெண்ட் பண்ணிகிட்டு இருந்தா...
தொடரும்
அந்த ஏழு நாட்கள் - பாகம் 6
விடியற்காலை 4:00 வாயெல்லாம் வறண்டு ஒரே தாகம்.. தலைவலி.. என்னடா இதுன்னு தண்ணீர் குடிச்சா வயித்தைச் சுருட்டிகிட்டு வருது வாமிட்..
கன்கள் எரிய, தலை குடைய.. எனக்குத் தெரிந்த ஒரே வழி லெமன் டீதான்..
அதாங்க.. நம்ம வறட்டி வச்சிரணும்.. அப்புறம் அது கொதிச்சதும் கொஞ்சம் லெமன் பிழிஞ்சு சாப்பிட்டா இது மாதிரி உபாதைகள் குறையும்.. 4 மணி எப்படி இருக்கும்னு இப்பதான் தெரியுது..
லெமன் டீ குடிச்சப்பறம் கொஞ்சம் ஆசுவாசமானேன்.. டீவி ஓடியது தலைவழியாய் இருக்க அதை அணைத்து விட்டு கும்மிருட்டில் குப்புறப் படுத்துகிட்டு, கண்ணைச் சுற்றி ஒரு துண்டால இறுக்கிக் கட்டிகிட்டேன்..
தூக்கமா அது போய் மாமாங்கமாச்சே..
ஆறரை மணிக்கு மறுபடி எழுந்து முதன் முறையா பால் விட்டு டீ காய்ச்சினேன். டீ காய்ச்சூம் போது ஒரு சின்ன விஷயம் என்னன்னா, சர்க்கரையை முதல்ல போடறதா கடைசில போடறதா? விஷயம் சீரியஸ்..
சர்க்கரையை முதல்ல போடணும்னா பாலை ஊத்தி சர்க்கரையை கரைச்சிட்டு அடுப்பில வைக்கணும் இல்லைன்னா, சர்க்கரை சரியா கரையலைன்னா, கொஞ்சம் அதிகமா போட்டுக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்னா, புகை வாசம் பிடிச்ச டீ சாப்பிட உங்களைத் தயார் படுத்திக்கணும்.
அதே மாதிரி, பால் பொங்கினவுடன் அணைப்பவர்கள் சிலர் இருப்பாங்க.. ஸ்ட்ராங் டீன்னா பயப்படும் கும்பல் அது.. பால் பொங்கிய பின் அப்படியே மெதுவா சூடு பண்ண பண்ண டீயோட கலர் மாறும் பாருங்க.. உங்களுக்குப் பிடிச்ச கலர் வந்ததும் இறக்கிக்கலாம்..
சர்க்கரை பிடிக்காதவங்க வேணும்னா கடைசியில் சர்க்கரை சேர்க்கலாம். இதில் என்ன சூட்சமமா,, பால்ல சர்க்கரை சேர்த்து காய்ச்சினம்னா, பால் திரியற நிலைமையில் இருந்தா திரிஞ்சிரும்.. அதனால இப்பவோ அப்பவோ இருக்கிற பால், அதுவும் கெஸ்டுக்கு டீ போடறதுன்னா, முதல்ல, சிம் ல ஸ்டவ்வை வச்சு மெதுவா சூடுபண்ணி, பால் நுரை தள்ளரப்ப, டீத்தூள் போட்டு கடைசியா சர்க்கரை போட்டு கலக்கணும்..
ஆச்சு டீயும் ஆச்சு, குளிச்சாச்சு.. இன்னிக்கு காலையில டிஃபன் பொங்கல்..
அப்போ டெலிஃபோன் மணியடிச்சது..
தொடரும்.
அந்த ஏழு நாட்கள் - பாகம் 7
ஃபோன் அம்மணி கிட்ட இருந்துதான்னு தெரியும்.. அதான் செல்ஃபோன்ல காலர் ஐடி குடுத்து வசதி பண்ணி வச்சிருக்கானே!.. இப்படி திடீர்னு எழுந்த உடனே ஃபோன் பண்ணினா மட்டும் தூக்கக் கலக்கத்தில உண்மை பேசுவமா என்ன?
வென்னீரில் இட்டு சூடாக்கிய ரெடி மேட் பொங்கல் சாப்டுட்டு.. கிளம்பிட்டு அம்மிணிக்கு போன் செய்தேன்..
என்னங்க ஃபோன் செஞ்சனே ஏன் எடுக்கலைன்னு கேட்க..
குளிச்சிகிட்டு இருந்தேன்மா.. அவசரமா ஆஃபீஸ் போகணும்,.. என்ன விஷயம் சொல்லு..
இல்லீங்க.. சும்மாதான்.. வேளா வேளைக்கு சாப்பிடறீங்களா? முடிஞ்ச வரைக்கும் வெளியிலயே சாப்பிடுங்க.. கிச்சனை முடிஞ்ச வரை சுத்தமா வச்சுக்குங்க..
