Wednesday, December 2, 2009

என்செம்பிள் - 89 - பிரிந்தவர் கூடினால்

இடம் சென்னை :

முத்துக் குமார், ராமச்சந்திரன், தியாகராஜன், கண்ணன் அனைவரும் ஒரு மாலை ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

என்னடா, நம்ம சரவணன் இப்போ என்ன செய்யறான்?
தெரியலையே!!!
மாதவதாஸ்?
இங்கதான் கேரளாவில இருக்கான்னு கேள்விபட்டேன்..

ஆமாம் ஆப்பு சென்னைக்கே வந்துட்டானாமே!!! பார்த்தியா?

எங்க இருக்கான்னு தெரியலை.. நம்ம பாச்சா கூட சென்னையில தான் இருக்கான் போல இருக்கு..

எப்படியோ எல்லாரும் லைஃப்ல ஒருவழியா செட்டிலாயிட்டாங்க...

இல்லைப்பா. நம்ம என்.எஸ்.கே ஒடம்பு ரொம்ப வீக்கா போயிடுச்சின்னு கேள்விப்பட்டேன்..

நாம காலேஜ்ல ஒரு கெட் டுகெதர் போட்டா என்ன?

காலேஜ்லயா? இந்தா இங்க இருக்கிற சென்னை நண்பர்களையே பார்க்க முடியலை.. காலேஜ்ல போடுணும்னா ரொம்ப கஷ்டம்..

சரி எதாவது பண்ணுவோம்...

இடம் சென்னை காற்று. (செல்ஃபோன்ல இரண்டு பேர் பேசிகிட்டா???)

டேய் சிகாமணி.. நான் எம்.ஜி.ஆர் பேசறேன்..

சொல்லு எம்.ஜி.ஆர்..

டேய் நம்ம பசங்களையெல்லாம் சேர்த்து ஒரு கெட் டுகெதர் போடலாம்னு இருக்கோம். இந்த சண்டே நீ ஃபிரீயா?

ம்ம்ம்.. ஃபிரீதான்.. நம்ம தளபதியும் வர்ரான்.. கூட்டிகிட்டு வர்ரேன்... எங்க மீட் பண்ணலாம்?

பெசண்ட் நகர் பீச்.. புல்டாக், ஆப்பு, முன்சொட்டை.. எல்லாம் வர்ராங்க..

சரி என்ன விஷேசம்..

நம்ம பசங்கள்ளாம் சேர்ந்து நம்ம காலேஜ்ல ஒரு கெட் டொகெதெர் போடலாமுன்னு யோசிக்கறோம்..

ஒரு 10 பேர் கூட தேற மாட்டோமே.. அதுக்கு சென்னையிலயே பண்ணிறலாமே..

இல்லைடா.. முடிஞ்ச வரை பார்ப்போம்.. எல்லாத்தையும் தேடுவோம்..

டேய்.. பலபேர் எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது.. அங்க இருக்கிறான் இங்க இருக்கிறான்னு பேசிக்கறதோட சரி...

பாப்போமே எத்தனை பேரைத்தான் கண்டுபிடிக்க முடியுதுன்னு...

சரி சண்டே.. நானும் தளபதியும் வந்துடறோம்.

பீப்....

========================================================================================

இடம் : பெசந்த் நகர் பீச்: முத்துக் குமார், ராமச்சந்திரன், தியாகராஜன், கண்ணன், சிகாமணி, தளபதி

அப்பா, எவ்வளவு நாளாச்சு மீட் பண்ணி, தளபதி என்ன செய்யறே?

நானா, இந்த மைக்ரோ பிராஸஸர் கிட், ஆஸிலாஸ்கோப் இந்த மாதிரி லேப் ஐட்டங்களை, வித்துகிட்டு இருக்கேன். மணி என்ன பண்றே..

நான் இப்போ xxxx கம்பெனியில மார்கெட்டிங்க்ல இருக்கேன்..

எம்.ஜி.ஆர் ரிலையன்ஸ்லதானே நீ இருக்க..

ஆமாம் ஆமாம்..

சரி கண்ணன் என்ன செய்யறே?

சம்பூர்ணா கன்ஸல்டேசன் தெரியுமா?
ஆமாம்..
மெட்றாஸ் பிரான்ச் டைரக்டரா இருக்கேன்...
முத்து நீ?

கம்ப்ரெஸ்ஸர் எனர்ஜி கன்ஸர்விங் கன்ஸல்டிங் பண்ணிகிட்டு இருக்கேன். இண்டஸ்டிரியல் கம்ப்ரெஸ்ஸர் டீலிங்..

சிகாமணி என்னாச்சு! மியுஸிக் டைரக்டர் ஆகணும்னு துடிச்சுகிட்டு இருந்தியே?

ரண்டு படம் வந்தது.. நைல் நதியேன்னு ஒண்ணு.. பூஜை போட்டு ஊத்தி மூடிட்டாங்க அப்புறம் ரீஸண்டா சத்தியராஜ் படம் ஒண்ணு வணக்க்ம் தலைவா ன்னு.. கடைசியா தேவாவை புக் பண்ணிட்டாங்க..

