Tuesday, December 1, 2009

நவீன நாரதர்

சுவாமி

உன் எண்ணம் நிறைவேறி விட்டதா?

நாராயணா! நாராயணா!! நீங்கள் என்னை சந்தேகத்தோடு தான் பார்க்கிறீர்கள். உங்களிடம் விளையாட முடியுமா? திருவிளையாடல்களை நடத்துவதே நீர்தானே!

நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பார்கள்

முடியும் என்று சொல்லாதீர்கள் பரமேஸ்வரா!... முடியாத ஒரு முடிப்பிரச்சனை ஒன்று முடிவின்றி ஓடிக் கொண்டிருக்கிறது இத்தளத்தில்.. கங்கையை சடையில் முடிந்த கங்காதரா மங்கைக்கு இடப்பாகம் அளித்த மஹேஸ்வரா... சங்கை அரிந்து வாழும் நக்கீரனுக்கு அருள் புரிந்த சர்வேஸ்வரா! என்கையில் ஒன்றுமில்லை என்பது நீர் அறியாததா?

சந்தடி சாக்கில் என் இருமண விவகாரத்தை சந்திக்கு இழுக்காவிட்டால் உனக்கு தூக்கம் வராதா பிரம்மபுத்திரா!

எல்லோரையும் எதாவது ஒரு புத்திரன் என்று அழைக்க முடியும் ஆதியும் அந்தமும் இல்லாப் பரம்பொருளே! உம்மை யார்புத்திரன் என்றழைக்க முடியும்...

சரி சரி மன்றமெல்லாம் ஒரு வித மணம் வீசுகிறதே கவனித்தீரா! என்ன மணம் அது?

திருமணம் என்னும் நறுமணம் பரமேஸ்வரா!.. சதாசர்வ காலமாக உமது மூத்தபிள்ளை கணேசரை போல் மால்களிலும் தியேட்டர்களிலும் பெண்தேடிக் கொண்டிருந்த சிலர் தம் தாய்தந்தை கைகாட்டும் பெண்ணையே மணமுடிப்பதாய் முடிவெடுத்து விட்டனராம்...

என்ன இருந்தாலும் வாழப்போவது இவர்களல்லவா! மங்கை மனதிற்கு இனியவளாய் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்காதா?

கனவு காண்பதில் தவறில்லை கௌரிசங்கரா! காதல் என்பது மணத்திற்கு முன்னால் வந்தால் என்ன பின்னால் வந்தால் என்ன? வாழ்க்கையை இனிமையாக்குவது எதிர்பார்ப்பற்ற அன்புதானே!

சரியாய் சொன்னாய். நீ பிரம்மச்சாரிதான் என்றாலும் மாயையின் வயப்பட்டு பெண்ணாகி ஒரு முறை மணவாழ்க்கையை அனுபவித்திருக்கிறாயே!... சொல்.. எதிர்பார்ப்பற்ற அன்பு என்றால்..

எவனொருவன் மணம் முடிக்க எண்ணுகிறானோ அவன் முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்..

சுயபரிசோதனையா?

ஆம் இறைவா! சுயபரிசோதனை என்பது அகமும் புறமும் கலந்தது.. முதலில் தன் ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.. சிலருக்கு இரத்தப்பிரிவு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்ததாகப் படைக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு குறிப்பிட்ட ரத்தப்பிரிவினரை மணமுடித்தால் மட்டுமே சந்ததி இன்னல்களின்றி ஏற்படலாம்.. அதுமட்டுமின்றி இன்று வரை தாய் கை உணவு உண்டு வளர்ந்திருந்தால் பரவாயில்லை.. பணத்திற்காக அன்னம் விற்கும் உணவகங்களில் உண்டு, உடல் உழைப்பு குறைந்த மக்கள் கொழுப்பு சர்க்கரை என்ற சில தொந்தரவுகளைக் கொண்டிருக்கக் கூடும். அவற்ரை சரிபார்த்துக் கொள்வதும் அவசியம்...

ஆமாம் நாரதா! திருமணம் முடிந்தவுடன் மணமக்களை இந்த உறவினர் கவனிக்கும் கவனிப்பு இருக்கிறதே.. உண்ண முடியாத அளவிற்கு உணவு.. தின்பண்டங்கள், பானங்கள் என்று படுத்தி விடுகிறார்களே... ஆரோக்கிய உணர்வு உள்ளவர்கள் அளவறிந்து உண்பார்களே!..

அதற்கடுத்து மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் மஹாதேவா!

மனதையா!

ஆமாம் ஆருத்ரா!.. தன்னை நம்பி சிலர் வாழப்போகிறார்கள் அல்லவா.. இனியும் நான் எனது எனக்கு என்ற எண்ணங்கள் தலை தூக்கலாமா?

என்ன சொல்கிறாய் திரிலோகச் சஞ்சாரியே! நீ சொல்வதைப்பார்த்தால் சுதந்திரத்தை பறிகொடுப்பது போல் இருக்கிறதே?

இல்லை இறைவா! சுதந்திரத்தை பறிகொடுப்பதல்ல.. சுதந்திரத்தை பாதுகாப்பது!

குழப்ப ஆரம்பித்துவிட்டாய்.. உன் சப்லா கட்டை சத்தத்தை குறைத்து பொறுமையாகச் சொல்..

சர்வேஸ்வரா!.. ஒவ்வொரு மணமக்களும் திருமணத்தால் தான் இன்பமடைவோம்.. தமது மகிழ்ச்சி பெருகும் என்று எதிபார்க்கிறார்களே..
அது தவறு..

இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.. என் முதல் திருமணம் முடிந்தவுடனேயே நான் பிச்சையெடுக்க வேண்டி வந்ததே!

அது திருமணத்தின் தவவறில்லை ஆண்டவா!.. பிரம்மன் தலையை நீங்கள் நுங்கு போல் நோண்டி எடுத்ததால் வந்த பிரம்மஹத்தி...

கல்யாணம் பண்ணி கடனாளி ஆனானே கலியுகத் தெய்வம் வெங்கடேஸ்வரன்..

அது வீம்புக்கு செலவு செய்து கடனாளி ஆகாதீர்கள் என்று உலகிற்குச் சொன்ன ஒரு பாடமல்லவா? எதை எதையோ சொல்லி கதையை திசை திருப்பாதீர்கள்.. நான் சொல்லவந்ததை முழுதாக சொல்லவிடுங்கள்...

சரி சொல்.. இன்னும் ஐந்து நிமிடத்திற்கு நான் வாயே திறக்கப் போவதில்லை.

நான் சொல்லுவதை நீங்கள் வாயைத் திறந்து கொண்டுதான் கேட்கப் போகிறீர்கள்..