டெலிஃபோன் பில் வந்ததா? கட்டிட்டீங்களா, எலக்ட்ரிசிடி பில்.. அப்புறம் பின் கதவை ஞாபகமே மூடியே வைங்க.. நான் வந்து கிளீன் பண்ணிக்கறேன்..
ம்ம்ம் வீட்டை அப்பப்போ சும்மா கூட்டி வச்சிருங்க போதும்.. தொடைக்க எல்லாம் வேண்டாம்.. நான் வந்து கழுவிக்கிறேன்..
ப்ளா ப்ளா ப்ளா ப்ளா ப்ளா சொல்லிக் கொண்டே போக என் கார் சர்வீஸ் செண்டர் முன் நின்றது..
சரிம்மா ஆஃபீஸ் வந்துடுச்சி அப்புறமா பேசறேன் அவசர வேலை இருக்கு..
காரை சர்வீஸுக்கு விட்டேன்.. பெண்டு எடுத்திரலாம் சார்.. கொஞ்சம் ஹீட் டிரீட்மெண்ட் குடுத்தா வந்திரும்.. ஆன பெயிண்ட் ஸ்க்ரேட்சஸ் இருக்கும்..
சரி பரவாயில்லை.. இன்னும் நாலைஞ்சு இடத்திலே ஸ்க்ரேட்ச் பண்ணினா இது புது டிசைன்னு ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்க வந்திருவாங்க.. அந்த அளவுக்கு சுத்தியும் ஸ்கிரேட்ச்..
ஆட்டோ பிடித்து ஆஃபீஸ் போனேன்.. அதிக வேலை ஒண்ணும் இல்லை.. இருந்தாலும் டைம் வேகமா போச்சி.. மதியச் சாப்பாட்டுக்கு வெளியப் போகலாமா.. ஒரு பலிகடா கேட்க.. ஸ்யூர்.. போலாமே...
12:00 க்கு கிளம்ப ஆரம்பிச்ச போது மறுபடியும் ஃபோன்.. சாப்பாடு நேரம் வந்தாலே இந்த மனைவிகளுக்கு கணவன் ஞாபகம் வந்திரும் போல..
என்னம்மா? எதாவது முக்கிய விஷயமா? அவசரமா ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன்.. சொல்லு..
மறுபடியும் வேளா வேளைக்கு சாப்பிடுங்க புலம்பலும்.. உடம்பைப் பாத்துக்கங்க புலம்பலும் தான்..
மத்தியானம் சாப்டுகிட்டு இருந்தப்பவே சாயங்காலம் பார்ட்டியும் புக் ஆயிடுச்சி..
ஹி ஹி.. ஆஃபிஸ்ல இரு சின்ன கேங்.. TGIF - இல்லை தேங் காட் இட்ஸ் ஃபிரைடே இல்லை.. தண்ணி கேங் இன் Fxxxxxxxxxxx...
5 பேர்.. நாலு பேச்சுலர்.. நான் மட்டும் தான் கல்யாணம் ஆனது.. அவங்களுக்கு எல்லாம் என் மேல் பொறாமை. .கல்யாணம் ஆன பின்னாலும் இவர் மாதிரி வாழணும் னு ஒரு கொள்கைன்னா பாத்துக்கங்களேன்.. உட்கார்ந்து பேசினா நாலஞ்சு மணி நேரம் கதை ஓடும்.
இன்னிக்கு மறுபடியும் நம்ம ரெகுலர் மீட்டிங் பிளேஸ்தான்.. 5 மணிக்கே அம்மணியைக் கூப்பிட்டு அன்பொழுக பேசினேன்.. (ஆமாம் அங்க உட்கர்ந்திருக்கும் போது ஃபோன் பண்ணுவாங்களே.. எதுக்கு வம்பு..) ராத்திரி செகண்ட் ஷோ போறதா சொல்லி ஃபோன் வராம இருக்க கன்ஃபார்ம் பண்ணிகிட்டேன்..
ராத்திர் பார்ட்டியும் ஜாலியாதான் முடிஞ்சது.. அது ரவுண்ட் ராபின் அதனால பணம் குடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதெதோ பேசிட்டு.. அனைவரும் கிளம்ப ..
என்னை ஒருவன் வீட்டில் டிராப் செய்தான்... மணி 12:00.. தூங்கலாம் என பெட்டில் விழுந்த போது ஃபோன்..
இல்லிங்க அம்மிணி இல்லை.. TGIF மெம்பர்தான்.
சார், நம்ம நெம்பர் திரீயை போலீஸ் பிடிச்சுட்டாங்க.. ஃபைன் கட்ட காசு இல்லை என்ன பண்ண..?
தொடரும்
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 8
பாவம் நெம்பர் திரீ கையில காசு இல்லை. நாங்க எல்லோருமே குடிச்சிருக்கோம். யாரு போனலும் மாட்டுவோம்..
இதுக்குத்தானே அப்பிராணியா நாலு ஃபிரண்ட்ஸ் பிடிச்சு வச்சிக்கோம்.. செல்ஃபோன் பிஸியாச்சு.. ஒருத்தனை தூக்கத்திலிருந்து எழுப்பி வரச்சொல்லி பணம் கொடுத்து அனுப்பினேன்.