என்ன எம்.ஜி ஆரு பேசாமயே இருக்க...

அதான் எப்படி ஆரம்பிக்கறதுன்னே தெரியலையே...

என்ன தளபதி நீ என்ன சொல்றே..

அட நம்ம காலேஜ் இயர் புக் இருக்கில்ல..

இருந்தது இப்ப இல்லை

எங்கிட்ட இருக்குப்பா...

சரி அதை வச்சி என்ன செய்யறது?

அதுல இருக்கற எல்லா அட்ரஸுக்கும் லெட்டர் எழுதுவோம்.

யாருடா அந்த அட்ரஸில இருக்க போறாங்க?

ஒரு பத்து பேர் இந்த வழியில கிடைக்க மாட்டாங்களா?

அப்புறம் நமக்கு யார் யார் எங்க இருக்காங்கன்னு தெரியுமில்லையா அதை வச்சு ஒரு லிஸ்ட் ஆரம்பிப்போம்.. அவங்க கிட்ட மத்தவங்களைப் பத்தி கேட்போம்.. ஒவ்வொருத்தனுக்கும் 5பேரோட கனெக்ஷன் இருக்குன்னு வச்சுக்க... அந்த அஞ்சில ஒருத்தனுக்கு இன்னும் இரண்டு பேர் கனெக்சன் இருந்தா 7.. அப்படியே 10..

மொத்தம் 180 பேர் .. நீ இன்னும் 20 தையே தொடல..

சரி விடுப்பா பார்ப்போம்...எதையுமே ஆரம்பிச்சாதான் முடியும்..ஆரம்பிக்காம எப்படி முடிக்கறது..

என்ன தியாகு பேசவே இல்லை...

ம்ம்ம் யோசிக்கறேன்..இதுக்கு ஒரு பேர் வச்சு எம்பளம் போட்டு கொஞ்சம் வித்தியாசமா பண்ணினா மக்கள் ஆர்வம் காட்டுவாங்க..

அதுவும் சரிதான்.. நீயே ஒரு பேர் வச்சுடு..

இயர் புக் உங்கிட்ட இருக்கா தளபதி.. ?

வீட்ல இருக்கு.. அடுத்த வாரம் மெட்ராஸ் வரும் போது கொண்டு வர்ரேன்..

சரி.. எல்லோரும் உங்க செல் நெம்பர், எமைல் அட்ரஸ் எழுதி குடுங்க...
அப்புறம் உங்களுக்க் யார் யார் நம்பர் தெரியுமே எழுதுங்க...

...
...
...
..
என்னடா மொத்தமே 10 பேர் தான் லிஸ்ட்ல இருக்கு.. எனக்கு நம்பிக்கையில்லை...

அதெல்லாம் பிடிச்சிடலாம். இவங்களை கால் பண்ணி பேசினா இன்னும் ஒரு 4 பேர்.. அப்புறம் அப்படியே பிடிச்சிடலாம், நீ கவலை படாதே..
அப்ப அடுத்த வாரம் கண்ணன் ஆஃபிஸில வச்சு லெட்டர் ப்ரிண்ட் பண்ணி போஸ்ட் பண்ணிடுவோம்.. அப்புறம் எம்.ஜி.ஆர் நீ ஒரு எக்ஸெல் சீட்டில எல்லாம் பேரையும் என்டர் பண்ணி தெரிஞ டீட்டயில எழுது... தளப்தி மறக்காம அந்த இயர் புக்கை கொண்டுவா.. நான் ஒவ்வொருத்தரா கால் பண்ணி அவங்களுக்கு யாரையாவது தெரியுமா எங்க இருக்காங்க இந்த மாதிரி சில விஷயங்களை கேட்கிறேன்.

எனக்கு நம்பிக்கையில்ல..

ஆமாம் ஃபைனல் எக்ஸாம் ல கூட இப்படித்தான் சொன்ன பாஸாயிடலையா..

அது பிட்டு வச்சு...பேப்பர் வாங்கி.. கொஸ்டின் அவுட் பண்ணி எத்தனை வேலை பண்ணி அப்பா...

அது மாதிரி இதலயும் எதுனாச்சும் குல்மால் பண்ணிரலாம் கவலைப்படாதே..

சரி அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை.. கண்ணன் ஆஃபீஸ் வந்துடுங்க..

=============================================================================================

இப்படி ஆரம்பித்த அந்த திட்டம்... மெதுவாய் வளரத் துவங்கியது. மார்ச் மாதம் 10 ஆக இருந்த அந்த லிஸ்ட் ஸ்டாக் மார்க்கெட்டைப் போல வளர்ந்து வளர்ந்து 30 ஆகி, 50 ஆகிய போது என்னைத் தொட்டது. முத்துக் குமார், உமாசஙகர், சுந்தரராஜன், ராஜ்குமார், சஃபியுதீன், கண்ணன், தளபதி, சிகாமணி என நண்பர்களுடன் தொலை பேசி உரையாடல் தொடங்க,,, 50 ஐ 100 க்கினோம்.