திருமணத்தின் சூட்சமமே எதிர்பார்ப்பற்ற அன்பில்தான் தொடங்குகிறது..
திருமணத்தினால் நான் சுகமடைவேன் என்று எண்ணுபவன் சுகத்தின் பின்னால் போகிறான்.. அகத்தை, தன் அகத்தவளை தன்னுடைய தேவை தீர்க்க வந்த சேவகியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறான்.. தன் சுகம் தேடியவன் அதை தேடிக்கொண்டேதான் இருக்கிறான். ஏனென்றால் இன்பம் அவனுள் இருக்கிறதே தவிர வெளியே இல்லை..

அதே சமயம் என்னுடன் வாழ வந்தவளை சந்தோஷமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளின்பம் நோக்குபவன் அளவில்லா இன்பமடைகிறான்.. சந்தோஷத்தினால் தான் சந்தோஷத்தை தர முடியும்.

இயல்பாகவே மனித மனம் தன்னை சந்தோஷப் படுத்துபவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கத்தான் நினைக்கும்.. யார் முதலில் என்ற கேள்வி எதற்கு?

உன்னால் உன் மனைவியை, மக்களை, பெற்றோரை சந்தோஷமாய் வைக்க முடியுமா? எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு நழுவுவதில்லை வாழ்க்கை..

மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாய் நினைப்பவன் மனைவியை தன் வழிக்குக் கொண்டு வந்து விடுகிறான்..

என்றுமே எவரும் எந்த சந்தோஷத்தையும் தனியாய் அனுபவிப்பதில்லை.. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனும் தான்..

எவனொருவன் தன் மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாக்கிக் கொள்கிறானோ அவன் பெறும் சந்தோஷத்திற்கு அளவில்லை..


அதாவது!..

நீங்கள் ஐந்து நிமிடத்திற்குள் வாயைத்திறந்து பேச ஆரம்பித்து விட்டீர்கள்.. இதற்குத் தண்டனை...

தண்டனை..

திங்கள் வரை நான் பேசப் போவதில்லை!!!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

விளையாட்டுப் போதும் நாரதா சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்..

உங்களாலேயே பொறுக்க முடியவில்லையே!.. இளைஞர்களை எண்ணிப்பாருங்கள் ஈஸ்வரா..

அதாவது தனது மனைவிக்கு எவனொருவன் தன் மிகச்சிறந்த நம்பிக்கையை, மதிப்பை, அன்பை அளிக்கிறானோ அவன் மகிழ்ச்சியைத் தவிர வேறு காண்பதில்லை...

ஏற்கனவே ஒருத்தி என் தலைமேல் அமர்ந்து படுத்தும் பாடு போதாதா? மக்களையும் அந்த வேதனையை படச் சொல்கிறாயா? நாரதா நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்...

அப்படியல்ல அம்மையப்பா! எதிலுமே உடனடி லாபம் எதிர் நோக்கக் கூடாது.. ஒருவன் தன் மனைவியை சிறந்த தோழியாக்கிக் கொள்வதின் மூலம் பாரம் மனைவிக்குத் தான் அதிகமே தவிர அவனுக்கல்ல..

புரியவில்லையே! இது எப்படி! இரண்டும் ஒன்றும் ஒன்று என்று புதுக் கணக்கு சொல்லுகிறாய்?

பிறந்த வீட்டில் இருந்து வரும் ஒரு பெண்ணின் மனநிலையை புரிந்து கொள்ளவேண்டும் பிரகதீஸா, அவளின் பெற்றோர்கள், தோழர்கள், உறவினர்கள் என அனைவரையும் விட்டு வருகிறாள்.. இத்தனை இழப்புகளையும் தாங்கி வரும் அவளுக்கு கடலில் கிடைத்த கட்டுமரமாய் இருப்பது கணவனின் ஆதரவு.. ஆரம்பகாலத்திலே எதையுமே ஒப்பிட்டு நோக்கக் கூடிய மனது இருக்கும். நம் தந்தை எப்படி பார்த்துக் கொண்டார், நம் அண்ணனுடன் எப்படி விளையாடினோம் என்று..

ஆமாம் ஆமாம்.. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் தட்சன் நடத்து யாகத்துக்கு செல்வேன் என்று அடம் பிடித்தாளே சதிதேவி..

இப்படிபட்ட ஒருபெண், ஆதரவும் அன்பும் மிக்க ஒருதோள் கிடைக்கும் பொழுது சட்டென தழுவிக் கொள்கிறாள்..

என்ன சொல்கிறாய் நான் அன்பு காட்டவில்லையா?

அன்பு காட்டியிருக்கலாம், ஆனால் சமத்துவம் காட்ட எத்தனைக் காலம் பிடித்தது நினைவிருக்கிறதா உமக்கு.. சக்தியை வணங்காத முனிவனை வணங்க வைக்கத்தானே பாதியிடம் தந்தீர்..

சரி சரி... சக்தி வரும் நேரத்தில் பழைய விஷயங்களை கிளராதே மேலே சொல்...

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முற்றிலும் புதிய இடம் என்று வரும்பொழுது இருக்கும் தற்காப்பு உணர்ச்சி என்பது தொட்டாற்சிணுங்கி போன்றது. ஆகையால் புது இடம் வந்தப் பெண் சட்டென எதிலும் தற்காப்பு நடவடிக்கை எடுப்பாள்.. அத்தை ஒரு வார்த்தை சொன்னது சங்கேதமாய் பூடகமாய் தன்னைக் குத்திக் காட்டுகிறதோ.. ஓரகத்தி (ஓர் அகத்தி, ஒரே வீட்டில் வாழவந்தவள், கணவனின் சகோதரன் மனைவி) சொன்னது தன்னையா, இல்லை அவளுடைய அண்ணியையா.. இப்படி பல எண்ணங்கள்..

கல்யாணம் செய்து கொண்டது அவளும் அவள் கணவனும் தானே இவர்களைப் பற்றியெல்லாம் அவள் ஏன் கவலைப் படவேண்டும்?

என்ன செய்வது இறைவா, இவர்களேல்லாம் தன் கணவனுக்கு பிடித்த உறவினர்கள்.. இவர்களின் கூட்டத்தில் நம்மைச் சேர்ப்பார்களோ இல்லை ஆட்டத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற அச்சம்

இப்படியே போனால் எப்படித்தான் வாழ்வதாம்?

இங்குதான் கணவனின் மீது அவள் கொள்ளும் நம்பிக்கை கை கொடுக்கிறது. கணவன் ஆதரவு பெற்ற எந்தப் பெண்ணும் பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் தெளிவாக தைரியமாக இருக்கிறாள்..