நெம்பர் 3 ஐ எப்படி பிடிச்சாங்க தெரியுமா? அவன் டூ வீலர்ல தான் போய்கிட்டு இருந்தான். அந்தப் பக்கம் மோப்ப நாய் வச்சுகிட்டு போலீஸ் செக் பண்ணிகிட்டு இருந்திருக்காங்க..
சரக்கு வாசனையை மோப்பம் பிடிச்ச நாய் துரத்த போலீஸ் நிறுத்திப் பிடிச்சிட்டாங்க.
1600 ரூபாய் அபராதம் கட்டி நெம்பர் 3 வீட்டுக்குப் போய்ச் சேர விடிகாலை 3 மணி..
நமக்குதான் விடிஞ்சுட்டா தூக்கம் வராதே!.. எழுந்து போய் ஒரு டீ போட்டுக் கொண்டு வந்து டி.வி. முன்னால உட்கார்ந்துகிட்டு யார் யார் என்ன என்ன ப்ரோக்ராம் போட்றாங்கன்னு பார்த்தா,
முக்கால் வாசிச் சேனல்ல பாட்டு டிவிடி போட்டு விட்டுட்டு நிலையத்துக்காரங்க தூங்கப் போயிட்டாங்க.. என் சின்ன வயசில நான் கேட்ட பாட்டெல்லாம் கூட வந்திச்சு..
எப்படியும் 9 மணிக்கு மேலதான் காரை டெலிவரி எடுக்க முடியும், இப்போதைக்கு அதுவரை என்ன செய்யறது..
ஆஹா, இன்னிக்காவது சூடா எதாவது டிஃபன் செய்யலாமா?
பாட்டைச் சத்தமா வச்சுட்டு கிச்சனுக்குப் போனேன்..
அழகழகா டப்பாக்கள்.. எது எதில் என்ன இருக்குன்னு எழுதி இருக்கு..
ம்ம் உப்புமா செய்ய என்ன வேணும்...
கடுகு-உளுத்தம்-பருப்பு (கடுகு+உளுத்தம்பருப்பு+கடலைப் பருப்பு)
எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய்...
அட வரமிளகாய் போடலாமா இல்லை பச்சை மிளகாய் போடலாமா?
சூடா சாப்பிடப் போறோம் இல்லியா? அதனால பச்சை மிளகாயே போடுவோம்.
ரவை முக்கால் கப் போதும், தண்ணி ஒண்ணரையிலிருந்து இரண்டு மடங்கு வரை.. உப்பு அது எப்பவும் கை பக்குவம் தானே!! கண்ணு பார்க்கும், கை அளக்கும்..
ரொம்பக் கொஞ்சமா ரவை சேய்யும் போது 2 மடங்கு தண்ணி விடணும், ஏன்னா கொதிக்கறப்ப தண்ணி ஆவியாகிடும்..
கறிவேப்பிலை இருக்கே அதை இரண்டு விதமாய் உபயோகிக்கலாம். ஒண்ணு தாளிக்கும் போதே எண்ணெயில் போட்டுரலாம், இல்லைன்னா கடைசியில் இறக்கறதுக்கு கொஞ்சம் முன்னால கொத்தமல்லியோடு போடலாம். வாசம் வேணும்னா இரண்டாவதுதான் பெஸ்ட். கறிவேப்பிலையை சுவைத்து சாப்பிடறவங்கன்னா தாளிக்கும் போதே போட்டுருங்க..
அப்புறம் முதலில் ரவையை கொஞ்சமா வறுத்து தனியா எடுத்து வச்சுடணும். இப்படி செஞ்சம்னா கடையில உப்புமா உதிரியா வரும்,. இல்லைன்ணா ரவாகஞ்சி பதமா இருக்கும். எது பிடிக்குமோ அப்படிச் செஞ்சுக்கலாம்.
தாளிக்கும் போது எண்ணெய் காய்ந்து தெளியறப்ப கடுகு-உளுத்தம்பருப்பு போடணும். கடுகும் வெடிக்கணும், பருப்பும் தீயக் கூடாது.. அதனால நல்லா எண்ணைக் காய்ந்த பின்னால அடுப்பை சன்னமா எரிய வச்சிட்டுப் போடணும்.
அப்புறம் கறிவேப்பிலை அது முருகலாகும் போது பச்சை மிளகாய் அப்புறம் வெங்காயம்...
வெங்காயம் ஒரளவு வெந்தால் போதும். பொன்னிறமா வதக்க வேண்டியதில்லை..
அப்புறம் தண்ணி ஊத்தி கொதிக்க வைக்கணும்..
கொதிச்ச பின்னால கொஞ்சம் கொஞ்சமா ரவையை ஒரு பேப்பரில் இருந்து மெதுவா தண்ணீரில் ஒரு சின்ன அருவி மாதிரி விழவச்சு கலக்கணும்.
கிண்டுவதை மட்டும் நிறுத்தவே கூடாது.. ஏன்னா ரவை கட்டிகள் திடீர்னு உருவாயிடும்..