முத்துக்குமார் முன்னிற்க கல்லூரியில் பேசி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. எம்பளம், டி சர்ட், மொமெண்டோ, சிறப்பு விருந்தினர் அழைப்பு, ஹோட்டல் புக்கிங், உணவு ஏற்பாடு என அனைத்தும் நடக்க 100, 140 ஆனது..

எப்படியும் ஒரு 50 பேர் நேராக வருவார்கள் என்ற உறுதியோடு வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக வெப் பிராட்காஸ்டிங் கிற்கு ஏற்பாடு செய்தோம். அவர்களின் மெயில்கள் கூட்டத்தில் படிக்கவென
சேகரித்தோம்.

அந்த நாளும் வந்தது.

29ம் தேதி மாலை ஈரோட்டிலிருந்து திருச்சி நோக்கி பயணமானேன். போகும் போது செல்-லில் அழைத்து எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று கேட்க ஏழுபேர் வந்திருந்தார்கள். வழியில் குளித்தலையில் சரத்குமார் குறுக்கே வந்ததால் 20 நிமிடம் தாமதம் ஆக மாலை 7:00 மணிக்கு கல்லூரி வாசலை அடைந்தேன்.,,

கேட் அருகே ஒரு இன்னோவா மற்றும் ஒரு பென்ஸூ இல்லை இல்லை ஜென் நின்று கொண்டிருக்க,,,,


===============================================================================================

கல்லூரி வாசலிலேயே சிகாமணி(கருத்த பாண்டியன்), தளபதி, ராஜப்பா(ஜப்பான்), ராமச்சந்திரன், மனோகர் (இலங்கை நண்பர், ஜப்பானில் இருந்து இதற்காகவே வந்தவர்), நாடிராஜ், எம்.ஜி.ஆர், முன்சொட்டை முத்துகுமார், முத்து வெங்கடாச்சலம், தண்ணிவண்டி தியாகராஜன், 5 ரூபாய் செந்தில் ஆகியோர் எதிர் கொண்டனர்.

உள்ளே போய் பார்த்து வா என்று எல்லோரும் என்னை வற்புறுத்த ஏதொ சதி போல உணர்ந்தேன். சரி வாங்க போலாம் என அனைவரையும் இழுக்க, அவர்கள் வழுக்க,, சரி சரி எல்லோரும் திருச்சி (மலையாள திருச்சி அல்ல, ஊர் திருச்சி) என முடிவானது. (என்னை தனியே விட்டு எஸ்கேப் ஆகும் திட்டம் இருந்திருக்கு, நடக்கல).

என் காரில் யார் என்னுடன் வரக்கூடாது என ஒரு போட்டியே நடக்க, கருப்பு, தளப(பா)தி, 5 ரூபாய் ஆகியோர் ஏற, இன்னோவா மற்றும் ஜென்னை தொடர ஆரம்பித்தோம்.

யார் யார் என்ன செய்கிறோம் என்று கேட்டு அ(ரி)றிந்து, பேச ஆரம்பித்தோம். இன்னும் அதை விடலியா என்று தளபதி கேட்க, சேம்பிள் பார்க்கிறாயா என நான் கடிக்க ஆரம்பித்தேன்.

5 ரூபாய் மட்டும் அன்று பார்த்த மேனிக்கு அப்படியே இருக்க, கருப்பும், தலையும் என்னைப் போலவே கொஞ்சம் பூசினாற்போல மாறி இருந்தான். நாடி பெருத்திருக்க, முன்சொட்டை முழு சொட்டையாகி இருந்தான். எம்.ஜி.ஆர் தொப்(பி - இல்லை)பை யுடன் இருக்க மனோகர் அன்று போலவே இன்றும் இருந்தான்.

சரி சரி ரூமுக்கு போய் கடி இப்போ சாலையை பார்த்து ஓட்டு என்று என்னை ஓட்ட தலை முயற்சி செய்தான்.

இப்போ என் கையில ஸ்டியரிங் இருக்கு. அதனால நான் சேஃப். அங்க போனா உங்க போனா உங்க கையில பாட்டில் இருக்குமே! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சின்னா என ஜகா வாங்கினேன். திருச்சியின் ஒருவழிப் பாதையாக்கலினால் சாலைகள் புரியாமல் போக கருப்பு வழிகாட்டினான். ஜென்னீஸ் வந்து இறங்கினோம்.

முத்து ரூம் இருக்கா என விசாரிக்க தேர்தல் காலமாதலின் கை விரிக்கப்பட்டது. பிறகு நாடி ராஜ் மற்றும் மனோ ஆகியோர்கள் ரிசர்வ் செய்த அறைக்குச் சென்றோம்.

ஒரு 10 காலி பீர் பாட்டிலகளும் சில காலி வைன்பாட்டில்களும் அரைகுறையாய் கொறித்து தள்ளப்பட்ட, மிக்ஸர், முறுக்கு, முந்திரி இத்யாதி இத்யாதி"கள்" வரவேற்க.. அடப்பாவிகளா என்று ஃபிர்ட்ஜை திறந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்தேன்.