அவர்களெல்லாம் தெளிவாகத்தான் தைரியமாகத்தான் இருக்கிறார்கள். நாம் தான் பயந்து ஒளிந்து..

அவசியமே இல்லை அரனே! பெண்கள் ஆதிக்கம் செய்பவர்களைத்தான் அவதிக்குள்ளாக்குவார்கள்.. நண்பர்களையல்ல.

புரியவில்லை...

சற்று விலகிச் சென்று உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்... நான்கு ஆண்கள் நண்பர்களாக இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. நான்கு காரியங்கள் இருந்தால் ஆளுக்கொரு வேலை என்று செய்வார்கள்...

ஆமாம் ஆமாம்


ஆனால் பெண்கள் அப்படியல்ல.. தனித்தனியே செய்யமாட்டார்கள்.. ஒவ்வொரு காரியத்திலும் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்..

ம்ம்... உதாரணத்திற்கு...

இரு ஆண் நண்பர்கள் தங்கள் இருவருக்கும் உடை எடுக்கச் சென்றால், அவரவர்களுக்கு வேண்டியதை அவரவர்கள் தேர்வு செய்வார்கள்.. பணம் கொடுப்பார்கள் வாங்கி வருவார்கள்... இரு பெண்கள் சென்றால், முதலில் ஒரு பெண்ணிற்கு தேர்வு செய்வார்கள்.. அது இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.. பிறகு அடுத்த உடை.. அதுவும் இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும்...

ஓஓஓஓ பெண்கள் உடையெடுக்க தாமதமாகும் காரணம் இதுதானா?

அதுமட்டுமல்ல, தனி ஒரு பெண்ணாக சென்று ஆடை வாங்கினால் எந்தப் பெண்ணுக்குமே திருப்தி இருக்காது.. ஏதோ வாங்கினோம் உடுத்தினோம் என்றுதான் இருப்பார்கள்...

சரி சரி மெனக்கெட்டு எதற்கு இந்த உதாரணத்தை சொல்லுகிறாய்?

இப்படித் தன் தோழியை எல்லாவற்றிற்கும் சார்ந்திருக்கும் ஒரு மனைவி அந்த தோழிக்கும் மேலாய் தன் கணவனை நினைக்க ஆரம்பித்தால்..

ஆரம்பித்தால்...

யோசித்துக் கொண்டிரூங்கள் அவசர வேலை இருக்கிறது வந்து சொல்கிறேன்


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-



நாரதா அனைத்து வேலைகளும் முடிந்ததா? இன்றாவது முழுமையாய் பேச முடியுமா?

நிச்சயமாக.

சரி ஆரம்பி...

ஆரம்பதிலிருந்தே வருகிறேன்...

மறுபடியும் ஆரம்பமா..

இல்லை இல்லை.. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே.. இந்த முதல் கோணல் எங்கே இருக்கிறது என்று சொல்கிறேன்..

சொல் சொல்... நேராக்கி விடலாம்..

இன்று எத்தனையோ மணமக்கள், அவர்களைப் பெற்றவர் மற்றும் உறவினர்கள் தம் தகுதி (உடல் நிலை, உள்ள நிலை) போன்றவற்றைப் பற்றி கவலையே படாமல் இருப்பதிலே சிறந்தது எனக்கு என்ற நோக்கிலே மணத்திற்கு இணை தேடுகிறார்கள்.. மணந்த பின்னே இணை தமக்கு இசைந்து வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

புரியவில்லை..

எடுத்துக்காட்டாய் ஒரு பெண்ணை எடுத்துக் கொள்வோம்.. சிறிது பணக்கார வீட்டுப் பெண்...அழகான பெண்..

வரன் தேடுவது கஷ்டமில்லையே..

தேடுவதில் கஷ்டமில்லை தேவனே... இவர்களின் பெற்றோர்களின் கனவு தன் பெண் இதை விட வசதியான இடத்தில் வாழ வேண்டும். அதற்காக விலை கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்...

விலை கொடுப்பதா?

ஆமாம் இறைவா.. தன் மகளின் ஆர்வம் என்ன? அவள் என்ன சாதிக்க விருப்பப் படுகிறாள்.. அதற்கான வாய்ப்பு இத்திருமணத்தினால் தடைபடுமா இல்லை கிடைக்குமா என்று ஆராய்வதே இல்லை.. நல்ல வருமானம் உள்ள ஒரு ஆண், அழகானவன், சராசரியாய் நல்லவன்.. சாதனை செய்யும் நிலையில் அல்லது சாதிக்கிறவன் வேண்டும் என்று தேடுகிறார்கள்...

இருவரும் சாதிக்க வேண்டுமென்றால் அதற்கு குடும்ப பலம் பக்கத்துணை வேண்டுமே.. இல்லையென்றால் நாளைய வாரிசுகள் நசுங்கிப் போகுமே...

அதேதான் இறைவா.. இவர்களுக்கு கூட்டுக்குடும்பமும் கூடாது, பெண்ணுடைய கணவனும் சாதிக்க வேண்டும், பெண்ணும் அவளது சாதனைகளை செய்ய வேண்டும்..

வீட்டை பந்தய மைதானமாக்கி விடுகிறார்கள் என்று சொல்...

ஆமாம், சாதிக்க துடிக்கும் சாதனையில் விளிம்பில் இருக்கும் இருவரை சேர்த்து வைத்து ஒருவர் விட்டுக் கொடுங்கள் என்று சொல்லி இருவரையும் கீழேதள்ளி குழிபறித்து விடுகிறார்கள்...

இது இப்படி என்றால்... இதற்கு எதிர்புறம் ஒன்று இருக்க வேண்டுமே!..

ஆமாம்.. அன்பானவள், இல்லத்தை நடத்துவதில் சாமர்த்தியசாலி, பொறுமையானவள், குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்க நினைப்பவளை சராசரி மாத வருமானம் உடையவர்கள் தேரிந்தெடுக்கிறார்கள்... வலுக்கட்டாயமாய் நீ சம்பாதித்து வரவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். அவளுக்கு பிடித்தமானதை அவள் செய்ய முடியாது..

ஜோடி மாறி இருந்திருந்தால்...

கணவன் சாதிக்க, குடும்பத்தை மனைவி நிர்வகிக்க ஒரு நல்ல குடும்பமும்,

கணவனும் மனைவியும் சம்பாதிக்க, குடும்ப பாரத்தை கூட்டுக் குடும்பத்தில் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான இன்னொரு குடும்பமும் இருந்திருக்கும்...

அதாவது!..

ஆம் இறைவா.. இங்கேதான் முதல் மனத் திடம் தேவைப்படுகிறது..

தனது வாழ்க்கை கனவை அறிந்து, தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையின் கனவை அறிந்து இரண்டையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்...