கெட்டியாக கெட்டியாக கிண்டுவது கஷ்டமாகும். அப்போ கொஞ்சம் எண்ணெய் சேர்த்துகிட்டா அடியில் ரவை ஒட்டிக் கருப்பாகாது..
உப்பு தண்ணி ஊத்தின உடனே போட்டுக் கலக்கிட்டா சமமா இருக்கும். மறந்து போய் கடைசில போட்டா சரியா மிக்ஸ் ஆகாது..
ஆகா மணக்கும் உப்புமா சூடா ரெடி..
சாப்பிட்ட பின்னாலதான் ஞாபகம் வந்தது..
தொடரும்.
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 9
பாரதி சொன்னது சரிதான், நாம குளிக்கறதுக்கு முன்னாலதானே பல்லு விளக்குவோம். என்ன! அம்மிணி இருந்தா குளிக்காம டிஃபன் கிடைக்காது.
இராத்திரி முழுக்க தூங்காம இருக்கறது இது என்ன முதல் தடவையா? இதெல்லாம் சகஜமப்பா..
சன்மியூஸிக் இன்னும் அலறிக் கிட்டே இருக்க, குளிச்சு முடிச்சி தயாராகி கிளம்பிப் போய் காரை எடுத்த்தாச்சு.
இந்த வீக் எண்ட் வந்துட்டால் ஒரு சின்னக் கடி என்னன்னா, காலையில நேரத்தில எல்லாருமே தூங்கிக்கிட்டு இருப்பாங்க. எழுப்பி வெளிய கொண்டு வர்ரது கஷ்டமான கஷ்டம். ஆனா சாயந்திரம் நாலு மணியிலிருந்து பாருங்க, மால்ல, தியேட்டர்ல பப்புல எங்கப் போனாலும் கூட்டம் தான். என்ன செய்யலாம்?வீட்டுக்குப் போய் டிவி போட்டா மதியச் சாப்பாட்டுக்கு வெளிய வரணும், மறுபடி வீட்டுக்குப் போகணும்.. அப்புறம் 4 மணிக்கு மறுபடி வரணும்..
மூளையைச் சுரண்டிப் பார்த்துட்டு, உருப்படியா எதாவது பண்ணலாம்னு வீட்டுக்கு வந்தேன்..
அடடா, கண்டுபிடிச்சிட்டீங்க பாத்தீங்களா, துணியை வாஷ் பண்ணனும்னு.. அதுதான் தப்பு. மெஷின் பாட்டுக்கு ஓடிகிட்டு இருக்கப் போகுது.. அப்புறம் வந்து எடுத்து காயப்போட்டா தீர்ந்தது.. இதுக்குப் போயா மனுஷன் டைம் ஸ்பெண்ட் பண்றது?
மன்றத்திற்கு போயி நாலு திரி எழுதலாமே!(இது உருப்படியான வேலைதானே??)
வந்து உட்கார்ந்து கிடைச்ச திரியிலெல்லாம் பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன். ஒரு 30 பதிவுகள் ஓடி இருக்கும். பசிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.
சரி இப்ப பிளான் என்னன்னா, நந்தினில சாப்டுட்டு, அப்படியே ஃபாரம் மால் போய் கிடைச்ச ஒரு படம் பார்த்துட்டு, அப்படியே விண்டோஷாப்பிங் பண்ணிட்டு, எரியற கண்ணை குளிர வச்சுட்டு வீட்டுக்கு திரூம்பிவரணும்..
நம்ம புத்திசாலி மூளை யோசிச்சது.. துணியெல்லாம் தூக்கி வாஷிங் மெஷின்ல போட்டு, சோப்புத்தூள் போட்டு, காட்டன் செட்டிங், வார்ம் வாட்டர், பிரீ வாஷ், வாஷ், ரின்ஸ், ட்ரை ஸ்பீட் எல்லாம் செட் பண்ணி, டிலே ஸ்டார்ட்போட்டேன். 6 மணிக்கு துவைக்க ஆரம்பிச்சா, 8
மணிக்கு நான் வர்ரப்ப காயப்போட ரெடியா இருக்கும்.. துணி ரொம்ப நேரம் ஈரமா இருந்தா கப்பு அடிக்குமில்லையா, அதான்.
வீட்டைப் பூட்டிகிட்டு கிளம்பினேன்.
நம்ம லக்கு பாருங்க அன்னிக்கு தான் சந்திரமுகி ரிலீஸ்.. டிக்கெட்டும் கிடைச்சிருச்சி..
உள்ளே போய் உட்கார்ந்த்து பாடம் போட்ட கொஞ்ச நேரத்தில் ஃபோன் அலறியது..
அவங்களேதான்.. ம்ம் இப்ப என்ன செய்தேன் தெரியுமா?
தொடரும்.
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 10
ரஜினி படம் அதுவும் சொல்லாம போனா, முதல் நாளே!