சிலர் தண்ணீரை உடம்பின் மேல் ஊற்றிக் கொண்டு (குளித்து) தயாராக, நாங்கள் உடலினுள் ஊற்றிக் கொண்டு (குடித்து) தயாரானோம்.

கீழே பார் செக்ஷனுக்கு செல்ல அனைவரும் ஒன்றாய் அமர இடம் கிடைக்காத காரணத்தினால் இரு மேசைகளை ஆக்ரமித்தோம். ஓட்கா, விஸ்கி, பீர் என வண்ணத்திரவங்கள் அணி வகுக்க, மனோ விற்கு நன்றி சொன்னோம். (ஜப்பானில் இருந்து வந்ததற்காக)...

மனோ முதலில் ஜப்பானில் இருந்து இந்தியவிற்கு விசா முயற்சி செய்ய கிடைக்க 20 நாளாகும் என அறிந்து (ஸ்ரீலங்காவிற்கு அவரது பாஸ்போர்ட்டை அனுப்பி விசாரிக்க வேண்டும் என சொல்லி விட்டார்களாம்) ஸ்ரீலங்கா வந்து விசாரிக்க, அவர் ஜப்பனில் வேலை செய்வதால், ஜப்பான் அனுப்பி விசாரிக்க 20 நாளாகும் எனச் சொல்ல, குழம்பி பிறகு ஸ்ரீலங்காவில் இருப்பதாகக் காட்டி விசா பெற்று வந்த நெடுங்கதையைச் சொல்ல ரசித்தோம்.

பாட்டில்களின் குவியல், சுண்டல், வறுத்த கடலை, முந்திரி என காலியாக, திட திரவ பொருட்களுடன் வாயுப்பொருளாய் புகையும் உட்கொள்ளப்பட்டது. சிக்கனும், மட்டனும் செந்நிற மணக்கும் மசாலாக்களைப் பூசிக்கொண்டு எண்ணைகுளியல் நடத்தி, மணக்க மணக்க
தட்டுகளில் அலங்காரமாய் வந்து வரவேற்றன. மணி 11:00 தொட்ட நேரம் இதுபோதும், பாரம்பரிய உணவை கொஞ்சம் விசாரித்துப் பார்ப்போம் என வெளியே வந்தோம். பில் யார் கொடுத்தார் என சத்தியமாய் தெரியாது.

அங்கிருந்து ஹோட்டல் சங்கீதாவிற்கு சென்று இட்லி, தோசை, கொத்துபரோட்டா போன்ற சில அயிட்டங்களை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். அப்போது முன்(முழு)சொட்டையின் செல்ஃபோன் ரிங்கியது.

மாதவதாஸ் கோழிக்கோட்டிலிருந்து ஆம்னி பஸ் மூலம் வந்திறங்கி இருந்தான்.

அவனையும் சங்கீதாவிற்கு வரச் சொன்னோம். மாதவதாஸ் நன்கு வளர்ந்த தொப்பையுடன், 2 க்கு 1 என்ற விகிதத்தில் நரைமுடியும் கருமுடியும் கலக்கப்பட்டிருக்க, புதிதாய் மீசை வளர்த்திருந்தான்.

அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டதில் மணி 12:00 ஆகியது. யார் எங்கு தங்குவது எனப்பேச முத்துவெங்கடாசலம், 5 ரூபா, கருப்பு, தலை, எம்ஜிஆர், தியாகு ஆகியோர் திருச்சியில் வீடுகளில் தங்குவது என்றும், நான், மனோ, ராஜப்பா மனோ ரூமிலும்,முத்து, மது, நாடி ஒரு ரூமிலும், மற்றவர்கள் சம்பத்குமார் ரிசர்வ் செய்த ரூமிலும் (காரைக்காலில் வைன் ஷாப் அதிபர்) ரூமிலும் தங்கினோம்.

மனோ ரூமில் போய் மறுபடி 1 பாட்டில் வைன் சாப்பிட்டு விட்டு பேசினோம். மனோ என் வகுப்பு தான் என்றாலும் நானும் சரி அவரும் சரி, நெடுஞ்சாலையில் உள்ள ஹைவே ரெஸ்டாரண்டில் தான் அதிகம் சந்தித்து இருக்கிறோம். காலையில் சரியான நேரத்தில் கல்லூரிக்கு வரும் நாங்கள் வகுப்பிற்கு சென்றது சொற்ப காலம்தான். ராஜப்பா திருச்சி, மற்றும் மெக்கானிகல் என்பதால் நிறைய பரிச்சயம் கிடையாது என்றாலும் பேச்சு வளர்ந்தது. நான் எப்படி 13 கம்பெனிப் பெயர்களை என் பயோடேட்டாவில் வைத்து இருக்கிறேனோ அதே போல் மனோவும் 2 வருடங்களில் 10 கம்பெனிகள் தாவியவர். 11 கம்பெனியில் 10 வருடமாக வேலை செய்கிறார். (தோஷிபா). ராஜப்பா திருச்சியிலேயே வேலை செய்கிறான். இதன் காரணமாக ஒருவருக்கொருவர் அறியாத பழங்கதைகளை பேசினோம்.

3:00 மணி வரை பேசிக்கொண்டு இருந்து விட்டு விழுந்தோம்.