இது சாத்தியம் போலத் தெரியவில்லையே!!!

சாத்தியமில்லை என்று முயற்சிக்காமலேயே சொல்வது தவறு என்று நீங்கள் அறியாததா? கட்டம் கட்டமாய் போட்டு செவ்வாய் லக்கினத்தை பார்க்கிறான், குரு கேதுவைப் பார்க்கிறான் என்று விவரமாய் ஆராய சமயமிருக்கிறது.. பையனுக்கு எவ்வலவு சொத்து தேறும் .. எவ்வளவு வருமானம் என்று தகவல் சேகரிக்கிறார்கள்.. பொண்ணுக்கு எவ்வள்வு நகை போடுவார்கள், என்ன வருமானம், எங்கு படித்தாள், யார் தோழிகள் என்று அணுஅணுவாக விசாரிக்க முடிகிறது.. எதிர்காலக் கனவு என்ன என்று அறிந்து கொள்ளக் கூடாதா?

அறிந்து கொண்டால் என்ன பலன் நாரதா?

உன் கனவு நிறைவேற வேண்டும் என்று நீ எண்ணுவதைப் போல் உன் துணையின் கனவும் நிறைவேற வேண்டும் என ஆசைப்படு.. இதை தொடக்கத்திலேயே செய்ய ஆரம்பித்தால் ஒருவர் மீதான இன்னொருவரின் நம்பிக்கை திருமணத்திற்கு முன்பே ஆரம்பித்து விடுகிறது...

சில சமயம் நமக்கு பிடித்த பெண் நம்முடைய இலட்சியதிற்கு சரிவராமல் போகலாமே..

அவனது இலட்சியத்தை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு, அதாவது அவன் இலட்சியமே அவளுக்கு கணவனாய் வாழுவதே என்னும் அளவிற்கு அவன் இதயத்தில் மாற்றம் செய்கிறவள் என்றாள் தவறே இல்லை.. ஏனென்றால் அவனது இலட்சியம் தான் மாறிவிட்டதே

இதில் குணத்திற்கு என்ன மதிப்பு நாரதா!

இறைவா, குணம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று.. நான் நானாகத்தான் இருப்பேன்.. வருகிறவர் தான் சரி சரியென்று போக வேண்டும் என்று எண்ணுபவர்களைத் தள்ளி வைக்க வேண்டும்..

என்ன நாரதா குண்டு போடுகிறாய்..

ஆம் இறைவா, தன்னை சிறிதும் விட்டுகொடுக்க நினையாதவனுக்கு துணையாகப் செல்பவருக்கு, வாழ்க்கையில் துன்பமே வரும்...

முன்பு நீ சொன்ன மாதிரி ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலுமா?

ஆம் இறைவா!, துணைக்காய் சிறிதும் விட்டுக்கொடுக்காதவனுக்கு துணை எதற்கு... இரண்டு வேலைக்காரர்கள் போதுமே!.. எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது என்பது சங்கார மூர்த்தி தாங்கள் அறியாததா?

அதாவது, திருமணம் என்று சொல் வரும்பொழுதே விட்டுக்கொடுத்தல் என்ற சொல் பின்னாலேயே வந்து விடுகிறது இல்லையா?

ஆம் இறைவா, ஒற்றைக் குழந்தைகள் கொண்ட வீடுகளில் இப்பண்பு பெரும்பாலும் பயிற்றுவிக்கப் படுவதில்லை.. போட்டிகள் நிறைந்த உலகத்திலே விட்டுக் கொடுக்கும் பண்பு பலவீனமாக கருதப் படுகிறது.. ஆனால் குடும்ப வாழ்விற்கு விட்டுக் கொடுத்தலே பலம்..

அதாவது

ஒரு நண்பனுக்கு விட்டுக் கொடுப்பதை யாரும் பலவீனமாக எண்ணுவதில்லை, ஒரு தாய்க்காகவோ, தந்தைக்காகவோ விட்டுக் கொடுப்பதை யாரும் பலவீனமாகக் எண்னுவதில்லை அதே போல் மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.

ம்ம்ம்ம்... முதலில் விட்டுக் கொடுக்கும் அவசியத்தை குறைக்க வேண்டும் என்றாய்.. இப்போது விட்டுக் கொடுக்க வேண்டுமென்கிறாய்...

காலத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடும் காலபைரவா!, முயற்சி நம் கையில் முடிவு ஆண்டவன் கையில் ... என்னதான் திட்டமிட்டாலும் காலம் செய்யும் கோலத்தில் நொடிக்கு நொடி மாற்றம் வந்து விடுகிறதே!. நான் சொன்னது இதுதான்.. உன் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது இருவரின் ஆசையையும் அறிந்து ஆராய்ந்து மனவுறுதியுடன் இருவரும் இன்பமாய் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்த பின் தேர்ந்தெடு.. தேர்ந்தெடுத்த பின் சில பல மாற்றங்கள் வந்தாலும் காலத்திற்கேற்ப மாறிக்கொள்.. இருவருமே இதைச் செய்யும்பொழுது குடும்பம் என்ற நதி அன்பு நீர் பெருகி அமைதியாய் ஓடும்.. பலப் பல பாசப்பயிர்கள் வளம் பெறும்...

நீ பேசும் தொனியைப் பார்த்தால் இப்போதைக்கு இவ்வளவுதானா..

ஆம் இறைவா! மற்ற பணிகளையும் கவனிக்க வேண்டாமா.. மீண்டும் பிறகு பேசுவோம்..


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

வாரும் நாரதரே!.. அன்று பிரித்த பாவத்தை இன்று சேர்த்து கழுவ வந்தீரா?

பரம்பொருளே! இப்படி பேசினால் நான் செல்வனிடம் சென்றுதான் பொருளறிந்து வரவேண்டும்.. சொல்வதை தெளிவாய்ச் சொல்லுங்கள்..

அன்று ஞானப் பழம் கொடுத்து என் மகனை என்னிடம் இருந்து பிரித்தாய்.. இன்று வாழ்க்கை ஞானம் தரும் உரை கொடுத்து பல் குடும்பங்களை சேர்த்து வைக்கிறாய்.. அதைச் சொன்னேன்..

மஹேஸ்வரா, மானுடர்கள் குடும்பம், சமுதாயம், நாடு, மானுடம் என்னும் பல பரிமாணங்களை கண்டு உயர்ந்தவர்கள். 600 கோடி மக்கள் இணைந்து வாழுகின்ற உலகத்திலே இருவர் இணைந்து வாழத்தான் இடமில்லையா?

அதுதான் சத்தியம் நாரதா.. நானே பார்வதிக்கு என் உடலில் பாதிப்பங்களித்து வழிகாட்டியிருக்கிறேனே!...