மைக்கை கையால் நல்லா மூடிகிட்டு ஆன்ஸர் பட்டனை அமுக்கினேன், இங்க தியேட்டர் சத்தம் கேட்க சான்ஸே இல்லை. என்ன சொன்ணாங்களோ யாருக்குத் தெரியும்? மியூட் பட்டனை தட்டி மியூட் ஆக்கிட்டு காதில வச்சா ஹலோ ஹலோன்னு கூப்பிட்டுப் பார்த்தாங்க.. கட்பண்ணின சமயம் பார்த்து செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு, ஜாலியா சாஞ்சு உக்காந்தேன்
லகலகல்கன்னு படம் முடிஞ்சதும், ஃபாரம் மால்ல இருக்கிற எல்லா கடைகளுகும் ஒவ்வொன்னா பாத்தேன்.. எத்தனை ரகமான மனிதர்கள்? யாராச்சும் ஒருத்தர் இங்க தனியா வந்திருக்காங்களான்னு பார்த்தேன். யாரோ ஒரு பெண் மாத்திரம் யாருக்காகவோ காத்துகிட்டிருந்தா,
மத்தபடி மதியின் வீதி உலாவில சொல்லி இருக்கிற மாதிரி, பெண்கள் கும்பல், ஆண்கள் கும்பல், இல்லைன்னா ஜோடியா, குடும்பமா இப்படி காய்ரே மூய்ரேன்னு ஒரே பேச்சு தான்.
ஃபாரம் மால் மதிரி இடங்களில் மனசை விட்டு ரசிச்சம்னா பொழுது போவதே தெரியாது (இல்லையா பென்ஸூ)..
வித விதமான மனிதர்கள், வித விதமான மேனரிஷங்கள். புதுசா கேர்ள் ஃப்ரண்ட்ஸை கூட்டிட்டு வந்து வழிகிற இளைஞர்கள்.. குடும்பத்தோட வந்தாலும் அலைபாயுற கண்கள்...
பாப்கார்னும் ஐஸ்கிரீமும் கேட்டு னச்சரிக்கிற ஒற்றைக் குழந்தைகள், துரத்தி துரத்தி விளையாடற தோழமைக் குழந்தைகள்..
பரப்ரப்புன்னா இந்த மாதிரி இடங்கள்தான்.. சுத்தி என்ன நடக்குதுன்னே கவனிக்காமல் தங்கள் நிலையைக் கூட கத்திச் சிரித்து பர்சனல் மேட்டர் பேசுபவர்கள்..
கோபித்துக் கொண்ட பாய்ஃபிரண்டுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் கேர்ள்ஃபிரண்ட்.. எஸ்கலேட்டரில் கால் வைக்கப் பயந்து, அங்கயே தயங்கி நிற்கும் வயதானவர்கள்
சொல்லப் போனா இங்க வர்ரவங்க எல்லாத்துகிட்டயும் கவனிக்க ரசிக்க எதாவது இருக்கு..
மணி ஏழரை ஆனதும், பிட்சா ஹட் போய் ஒரு மீடியம் ஆல் மீட் பிட்ஸா சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன்..
இன்றைய கோட்டா முடிஞ்ச பின்னாலதான் ஞாபகம் வந்தது..
ஆஹா செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்தமே! இப்ப என்ன சமாதானம் சொல்றது??
தொடரும்
.
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 11
கதவைத் திறந்து பெட்ரூம் உள்ளேப் போனா பயங்கர அதிர்ச்சி.. பெட்ரூமில தண்ணீர் வெள்ளம்..
வெள்ளமா எப்படின்னு யோசிக்கறீங்களா? அதான் வாஷிங் மெஷின் செட் பண்ணினனே!! எங்க வீட்ல வாசிங் மெசின் அப்ப பெட்ரூமில தான் அட்டாச்ட் பாத்ரூம் பக்கத்தில இருக்கும். வாஷிங் மெஷினைப் போடும் போது மட்டும் எக்ஸாஸ்ட் குழாயை பாத்ரூமிற்குள் விட்டு விடுவோம். இதனால ஈரப்பசையில் வாஷிங் மெஷின் கெட்டுப் போகாதுன்னு
அந்த எக்ஸாஸ்ட் பைப்பைத் தான் அப்படியே விட்டு இருந்து இருக்கேன்.
அதான் அந்த அழுக்குத் தண்ணியெல்லாம் பெட்ரூம் நிறைய
ஆமாம் தரை துடைக்கும் மாப் எங்க.. தேட்றேன் தேட்றேன் வீடு பூரா தேட்றேன்.. காணோம்..
ஆஹா.. க்ளூ கிடைச்சிருச்சு.. எங்க போகக் கூடாதுன்னு சொன்னாங்களோ அங்கதான் வச்சிருப்பாங்க..
பின் கதவை தொறந்து பார்த்தா
அங்க சன்சேடுக்கு மேல மாப்..
எடுத்து பெரூம் தண்ணியை எல்லாம் வழிச்சு வழிச்சு பாத்ரூம்ல கொட்டிட்டு துணியெல்லாம் கொண்டு போய்.. காயப் போட்டுட்டு.. வந்தேன்..