==============================================================================================

முப்பதாம் தேதி காலை.. 6:30 மணிக்கு விழிப்பு வர எழுந்து பார்த்தால் ராஜப்பா குளித்துக் கொண்டிருக்க, மனோகர் தன்னுடைய கணிணியில் என்னவோ குடைந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அனைவரும் குளித்து தயாராக, எம்.ஜி.ஆர் வந்து சேர்ந்தான்.. என் செல் சிணுங்க.. எடுத்துப் பேசினால் சென்னை பார்ட்டி டெம்போ ட்ராவலரில் கல்லூரியை நெருங்கி விட்டதாக செய்தி வந்தது. கருத்த பாண்டியன், தலை, 5 ரூபா ஆகியோரை அழைத்து வரும் பணி எனக்கு வழங்கபட வயலூர் சாலையில் இருக்கும் 5 ரூபா வீட்டிற்கு சென்றேன். பளீரென்ற வெண்ணிற இட்லியும், முறுகலான நெய் ரோஸ்ட்டும் என்னை வரவேற்க.. சாம்பார் சட்னி சகிதமுடன் ரசித்து உண்டேன். அனைவரையும் அழைத்துக் கொண்டு, ஹோட்டல் கஜப் பிரியாவில் இருந்து "மைக்" "அன்புச்" எலியனையும் அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கி சீறிப் பாய்ந்தோம்.

கல்லூரி வாசலில் 17 ஆந்துகளுக்குப் பின் நுழைகிறோம்.. கல்லூரி வளாகமே "Ensemble 89 T-Shirts" அணிந்த வெள்ளை இளிஞர்களால் பரபரப்பாகி இருந்தது..

மச்சான்,, மாம்ஸ்,, எப்படிடா இருக்கே... கொஞ்சம் கூட மாறவே இல்லடா.. என்ற உற்சாக் வரவேற்புகள்.. "தக தகா" வாசுதேவன், "ஆப்பு" உமா சங்கர் என சென்னை நண்பர்கள் ஹாஸ்டலில் குளித்து தயாராகி வந்து இருந்தனர்.

"Ensemble-89" என்று வரையப்பட்ட ரங்கோலி வரவேற்க,, ரோஜாப்பூக்களுடனும், கற்கண்டு சந்தனம் பன்னீர் தூவி கல்லூரி மாணவிகளும், எங்கள் கணித ஆசிரியர் அன்பரசியும் வரவேற்க, ஆஃபிஸ் கிளர்க்குகள் மல்லிகா, நிம்மதி, ஜெயலஷ்மி ஆகியோர் புன்னகைத்தனர். எத்தனை முறை இவர்களின் உணவை நான் பகிர்ந்து கொண்டிருப்பேன். கண்கள் பனிக்க அன்பு விசாரணை தொடங்கியது. அப்போது அன்றும் இன்றும் என்றும் ஒரே மாதிரி இருக்கும் கணித ஆசிரியர் குமார் ஓடி வந்தார். என்னடா கவிஞரே எப்படி இருக்க.. பார்த்து ரொம்ப வருஷமாச்சுல்ல.. காரியாபட்டி வர்றானா? என்.எஸ்.கே எப்படி இருக்கான். பாய் எப்படி இருக்கான் என்று ஓயாமல் நலம் விசாரிக்க.. ஒவ்வொருவரைப் பற்றியும் சிறிது சிறிது சொன்னேன்.


மணியைதான் பார்க்கணும்னு ரொம்ப வருஷமா காத்திருக்கேன் என்று சொன்னதும், ஏன் ஒரு வாட்சு வாங்கியிருக்கலாமில்ல என்று நான் கடித்ததும் பயந்து பின் வாங்கினார். பாவி .. இன்னமும் மாறவே இல்லியா நீ என்றார்.

தற்போது கல்லூரியில் ஹெச். ஓ.டி யாக இருக்கும் முத்து வெங்கடாச்சலம் அழைத்து ஒரு கீ செயின், டீ ஷர்ட் (நான் திருப்பூரில் தயார் செய்து தந்ததை எனக்கே!!!) தர நானும் உஜாலாவுக்கு மாறினேன்.

குமார் மற்றும் ராஜபிரபு ஒரு ஓரமாய் பேசிக்கொண்டிருக்க வேகமாய் போய் என்ன ராஜபிரபு என அவன் முகம் மலர்ந்தது. நான் சொன்னனில்ல, என்னைப் பார்த்த உடன் ஓடி வருவான்னு என்று சொன்னான். அப்போது அந்த பாட்டி வந்தது.