விடிய விடிய இராமயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்றானாம்..

என்ன நாரதா பூடகமாக பேசுகிறாய்..

பின்னே, நான் எனது என்ற பேச்சு வரக்கூடாது என்றுதானே ஆரம்பத்திலேயே உரைத்தேன்..

நீர் பாதி அவர் பாதி..
இருவர் பெற்றது அடுத்தவர் பாதி..
இருவர் இழந்தது இன்னொரு பாதி...
ஆணும் பெண்ணும் ஆகட்டும் சமபாதி
அடுத்தவர் அன்பை நாளும் சம்பாதி

உங்கள் டிரேட் மார்க் நாராயணா நாராயணா வசனத்தியே மறந்துவிட்டீர்..

ஒரு நல்ல குடும்பம் அமையுமென்றால் நாக்கிலிருந்து வரும் அனைத்து வாக்குகளுமே நாரயணன் நாமம்தான் நீலகண்டா.. அன்பே சிவமென்பார்.. அன்பே நாரணனென்பார்.. அன்பைப் போதிப்பதும் ஆண்டவனைப் போற்றுவதும் ஒன்றுதான்..

நாரதா! சத்தியம் பேசுகிறாய்.. வாழ்க.. உன்மொழிகேட்டு பலருக்கு பல சந்தேகங்கல் வரலாம்.. இன்னும் பல கோணங்கள் இருக்கலாம்..

மன்றம் ஒரு திறந்த புத்தகம்... மருந்து தேடி வருபவர்கள், மருந்துண்டு குணமாகி விருந்துண்டு போகும் இடம்.. கேள்விகள் வரட்டும்.. பதில்தர
காத்திருக்கிறேன்..போய் வருகிறேன் பரம்பொருளே

நன்மை உண்டாகட்டும்..



நாராயணா! நாராயணா...

=====================================================================================

கல்யாணத்துக்கு ஆணும் பெண்ணும் தம்மை எப்படித் தயார் சேய்யவேண்டும் என்பதை சிறப்பாகச் சொன்ன நீங்கள் ஒன்றை மட்டும் மறந்து விட்டீர்களே...!உடலியல்,உளவியல் இரண்டின் உண்மை சொன்ன நீங்கள் அவற்றின் வயது பற்றி ஏதும் சொல்லவில்லையே?

பெண்ணின் மணவயது 21(நம்ம ஊரில்) என்பவர்கள் அவள் மன வயது சொல்லவில்லை. ஆணின் மணவயது 25 என்பவர்கள் அவனின் ஆளுமை வயதைச் சொல்லவில்லை. இடையில் வேறு வயதில் இடைவெளி 10 ஆக இருப்பது இல்லறத்துக்கு சிறப்பு என்கின்றார்கள். கரணம் கேட்டால் "நாற்பதுதாண்டியும் பத்துகுறைந்த தோற்றம் ஆணுக்கு முப்பது எட்டினால் அவனில் மூப்புத் தோற்றம் பெண்ணுக்கு"....சேர்ந்து போனால் அண்ணன் தங்கை என்று தெரியாத விழிகள் சோர்வடைய சொல்லும். மார்பகம் நொந்து வீடகம் மயானம் ஆகும். என்னன்னவோ சொல்கிறார்கள் உண்மைதான் என்ன பிரம்ம புத்திரா?

அமரத்துவம் அடைந்தவர்களுக்கு வயது கிடையாது! அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வயதினரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். ஆனால் மானிடப் பிறப்பு அவ்வாற்றில்லையே அமரரே!.

திருமணம் என்பது இரு இதயங்களின் இணைப்பு மாத்திரமல்லவே! இருவரின் வாழ்க்கைப் பயணம் இனிதுற நடைபெற சில வயதுக் கட்டுப்பாடுகள் தேவைதான்.

இந்த விவாதங்களிலிருந்து வாழ்க்கைத் துணை தேடி வயது மீறி கரம் பிடிக்கும் சில மறுமணங்களை தள்ள்ளி வைத்து விட்டு யோசிப்போம்.

அப்பனே!! மண வாழ்க்கையின் பலனே மக்கட் பேறு. அம்மக்கள் வளர்ந்து கல்விகற்ற்று தலையெடுத்து நின்றால்தானே வாழ்க்கையில் நிம்மதி உண்டு.

அதைக் கொண்டு நோக்கும் பொழுது ஒரு ஆணோ பெண்ணோ 60 வயது வரையில் உழைத்து குடும்பம் காப்பர் என்று கொள்வோம். அவ்வயதில் அவரது தலைச்சன் பிள்ளைக்கு மணமாக வேண்டாமோ? ஆக 30 என்பது உயர் பட்ச வயதாகக் கொள்ளலாம்.(30+30 = 60)

பெண்ணின் வயது 30 ற்கு குறைந்திருத்தல் என்பது குழந்தைப் பேற்றுக்கு நல்லது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. வம்ச விருத்தி என்பது ஒரு காரணமாக இல்லாத பட்சத்தில், வயது உச்ச வரம்பு ஒரு தடையில்லை.

குறைந்த பட்ச வயது என்ற நோக்கில் பார்க்கும் பொழுது 21 என்பது சரியாகத் தோன்றுகிறது. அவ்வயதில் பலர் உடலளவில் மண வாழ்க்கைக்குத் தகுதி பெற்று மன அளவிலும் தன் வாழ்க்கையை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை பெற ஆரம்பிக்கிறார்கள். பலர் 21 வயதில் தன் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள். மாற்றம் என்பது இளமையில் எளிது.

உண்மை என்னவெனில் இளம்வயதில் பலருக்கு தம்முள் தாமே எழுப்பிக் கொள்ளும் சுவர்கள் இருப்பதில்லை. அவர்களால் மற்றவர்கலுடன் எளிதில் ஒன்றிப் போக முடிகிறது. அது மட்டுமல்ல, தாயின் வயதிற்கும் குழந்தையின் ஆயுளுக்கும் தொடர்புண்டு என்றும் விஞ்ஞானிகளால் கருதப் படுகின்றது.

"குவா குவா'வை தள்ளி போட்டீங்கன்னா...?

பெண்ணிற்கும் ஆணிற்கும் திருமணத்தின் போது வயது வித்தியாசம் வேண்டுமா? அதனால் என்ன பயன்?

அதிக வயது வித்தியாசம் இல்லாமல் இருப்பது நன்று. சொல்லப்போனால் பெண்ணின் வயது ஆணின் வயதை விட மிகக் குறைவாய் இருத்தல் கேடு.

ஆணின் சராசரி ஆயுளை விட பெண்ணின் சராசரி ஆயுள் அதிகம். என்வே பெண் வயதில் இளைவயளாயிருத்தலின் அவன் காலத்திற்குப் பிறகு அவள் தனிமையில் உழல வேஏண்டிய காலம் அதிகமாகி விடும்.