சரக்கு உள்ள எறங்கின பின்னாடி தான் அவங்களுக்கு ஃபோன் பண்ணினேன், லேண்ட் லைன்ல இருந்து
ஹலோ,
என்னாச்சுங்க மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு என்ன செய்யறீங்க?
அது வந்து மொபைல் ரிப்பேர், மைக் ரிப்பேர் ஆயிடுச்ச்சாம்.. மத்தியானம் இருந்தே நான் பேசினா யாருக்கும் கேட்கலை.. அதான் ரிப்பேர் பண்ண சர்வீஸ் செண்டர்ல குடுத்திருக்கேன்.. ( ஆஹா ஆகற வெட்டிச் செலவுக்கு இப்படி எல்லாம் கணக்கு காட்டுவாங்களான்னு யோசிக்காதீங்க..)
சாப்டீங்களா? என்ன சாப்டீங்க? உடம்பு சரியா இருக்கா? வீடு சுத்தமா தானே இருக்கு...? (நாக்கில சனிம்பாங்க.. இதுதாங்க.. பின்னாடி புரியும்)
எல்லாத்துக்கும் எதையெதையோ சொல்லிட்டு ஃபோனைக் கட் பண்ணிட்டு (ஆஹா நாளைக்கு ஃபோன் வராதே ஜாலியா பப்புக்குப் போலாமே!!!)
டிவி ஆன் பண்ணி எதோ கவிச்சுப் படம் ஓடவிட்டுட்டு அப்படியே டீவி பக்கத்தில படுத்தேன்..
எத்தனை மணின்னு தெரியாது..
கன்னா பின்னான்னு கனவ் வந்தது..
5:00 மணிக்கு முழிச்சேன். பெட்ல படுத்திருந்தேன்..தாகமா இருந்திச்சி
எழுந்து கிச்சனுக்கு போனேன்.. ஏதோ கெட்ட வாசனை... தாங்க முடியாத கெட்ட வாசனை
கிச்சனுக்கு போக கிச்சன்ல இருந்து ஒரு ....
நாய் வெளியே ஓட
நட்ட நடுக் கிச்சன்ல ...
தொடரும்
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 12
கிச்சனுக்குப் போக கிச்சன்ல இருந்து ஒரு ....நாய் வெளியே ஓட
நட்ட நடுக் கிச்சன்ல ...
ஆமாம் கிச்சனுக்கு எப்படி நாய் வந்தது ? அடச் சீ நேத்து பின்கதவை திறந்தவன் மூடவே இல்லியே.. அது வழியாத்தான் வந்து கிச்சனை இது எங்க ஏரியான்னு மார்க் பண்ணி இருந்தது..
நேற்றையச் சின்ன வேலை இன்றையப் பெரிய வேலையாயிடுச்சி.. டெட்டால், கிளீனிங் லிக்விட் எல்லாம் போட்டு, வீடு முழுசும் பளபளன்னு ஆகிற மாதிரி தேச்சுத் தேச்சு கிளீன் பண்ண முதுகு கைகால் எல்லாம் ஒரே வலி.. (கிச்சன் பளபளக்கும் ரகசியம் புரிஞ்சதா அம்மிணி,, சோழியன் குடுமி சும்மா ஆடாது.. நீங்களும் கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால் இப்படி எதாவதுச் சிக்கலாம்.. )
வேலை முடிஞ்சு, பின் பக்கமெல்லாம் பக்காவா சாத்திட்டு, குளிச்சு முடிச்சி பார்த்தா மணி பன்னிரண்டு. சரி, வேற வழியில்லை. பிரஞ்ச் (பிரேக்ஃபாஸ்ட் + லஞ்ச்) தான்னு முடிவாயிடுச்சி.. எவ்வளவு வேலை பண்ணியிருக்கோம்..
ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் போய், பிரியாணியும் கபாபும் ஒரு கட்டு கட்டியாச்சி..
மறுபடியும் ஃபாரம் மால்.. இம்முறை மும்பை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்த நாட்களில் இப்படி ரஜினி / கமல் படம் பார்க்க கொடுத்து வச்சிருக்கணும்..
சும்மா சொல்லக் கூடாது, லீவு நாட்கள்னா சும்மா கடகடன்னு ஓடிருதில்ல... ஒண்ணுமே உருப்படியா செய்யாம மணி 6 ஆயிடுச்சி.. இதுக்குதான் லீவுன்னு வந்தா சட்டுன்னு காரை எடுத்துகிட்டு ஒரு ரிசார்ட் அது இதுன்னு சட்டுன்னு கிளம்பிரணும்.. ரிலாக்ஸ் பண்ணலாம். சும்மா இப்படி டைம் வேஸ்ட் பண்ணறதுக்கு..