எங்கள் கல்லூரி களமாவூருக்கு வந்ததிலிருந்தே( முதல் வருடம் திருச்சியில் இருந்தது) இந்தப் பாட்டி இங்கு பல கை வேலைகளை செய்து வருகிறது.. செடிகளுக்கும் வளர வேண்டிய மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றுதல், வளர்ந்த மரங்களாகிய குடி தண்ணீரை அங்கங்கு வைக்கப்பட்டிருக்கும் சில்வர் டேங்குகளில் எடுத்து வைத்தல், கல்லூரியை சுத்தமாக்குதல் என்று பலப்பல வேலைகளை செய்து கொண்டிருக்கும். இன்றும் அதே சுறுசுறுப்புடன் இருக்க.. என்ன பேராண்டி என்னையெல்லாம் நினைவிருக்கா என்று கேட்டது. பாட்டியுடன் பழங்கதைகளை பேசி விட்டு, நண்பர்களை அழைத்துக் கொண்டு கல்லூரியை சுற்றி வரத்தொடங்கினோம். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியான முகங்கள்.. 17 வருடங்களுக்குப் பின் சந்தித்த உண்ர்வு மழுங்கி சகஜமாகத் தொடங்கியபோது அந்த புளிய மரத்தின் கீழ் இருந்தோம்.

எத்தனையோ காதல்களைப்
பார்த்த இந்தப்
புளிய மரத்தின் காய்கள்
இனிக்குமா கசக்குமா

என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன்..

என்னடா பழைய நினைவுகளா என்று நண்பன் கேட்க.. ஆமாம் ஆமாம்.. நம் கண்ணெதிரிலேயே இப்புளிய மரத்தடியில் வளர்ந்த காதல்கள் தான் எத்தனை.. சுந்தர்-லஷ்மி, சஃபி-மாலினி, வாசு-அகிலா, சக்திவேல்-சுபப்பிரியா, என்.எஸ்.கே-பத்மா, பாலா-சுஜாதா.. என்று அடுக்க.. அடேயப்பா இவ்வளவு ஞாபகம் இருக்கா என்றான் ராஜப்பிரபு..

அப்புறம் என் கவிதைக்கு நானே பதிலும் கொடுத்தேன்..

காயா..
இங்கே பிஞ்சுகளே
வெம்பி விழும்பொழுது

என்று...

பின்னர் கல்லூரி கம்ப்யூட்டர் செண்டர், அதன் அருகில் இடிக்கப்பட்டிருந்த மண்டபம் இருந்த இடம் (இது ஒரு மர்மக் கதை பின்னர் எழுதுகிறேன்) லைப்ரரி, ஆஃபீஸ், எனது இரண்டாவது வருட இருக்கை, மூன்றாவது வருட இருக்கை, நான்காவத் உவருட இருக்கை, கல்லூரிகளில் நாங்கள் ஊறிய இடங்கள், இறங்கி பிட்டு போட்ட சன்சேடுகள், என ஒவ்வொன்றாய் பார்த்து கண்கலங்கினோம்.

பின்னர் ரோட்டிற்கு வந்து வழக்கமான இடத்தில் அமர்ந்து டீயை ருசிக்க ஒரு அம்பாசடர் கார் கல்லூரிக்குள் நுழைய சஃபீ என்று கத்தினேன்..
கார் சட்டென்று நின்றது.

எங்கள் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உறுப்பினரில் No.1 சஃபீ இறங்கி வர கட்டியணைத்து நலம் விசாரித்துக் கொண்டோம். ராஜபிரபு No.8, நான் No.6. மொத்தம் எட்டு பேர்,

அனைவரும் டீயை ரசித்து அருந்திவிட்டு கல்லூரிக்குள் செல்ல மீட்டிங் ஆரம்பமானது.

முதலில் முத்து பேச ஆரம்பித்தான்.. 17 வருடங்களுக்கு பின் வந்த ஞானோதயம், மக்களைத் தேட ஆரம்பித்தது.. கிடைத்த அனுபவங்களைச் சொல்ல,, நாங்கள் திரட்டி வைத்திருந்த தகவல்களை பரிமாறிக் கொண்டோம்.

சிங்கப்பூர், ஜப்பான், மத்தியக்கிழக்கு, இங்கிலாந்து, அமெரிக்கா இங்கிருந்தெல்லாம் மக்கள் வெஹ் டெலிகாஸ்ட் மூலம் எங்களை கண்டு மகிழ அவரவர் வெப் கேம் மூலம் தங்கள் தரிசனம் எங்களுக்குத் தர.. முதல் சுற்று முடிந்தது.

சிறிது நேரத்தில் எங்கள் கல்லூரியில் எங்கள் காலத்தில் இயக்குனராய் இருந்த சண்முகநாதன் அவர்களும், எங்கள் கல்லூரி அறக்கட்டளை தாளாளர், மற்றும் நிர்வாக அலுவலர்கள் வந்திறங்கினர்.

ஆளுயற ரோஜா மாலையுடன் இயக்குனர் வரவேற்கப்பட்டார். எத்தனியோ மாணவர்களை சந்தித்து இருந்தாலும் அனைவரையும் நன்கு நினைவு வைத்திருந்தார். பெயர் சொல்லி அழைத்தது மட்டுமின்றி எங்கள் குறும்புகளையும் நினைவு வைத்திருந்து சொல்லிச் சிரித்தார். அவருடன் கல்லூரியை மறுமுறை வலம் வந்தோம். பிறகு மதிய உணவு ஆரம்பம் ஆனது..