சிறிய பெண்ணை மணம் முடி என்று சொல்லுபவர்கள் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாய் இருப்பர்.

பெண்கள் முப்பது வயதில் மூப்புத் தோற்றம் காட்டுகின்றனரா? எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? முடி கொட்டி, தொந்தி சேர்த்து, மூட்டு வலியும், முதுகு வலியுமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆண்கள் இதைச் சொல்லலாமா? குழந்தை மணம் கண்டு குதூகலித்த விழிகள் அவை. அவற்றை மறுதலியுங்கள்..

ஜோடிப்பொருத்தம் என்ற்று சொல்பவர்களின் விழிகள் அதில் என்ன தேடுகின்றது தெரியுமா? கணவன் அழகாக இருந்தால் மனைவியைத் திட்டும். மனைவி அழகாக இருந்தால் கணவனைத் திட்டும். இருவரும் அழகாக இருந்தால் காசு பணத்தைத் திட்டும்.

ஆக ஊரார் நோக்கு என்பது மாறக்கூடியது.

கடைசியாக உமது கேள்விக்கு பதில் பண்பட்டவராக..

வாழ்வில் இன்பம் என்பது அன்புத் தம்பதிகள் கரம் பற்றிக் கூட இல்லை கண் நோக்கிலேயே காண இயலும். இல்லறம் நல்லறமாய் இருக்க மனம் தான் காரணம். உடல் அல்ல.

உம்மைச் சுற்றி பெண்கள் சிறு வயதிலேயே வயதானவர்களாக காட்சி அளிக்கிறார்களா? அவர்களின் மன அழுத்தத்தைக் கவனியுங்கள். மனதிற்கும் தோற்றத்திற்கும் மிகப்பெரியத் தொடர்பு உண்டு, மனச் சோர்வு தோற்றப் பொலிவைக் குறைக்கும்.

ஆக உமது கேள்விகளுக்கு பதில்

1. மணவயது 21 லிருந்து 30 வரை
2. வயது வித்தியாசம் -3 லிருந்து +3 வரை

இது வெறும் அறிவுரை மட்டுமே!! கட்டாய விதி அல்ல,

=====================================================================================

ஓரிரு வாரமாய் ஜாதக பொருத்தம் பார்த்து ஓரிரு நாளாய் பொண்ணை பற்றி விசாரித்து ஓரிரு மணி நேரம் பொண்ணை பார்த்து ஓரிரு நிமிடங்கள் மட்டும் பேசி நிச்சயமாகும் எங்கள் திருமணங்களில் இது சாத்தியமா?

நல்ல கேள்வி...

நாராயண, நாராயாண

மனமிருந்தால் மார்க்கமுண்டு அப்பனே! ஓரிரு நாள் விசாரித்தாலும் என்ன விசாரிக்கிறோம் ஏன் விசாரிக்கிறோம்.. அந்தப் பெண் நல்லவளா? அந்தப் பெண் வந்தால் என் வாழ்க்கை சுகமாக இருக்குமா? அந்தப் பெண் வந்தால் நம் குடும்பத்திற்கு சந்தோஷம் அதிகமாய்க் கிடைக்குமா என்றல்லவா விசாரிக்கிறோம்,

என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும் துணை வேண்டும் என்ற என்னத்தில் தானே துணை தேடுகிறோம்.. அதை ஒரு நாளில் செய்தால் என்ன ஒரு வருடம் செய்தால் என்ன? பலனில்லை.

மனம் தயாராக இருக்கட்டும் என்னவனே! இருவருக்கும் லட்சியங்கள் உண்டு. இருவருக்கும் ஆசைகள் உண்டு.. முதலில் எப்பொழுதும் துணையின் எதிர்பார்ப்புகளை அறியுங்கள்.. (பூர்த்தி செய்ய முடியா விட்டாலும் பரவாயில்லை..

அதேபோல் மணமான பிறகும் பல வழிகளில் மணவாழ்வை இன்பமயமாக்கலாம்.. ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்..

அந்த இளைஞனுக்கு 25 வயது. தந்தை இல்லை. தாத்தா வீட்டினர் ஒரு அழகான பெண்ணை அவனுக்கு நிச்சயம் செய்தனர். அவன் பெண்ணுடன் ஃபோனில் பேசிப் பழகியும்தான் வந்தான்.

திருமணமும் நடந்து முடிந்தது. அதுவரை இல்லாத அந்தப் பிரச்சனை முதலிரவில் ஆரம்பித்தது..

நீங்கள் எனக்குப் பொருத்தமே இல்லை, தொடாதீர்கள் என்னை என விலகினால் அவள்.. தினம் தினம் சம்பாதித்தால் தான் சாப்பாட்டிற்கு வழியா, நீங்கள் செய்யும் தொழில் எனக்குப் பிடிக்கவில்லை..

ஊரில் அவரைப் பாருங்கள் இவரைப் பாருங்கள் எவ்வளவு நீட்டாக இருக்கிறார்.. உங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலே என்றாள்..

இரவு முழுதும் விழித்திருந்து மூலையில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருந்தாள்..

இது யார் தவறு? பிடிக்கா விட்டால் தன் தாய் தந்தையரிடம் அழுது மன்றாடி இருக்கலாமே.. ஆயிரம் முறை ஃபோனில் பேசியும் ஒரு துளி கூட காட்டிக் கொள்ளவில்லையே!..

தாய் தந்தையர் செத்து விடுவோம் என மிரட்டினரோ? அப்படி இருந்தாலும் அதற்காக இப்படி செய்தல் ஞாயமா??

இப்படி எல்லாம் விவாதம் ஆரம்பித்து விட்டது தானே உங்கள் இதயத்தில்..

என் மகளை பலவந்தப் படுத்தி விடு என்று எந்தத் தந்தையும் சொல்ல மாட்டான்.. ஆனால் அந்த இளைஞனுக்கு அந்த ஆலோசனைக் கூடத் தரப்பட்டது.. பாலில் தூக்க மருந்து கொடுத்துவிடுகிறோம்.. எல்லாம் போகப் போக சரியாகி விடும்.. யாருமே உண்மையை ஆராய முயற்சி செய்யவில்லை..

இது இப்படியே நிலைத்ததா இல்லையே.. இளைஞனின் பொறுமையும், அவள் ஆசைப்படி தன்னை நாகரீகமாக மாற்றிக் கொள்ளலும் தொடங்கின,. தான் செய்த தொழ்லோடு வருமானம் உயரவும், தன் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும் வியாபாரம் ஆரம்பித்தான். அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் தற்காலிக முடிவிற்குப் போகாமல் அவளது ஆசைகளை நிறைவேற்ற ஆரம்பித்தான்..