இருந்தாலும் எனக்குப் பிடிச்ச டைம்பாஸ் கிடைக்கிற இடம் இந்த மாதிரி மால்கள் தானே! இங்கதான் யார் யாரைப் பார்க்கறாங்கன்னு யாருமே கவலைப்படாமே இருக்கிறாங்க. பலவித உணர்வுக் கலவைகள் நிறைந்த இடம். வெளியூரிலிருந்து ஃபாரம் மால் வந்த கும்பல் ஆன்னு வாயைப் பிளந்துகிட்டு சுத்திகிட்டு இருந்தது.. அந்த பெண் எல்லாப் பொருளையும் எடுத்து விலையைப் பாத்துட்டுச் சட்டுன்னு வச்சிட்டு கொஞ்சம் தள்ளி நின்னு ஏக்கமா பார்க்க, கூட வந்த ஆணோ வேற இடங்களில் ஏக்கமா தன் பார்வையை சுற்ற விட்டுக்கொண்டிருக்க..
சும்மா லேண்ட்மார்க்கில நுழைந்து புத்தக பக்கங்களில் பொய் என்ன என்ன வகை புத்தகங்கள்னு நல்லா மேஞ்சு பார்த்துட்டு வந்தேன்..
இன்னும் இரண்டு நாள்தான் இருக்குன்னு சட்டுன்னு மனசுக்குள் ஒரு நினைப்பு வர..
சரி பார்த்ததுப் போதும்னு வெளிய வந்து வீட்டுக்குப் போனேன்..
ம்ம் இனியும் அதிகம் மிச்சம் மீதி வைக்க முடியுமா என்ன..
அன்று ராத்திரி கொஞ்சம் அளவு மிஞ்சிதான் விட்டது..
விடிகாலை 3 மணிக்கு சட்டுன்னு விழிப்பு வந்தது..
தொடரும்
.
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 13
3 மணிக்கு எழுந்து தலைவலிக்கவே, கொஞ்சம் வறட்டீ போட்டுக் குடிச்சிகிட்டே சேனல்களை மாற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்..
கூசும் வெளிச்சத்தில் தலை விண் விண்னுன்னு தெரிக்க டிவி யை ஆஃப் பண்ணிட்டு இருட்டில் ஒரு டவலை எடுத்துத் தலையில் இறுகக் கட்டிகிட்டுக் கண்ணை மூட, அது கொஞ்ச நேரம்தான் தாக்கு பிடிச்சது..
தலை வலி மாத்திரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்துப் போட்டுகிட்டேன்.. இது ஒரு மாதிரித் தலைவலி..
ஒரு கண்ணில இருந்து மட்டும் தண்ணி வரும். அந்தப் பக்க மூக்கு மட்டும் எரியும்.. அந்தப் பக்கத்துத் தலை மட்டும் வலிக்கும்.
டீ ஹைட்ரேஷன், தண்ணி சரியா குடிக்காதது (தண்ணி அடிச்சா அது இதுக்கு எதிரி ) கண்களுக்கு ஓவர் ஸ்டிரெஸ் இதெல்லாம் இதற்குக் காரணங்கள்.. எளிய மருந்து காஃபின், நிறையத் தண்ணீர், அப்புறம் ஒரு தலைவலி மாத்திரை (அனுபவம்தான்னு சொல்றீங்களா?)
எரியும் அந்த மூக்கின் மேல் ஆள்காட்டி விரல் வச்சு பிரஸர் கொடுத்த மாதிரி கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். கண்வலி அதிகமாக, கண்ணோரம் மெல்ல கட்டைவிரலால் மஸாஜ் செஞ்சேன்.. வலி தலைக்கேற, பொட்டோரம் என் மஸாஜை மாற்றினேன்..
கொஞ்சம் ரிலீஃப் ஆன மாதிரி இருந்தாலும் அதிகம் தண்ணீர் குடித்ததால் குமட்டிகிட்டு வந்தது.. பாத்ரூம் போய் வாந்தியெடுத்தேன்..
கண்கள் தெரித்து விழுவது போல வழி..
லெமன் எடுத்து மறுபடி இன்னொரு வறட்டீ போட்டு பிழிந்து குடித்துவிட்டு,
பாத்ரூமை நன்கு கழுவி விட்டேன்,,
தலை இன்னும் சுத்தற மாதிரியே இருந்தது. குளித்து முடித்து பின் மேகி நூடுல்ஸ் செய்து சாப்பிட,
இரண்டு நிமிஷம் கூட இருக்காது.. மறுபடி வாந்தி..
முடி.......ல
ஆஃபீஸ் போகணுமே! ஆனால் தலையைச் சுத்துது..
மேனேஜருக்கு ஃபோன் போட்டு வரலைன்னு சொன்னேன்..
வரலைன்னு சொல்லியாச்சி.. இவ்வளவு குமட்டிகிட்டு வரும் பொழுது வெளியப் போயா சாப்பிட முடியும்? என்ன செய்யறது?
கைகண்ட மருந்து மிளகு ரசம் தானே!..
சரி சாதம் மிளகு ரசம் வச்சிருவோம்.. தேவைன்னா இரண்டு ஆம்லெட் போடுக்கலாம்..
சாதத்திற்கு அரிசி ஊற வச்சிட்டு, ரசத்திற்கு சாமான்கள் தயார் செஞ்சேன்.