==============================================================================================

தற்போதைய கல்லூரி முதல்வர் வேணுகோபால் அனைவரையும் வரவேற்க,, மேடையேறினர்.
"தக தகா" வாசு கடவுள் வாழ்த்துப் பாட, "பொட்டி" சுகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினான். "முன்சொட்டை" முத்து அனைவரையும் வரவேற்க, வந்திருந்த அனைத்து விருந்தினருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரித்தாளாளர் தன் நினைவுப் பரிசாக அனைத்து மாணவர்களுக்கும் மொமெண்டோ வழங்கினார். பிறகு சொற்பொழிவுகள் ஆரம்பித்தன. தாளாளர், இயக்குனர், தற்போதைய முதல்வர், கல்லூரி ஆசிரியர்கள் எல்லோரும் தங்கள் இனிய நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொள்ள,
அமெரிக்காவிலிருந்து ஜாங்கோ ஆனந்த குமாரும், இங்கிலாந்திலிருந்து கோலி உதயகுமாரும் நினைவுகளை வலை மூலம் பகிர்ந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாணவரும் தம் கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒன்றிரண்டு இனிமையான நினைவுகளை அசை போட்டு, வாழ்வில் முன்னேறிய விதத்தைப் பற்றிப் பேச, ஒரே நாளில் எக்கசக்கமாய் வாழ்ந்து அனுபவித்த உணர்வும், மக்களின் அயராத உழைப்பு, வெற்றிபெற செய்த முயற்சிகள், வெற்றிச் சரித்திரங்கள், சறுக்கல் பாடங்கள் என நிறைய அறிந்தோம்.

இதன் பிறகு பழைய / புதிய புகைப்பட பதிவுகள் திரையிடப்பட்டன. அன்றும் இன்றும் உள்ள வித்தியாசங்கள் அப்பட்டமாய் தெரிய ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து மகிழ்ந்தோம்.

கல்லூரிக்கு முன்னோடிகளான நாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளென சில விஷயங்கள் பரிந்துரைக்கப்பட்டன. குழுப் புகைப்படங்கல் எடுக்கப்பட்டது.

பிறகு மரம் நடு விழா..

18 வது வருடம் தொடங்குவதை முன்னிட்டு 18 மரக்கன்றுகள் நடப்பட்டன. மெதுவாய் மாலை மயங்கத் தொடங்கியது.. மெல்ல் ஹாஸ்டலை நோக்கி நான், சஃபி(பாய்), பாச்சா அனைவரும் நடந்தோம். புதுப்பெண்ணாய் இருந்த ஹாஸ்டல் இத்தனை வருட நலிவுகள் உடலில் அடையாளம் போட்டு, சுருக்கங்களுடன் நரை தட்டி கிழடாகி இருந்தது.

கனத்த மனதுடன் நாங்கள் வசித்த அந்த வசந்த மாளிகையை வலம் வந்தோம். சஞ்சலமாய் மனம் பிசைய எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற ஹாஸ்டலுக்கு ஆறுதல் சொல்லும் முகமாய்,, கதவுகளையும் ஜன்னல்களையும், சுவர்களையும் வருடிப்பார்த்தோம்..

மெதுவாக இருள் கவியத்தொடங்கியது.

திருச்சி ஜென்னீஸ் ல் காக்டெய்ல் பார்ட்டிக்கு போக வேண்டுமே.. நான் என் காரை நோக்கி செல்ல, தலை யிடம் இருந்து ஃபோன்..

"என்னடா வர்ரியா இல்லை நான் ஆல்டோ ல போகட்டுமா"
"நீ ஆல் "டோ"ல போனாலும் சரி ஒத்தை "டோ" ல நொண்டி நொண்டி போனாலும் சரி.. நான் வர 5 நிமிஷமாகும்"

அடங்கினான் தலை..

நான், தலை, சிகாமணி, 5 ரூபா, ராஜப்பிரபு ஆக்யோர் ஏறிக்கொள்ள திருச்சி ஜென்னீஸ் ஐ நோக்கி சென்றோம்.

முதலில் மனோகரின் அறைக்குச் சென்று உடை மாற்றி (ஜிகு ஜிகுன்னு இருக்க வேண்டாமா) பின்னர் மீட்டிங் ஹாலுக்கு வந்தோம்..

மீட்டிங் அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது...

சில பல விவாதங்களுக்கு பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டன.

1. 17 வருடங்களாகியும் வாழ்க்கையில் இன்னும் செட்டிலாகாத நண்பர்களுக்கு கை கொடுப்பது. அதற்கான திட்டங்கள் தீட்டுவது
2. 6 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வது
3. ஆரம்ப வேகத்தை இழக்காமலிருக்க, அடிக்கடி தொடர்பு கொள்வது
4. கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுவது
5. கேரியர் கைடன்ஸ்
6. என்செம்ப்லெ-89 என்ற பெயரில் வலைமனை அமைத்து மக்களை இணைப்பது

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்லூரியின் மற்ற மாணவர்களை இச்சங்கத்துடன் இணைப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்.