ஒரு வருடம், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.. ஏனென்றால் அழகிய பணக்கார மாப்பிள்ளைகளை கட்டிகொண்ட பெண்களின் அதிருப்தியும், இவனது அன்பும் அவளைச் சுத்தமாக மாற்றிவிட்டன..

இதைப்போலத்தான்.. ஆண்டுக்கணக்காய் உம்முடன் வாழப்போகிறவள் ஆசையை அறிந்து கொள்ள தினம் அரை மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள். கூட இருக்கும் ரூம்மேட்டிற்குக் காய்ச்சல் என்றால் சினிமாவைக் கேன்சல் செய்து கூட இருக்கும் நாம்தானே மனைவியை காய்ச்சலில் விட்டு நண்பர்களுடன் சினிமா செல்கிறோம்.

வாழ்க்கையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம்.. நல்ல எண்ணமும், தோழமையும், அன்பும், அக்கறையும் இருந்தால்.


பெண்களுக்கும் இதே அறிவுரைதான். உங்களுக்கு ஒன்றும் சொல்லவே இல்லை என்று எண்ணி விடாதீர்கள்.

=====================================================================================


சரி..நான் ஒருவரிடம் எப்பங்க உங்களுக்கு கல்யாணம்ன்னு கேட்டேன்..அதுக்கு அவரு என்னிடம், "எதுக்காக கல்யாணம் பண்ணனும்ன்னு...?" எதிர்கேள்வி கேட்டாரு... நானும் என் அறிவுக்கு எட்டியதையெல்லாம் புட்டு புட்டு வச்சேன்..ஆனா அவரு நான் சொன்ன எதிலியுமே திருப்தியடையலை... சரி நான் யோசிச்சி பதில் சொல்லுறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்...ஆனா உருப்படியான காரணம் இதுவரைக்கும் என் புத்திக்கு சிக்கவில்லை... அதான் லோகம் முழுதும் சுத்திவரும் நாரதரை கேட்டா கிடைக்கும்ன்னு சேதி கேட்டு ஓடிவந்தேன்... கூறுவீரா..நா ரதரே...?!

சுகம் தா என்று உம்மை விளிப்பவர் உண்டோ? சுகந்தா!..

என்ன சாதித்து விடப் போகிறோம் திருமணத்தால்?

உடலில் சத்துள்ளவரை வாழ்வோம்.. இல்லையெனில் வீழ்வோம் அவ்வளவுதானே!

உள்ளவரை உடன் வந்த கூட்டம் இயலாத போது பறித்துக் கொண்டு ஓடப் போகிறது அவ்வளவுதானே! போகட்டுமே.. நாம் இருப்பதைக் கொண்டு ஒன்றும் சாதித்துவிடவில்லை.. அவர்களாவது சாதிக்கட்டுமே!

இது பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.. சிறு பொழுதில் சொல்லிட முடியாது,,,

திருமணமற்ற சமுதாயத்தை ஒரு முழுச் சுற்று (7 தலைமுறை) சுற்றினால் புரியும்..

பாலூட்டிகளில் மட்டுமே குழந்தைகளுக்கு பெற்றோரின் தேவை மிக அதிகம் உண்டு.. அதில் மனிதனுக்கு வாழ்வின் ஆரம்பத்திலும் இறுதியிலும் மற்றவர் தயவு/துணை தேவைப்படுகிறது..

திருமணம் ஒன்று மட்டுமே இந்த இருவித துணைகளையும் அமைத்துக் கொடுக்க வல்லது.. வேறு எதற்கும் இந்த சக்தி இல்லை..

நட்பிற்குக் கூடவா என்கிறீர்களா? சத்தியமாய் இல்லை.. அது கூட மற்றவரின் திருமணத்தையாவது சார்ந்திருக்கிறது.

அதுதான் உண்மை.



திருமணத்தினால் விளையும் அனைத்துமே கூடுதல் பக்க விளைவுகள் தான்.
நிம்மதியான பாதுகாப்பான நீண்ட வாழ்க்கை தான் திருமணத்தின் முக்கிய விளைவு..

திருமணமின்றி, மனிதனின் ஆயுள் குறையும், திருமணமின்றி மனிதனின் வளர்ச்சி குறையும். திருமணமின்றி மனிதனின் நிம்மதி குலையும்.. மக்கள் தொகை குறையும், ஏன்.. ஒரு காலத்தில் மனித இனமே அழியக் கூடும்..

ஏனென்றால்.. மனிதனை மற்ற விலங்குகளை விட மனிதனால் எளிதில் அழித்தொழித்து விட முடியும்..



=====================================================================================



அண்ணா விட்டுக்கொடுத்தல் (பொறுமையாக) என்பது எதுவரை? அதனையே அவர்கள்(புரிந்து கொள்ளாமல்) பலவீனமாக எடுத்துக்கொண்டால்? ( ஏன் எனில் இதனை நான் என் நண்பனின் வாழ்க்கையில் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் அதனால்தான்)
ஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து சந்தோஷ வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது தான் விஜய்.

பொதுவான அறிவுரைகள் சராசரி மனிதர்களுக்காகவே எழுதப் படுகின்றன. வெகு சிலர் சந்தோஷமான திருமண வாழ்க்கை என்பதற்கான தவறான அர்த்தத்தைக் கொண்டிருப்பர்.

தான் எண்ணியது மட்டுமே நடக்கவேண்டும், தான் மற்றவர் முன்னால் என்றுமே புகழப் படவேண்டும், சந்தோஷம் என்பது தன்னை எல்லோரும் உயர்த்தி வைத்தல் என்ற ஆதிக்க மனப்பான்மை அது. முன்பு ஆண்களுக்கு மட்டுமே அதிகம் இருந்த இந்த உணர்வு மெல்லச் சில பெண்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது..

இந்த எண்ணங்களை கொண்டிருப்பவரைச் சுற்றி சிறிது ஆராய்ந்து பாருங்கள்.. அவரைச் சுற்றி பொய்ப் புகழ்ச்சியும், ஆராய்ந்தே பார்க்காமல் மற்றவரை இகழ்ச்சியும் செய்யும் மனிதர்கள் இருப்பார்கள்.

நாம் யாரின் வாழ்க்கையை அதிகம் சிலாகிக்கிறோமோ அவர்கள் போலவே வாழ ஆசைப் படுகிறோம். தற்பெருமை பேசும் இந்த நட்புக் கூட்டங்களினாலே தான் வாழ்க்கையைப் பற்றிய தவறான எண்ணமே தூவப் படுகிறது,,

உன் நண்பர்களைப் பற்றிச் சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது உண்மைதான்..