ரசப்பொடியெல்லாம் தேவையில்லீங்க.. நான் சொல்ற மாதிரி செஞ்சிப் பாருங்க ரசம் வாசனை மூக்கைத் துளைக்கும்.
1 அளவு மிளகுக்கு 4 அளவு ஜீரகம், 8 அளவு கொத்தமல்லி.. இது எல்லாம் சேர்த்தா என்ன அளவு வருமோ அவ்வளவு வெள்ளைப் பூண்டு..
புளியைக் கரைச்சு வச்சுக்கணும்..
இரசத்தை தாளிச்சும் செய்யலாம், தாளிக்காமலும் செய்யலாம். எனக்குத் தாளிப்பது பிடிக்கும். தாளிக்கணும்னா கடுகு-உளுத்தம்-பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் அப்புறம் கொஞ்சமா பெருங்காயம் வேணும்..
அப்புறம் கொத்தமல்லித் தழை வேணும்..
மசாலவை மிக்சியில் போட்டு அரைத்து, புளிக்கரசலுடன் அடுப்பின் மேல் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூடு செய்யணும்..
கொஞ்சமா நுரைகட்டு பொங்கும் போது அடுப்பைச் சிம்மில வச்சிட்டு, தாளிச்சி, கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து, கடைசியா பெருங்காயம் சேர்த்து, இந்தக் கரைசலில் கலக்கணும். கடைசியா கொத்தமல்லித் தழை போட்டு இறக்கலாம்.
இந்த ரசமிருக்கே எப்பேர்பட்ட காய்ச்சலாயிருந்தாலும், வாய்க்கசப்பிருந்தாலும், சாப்பிட வச்சிரும். அதைத்தான் செஞ்சேன்..
தண்ணீர் குடிச்சா கூட வாந்தி வர்ரதிலிருந்து இந்த ரசம் குணமாக்கிச்சோ இல்லை மாத்திரை குணமாக்கிச்சோ இல்லை லெமன் வறட்டீ குணமாக்கிச்சோ..
ஒரு வழியா சாயங்காலம் ஆகும் பொழுது, தலைவலி வாந்தி எல்லாம் போயாச்சு..
நல்ல பையனா இதையே இரண்டு ஆம்லெட்டோட சேர்த்து சாப்பிட்டு ராத்திரியை கழிச்சாச்சு..
அடுத்த நாள் செவ்வாய்க் கிழமை..
எல்லோரும் திரும்பி வரும் நாள்...
தொடரும்
அந்த ஏழு நாட்கள்! - பாகம் 14
நாளை மதியம் எல்லோரும் வந்து விடுவார்களே! ம்ம் உடனே தேவை என்ன?
கிளீன் அப்.. குப்பை போல் கிடந்ததெல்லாம் சடாரென சரியாகின.. துணியெல்லாம் மூன்று இடங்களில்.. 1. பேஸ்கட், 2 கப்போர்ட் 3. அயர்ன் செய்ய லாண்டரிக்கு..
முதல் கடமை பாத்ரூமைக் கழுவுவது.. கால் பாட்டில் டெட்டால் காலி.. அடுத்தது கிச்சன்.. அடுப்பிலிருந்து இடுக்கு வரை சுத்தமோ சுத்தம்..
பெட்ரூமில் பெட்டைத் தவிர மத்ததெல்லாம் சரியாக்கி வச்சுட்டேன்..
பார்த்தா வீட்டை யாருமே உபயோகிக்காத மாதிரி அப்படி ஒரு சுத்தம்..
ஃபிரிட்ஜ் ல இருந்த எனக்கு மட்டுமே தேவைப்பட்ட ஐட்டங்களை மூட்டை கட்டி குப்பையில் போட்டேன்..
ஃபிரிட்ஜ் ஏறக்குறைய காலி ஆயிடுச்சி..
இரவோடு இரவாக வீடே பளிச் பளிச்..
அடுத்த நாள் காலை - எழுந்து குளித்து அருகில் இருந்த அம்ருத் பவனில் இட்லியும் பொங்கலும் சாப்பிட்டு காஃபி குடித்து நாளைத் தொடங்கினேன்..
2 மணிக்கு ட்ரெய்ன்..
மதியச் சாப்பாடு முடிந்ததும், ஸ்டேசன் போனேன்.. வழக்கம் போல ட்ரெய்ன் அரை மணி நேரம் லேட்..
மனைவியும் குழந்தைகளும் எக்கச்சக்கமாய் கேள்விகள் கேட்க, ம் .. ஆமாம்.. வந்து பாருங்க.. இப்படி அரைகுறையாய் பேசிகிட்டே வீட்டுக்கு வந்தோம்..
வீட்டுக்கு வருவீங்களா இல்லை ஃபிரண்ட்ஸோடவே தங்கிடுவீங்களா? வீட்டைத் திறந்த போது வந்த கேள்வி கிச்சனுக்குப் போனதும் வாவ் என முடிந்தது..
நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.. வெளியேயும் தான்.
முற்றும்.
No comments:
Post a Comment