முத்துக் குமார் - திமிங்கிலம் ..ஸாரி - தலைவர்
எம்.ஜி.ஆர் (ஆ.ராமச்சந்திரன்) - செயலாளர்
உதவிச் செயலாளர் - முத்து வெங்கடாசலம்
பொருளாளர் - ராஜப்பா

மண்டல பொறுப்பாளர்கள் :

சென்னை : ஆமை தியாகராஜன்
பெங்களூர் : தாமரை செல்வன் (*****)
திருச்சி : தளபதி ஸ்ரீனிவாசன்
கொங்கு மண்டலம், கேரளா : பி.கே.குமரேசன்
யூ.ஏ.ஈ : எஸ்.பாஸ்கர்
யூ.எஸ்., யூ.கே : எஸ்.ஆர்.ரமேஸ்
கிழக்கு நாடுகள் : எஸ்.ரமணன்

மீட்டிங் முடிய எல்லோரும் காக்டெயில் பார்ட்டி நடக்கும் புல்வெளிக்கு ஓட, திருச்சி சத்ஜம் ஆர்க்கெஸ்ட்ராவின் லைட் மியூஸிக்கும், காரைக்காலில் இருந்து சம்பத் குமார் கொண்டு வந்த "டைட்" மியூசிக்கும் (அதாங்க,, கண்ணாடி கோப்பைகளின் சத்தம்) மனதை மகிழ்விக்க .. ஆரம்பமே வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..


இரண்டொரு பாடல்கள் பாடப்பட.. மெதுவாய் கண்ணாட்க் கோப்பைகளில் இருந்து பொன்னிற பானங்களும் வெண்ணிற பாணங்களும் தன்னிலை மறக்க வைக்க கால்கள் எங்களைக் கேட்காமலே நடனமாடத் தொடங்கின.

============================================================================================

சிறிது திரவங்கள் இரைப்பை வரை பயணித்தபின் நுரையீரல் வழியாய் புகுந்த நிகோடின் நரம்புகளை சொடுக்கி விட தாளங்களுடன் ஆட்டம் நடந்து கொண்டிருக்க,,, சில புதியவர்கள் .. அலட்டல் சக்திவேல்.. தமிழரசன் என காலை வந்து சேரமுடியாதவர்கள் வந்தனர். இசை செவிகளில் நுழைந்து கால்களை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது...


"புல்டாக்" கண்ணன் கையில் மைக் செல்ல "அமைதி" "அமைதி " எனக் கூச்சல கிளம்பியது.

மக்களுக்கு விருது வழங்கும் விழா ஆரம்பித்தது...

முதல் விருது : பரிந்துரைக்கப்பட்டவர்கள் மணிவண்ணன், முத்துக்குமார் மற்றும் உமா சங்கர்... தொடரை படித்து வருபவர்களுக்கு இது என்ன விருது என்று புரிந்து இருக்கும்...

கடுமையான போட்டி என்பதால் வாக்கெடுப்புக்கு விடப்பட.. மூவருக்குமே தங்களைப் பற்றி பேசி வாக்கு சேகரிக்க வாய்ப்புத் தரப்பட்டது...

ஆச்சரியமான உண்மை... அங்கு வந்திருந்து 60+ நண்பர்களில் சீப்பு வைத்திருந்தவர்கள் இவர்கள் மட்டும்தான்.. (பென்ஸூ நீரும் சீப்பு வைத்திருப்பீரே!!!)

வாக்குச் சேகரிப்புக்கு பின் மணிவண்ணன் 70 ச்தவிகித ஓட்டுக்களை பெற்று.. வென்றார்..

பிறகு "எப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" போட்டி நடத்தப்பட...
நாடி ராஜ் 100 சதவிகித ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற..

தாவும் குரங்குகள் போட்டிக்கு, நான், மனோகர் மற்றும் பாச்சா பரிந்துரைக்கப்பட்டோம்.. ஓட்டெடுப்பில் மனோகர் தேர்ந்தெடுக்கப் பட்டார்..

அதன் பிறகு சிறந்த டான்ஸர் விருதை பெற கடுமையான போட்டி நடைபெற்றது.. சஃபீ, லைஜூ மற்றும் நாட்ராஜ் அவ்விருதுகளை தட்டிச் சென்றனர்.

இவையெல்லாம் முடிய மணி 10 கடந்து கொண்டிருக்க.. மெதுவாய் திட உணவின் பக்கம் கவனம் திரும்பியது.. என்ன சாப்பிட்டோம் என்பதில் கவனம் செல்லவே இல்லை..

மெதுவாய் இரவே ஊருக்கு கிளம்புபவர்கள் ஒருவரொருவராய் கிளம்ப.. அனைவரையும் கட்டி அணைத்து வழியனுப்பு விழா நடந்தது.. இரவு அறைக்கு வரும் பொழுது மணி வழக்கம் போல் 2:00.

மறுநாள் காலை உடலெங்கும் இன்பமாய் வலிக்க, கணக்கு பார்த்து முடித்து, காலைச்சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, நினைவுகளைச் சுமந்து கொண்டு ஈரோடு நோக்கித் திரும்பினேன்.. தனியாக......

முற்றும்

======================================================================================

No comments:

Post a Comment