கருத்தொருமித்த நண்பர்களாக பழகும் இம்மக்கள் தாங்கள் எதை விரும்புகிறார்களோ அதை மட்டுமே சிலாகிக்கிறார்கள், அதை மற்றவர்களிடமும் வலியுறுத்துகிறார்கள்.. அதுவே அவர்களுக்கு உயர்வாகப் படுகிறது..

நாம் நமக்குச் சரியாய் படுவதைச் சொல்லிப் பார்க்கிறோம்,, பலமுறை அது தூக்கி குப்பைக் கூடையில் தான் எறியப் படுகிறது..

இரண்டு கண்ணோட்டங்கள் நாம் நம் பார்வையில் அவர் அவர்கள் பார்வையில்..

சிறிது நம்மை அவர்களாக மாற்றிக் கொண்டு பார்த்தால் அவர்கள் கண்ணோட்டம் புரியும்.

நமக்கு நம் துணையானவரின் பல்வேறு பணிகளில் சில மட்டுமே தெரிந்து இருக்கிறது அது நம் பலவீனம்..

அவர்களுக்கு சரியாக என்ன உதவி தேவை என்று அவருக்கும் சொல்லத் தெரிவதில்லை. நமக்கும் எதைச் செய்தால் நிலைமை சரியாகும் என்று தெரிவதில்லை..

பொறுமையாய் தினசரி அவர்களைக் கவனித்தால், எந்த நேரங்களில் இடங்களில் அவர் தன் நிதானத்தை இழக்கிறார் என்று தெரியும்.. எதற்காக அவர் தன் அந்தத் தோழர்களைச் சார்ந்திருக்கிறார் என்று தெரியும். அந்தத் தேவையைத் தீர்த்தாலே அவர் மனம் மாறத்தொடங்கி விடும்

நாம் எதை விட்டுக் கொடுப்பது என்று புரியாமல் அவருக்குத் தேவையில்லாததை எல்லாம் செய்கிறோம்.. ஆனால் அவரின் சார்புத்தன்மை மாறுவதில்லை. எந்த ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமோ அந்த ஒன்றை அறிந்து கொள்ளாமலேயே பலப்பல தியாகங்கள் செய்வதன் மூலம் அவரின் அன்பைச் சம்பாதிக்க முயல்கிறோம்.

விழலுக்கு இறைத்த நீர்.. பல விட்டுக் கொடுத்தல்கள் இப்படி அர்த்தமில்லாமல் போக விட்டுக் கொடுத்தவர் நொந்து கொண்டிருக்கிறார்

விட்டுக் கொடுத்தல்களுக்கு அர்த்தமில்லாமல் போவது அர்த்தமில்லாமல் விட்டுக் கொடுப்பதில்தான். நாம் விட்டுக் கொடுக்கும் விஷயத்தை நாம் பெரிதாக நினைக்கிறோமே அன்றி அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவரின் தேவையறிந்து நாம் விட்டுக் கொடுக்கவில்லை..

ஒருவர் சராசரி நல்லவரா இல்லையா என்பதை அவர் மற்றவர் உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பைக் கொண்டே கண்டறியலாம். எப்பொழுதும் தன் உணர்வை மட்டுமே நினைப்பவர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. மற்றவர் கருத்தை தூக்கி எறிந்துவிடும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அந்தச் சிலபேருக்கு என்ன விட்டுக் கொடுத்தாலும் புரியாது. அவர்களுக்கு உணர்வூட்ட ஞானிகள் தேவைப்படுகிறார்கள்..

நல்ல விஷயம் என்னவென்றால் இந்த விதமான அசாதரணமான மனிதர்கள் குறைவுதான். சராசரி மனிதர்கள் அதிகம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

புரிந்து கொள்ள முடியாத மனைவி விட்டுக் கொடுத்தல்களால் மாறுவதில்லை. அவரைப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஒரு பெண்ணின் அடிமனதில் உள்ள ஒரு சின்ன ஏக்கம் பல விதமான ரூபங்களில் வெளிப்படுகிறது..

நாம் அந்த தற்காலிக அறிகுறிகளைக் கண்டு அதை மட்டும் எண்ணி அதற்காக விட்டுக் கொடுக்கிறோம்.. ஆனால் அவரின் அந்த அடிப்படைத் தேவை தீர்க்கப் பயன்படுவதில்லை. வேவ்வேறு அவதாரம் எடுக்க நாமும் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து சோர்ந்து விடுகிறோம்..

ஏனென்றால் நம் எண்ணம் முழுதும் நம் துணையைச் சந்தோஷப் படுத்துவதிலேயே இருந்து விட்டது. புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம்.

நம்மால் நம் மனைவியின் தேவையை உணர முடியாத பொழுது, நம் தேவையை நம் மனைவி உண்ர்ந்து கொள்ளாத பொழுது, பொதுவாய் வாழ்வில் இருவருக்கும் ஒரு பொது குறிக்கோள் இல்லாத பொழுது இப்படி நடக்க வாய்ப்புகள் உள்ளன.

உன் மனைவி என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாள். நீ என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாய்.. இணைந்து நீங்கள் குடும்பமாய் என்ன சாதிக்க ஆசைப்படுகிறீர்கள்..

இந்த மூன்று கேள்விகளுக்கும் உன்னிடம் சரியான பதில் இருக்கிறதா? இருந்தால் இப்பிரச்சனை வர வாய்ப்புகள் குறைவு.

இல்லாவிட்டால் இனியாவது கண்டுபிடி. காலம் கடந்து விடவில்லை..

இனிய வாழ்வினை இன்றிலிருந்தே துவங்கலாம்.

=====================================================================================


'சீரியஸ்னெஸ்' என்பதை சீரியஸாகவே எடுக்காத மக்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்??

சீரியஸ்=அக்கறை

நாராயண நாராயண

மகாதேவா, தியானம் போதும்.. புதுயுகம் ஆரம்பிக்கிறது.. விழியுங்கள்

வாரும் நாரதரே, சிண்டு முடியும் உமது சிண்டை, தினமும் முடிவது நீரா? வேறு யாராவதா?

சிண்டு முடிதலை நான் யாருக்கும் விட்டுத்தருவதில்லை சர்வேஸா! முடிந்த வரை முடிகிறேன்,,

முடிவு என்னும் பொழுதே சங்கார சங்கரன் எண்ணம் தானே வருகிறது,, நான் வெறுமனே முடிபவன். தாங்களோ கங்கை என்னும் மங்கையைச் சேர்த்து முடிபவர். முடிபவர் மட்டுமல்ல.. முடிப்பவரும் கூடத்தான்..

சரி வெட்டிப் பேச்சு போதும், என் குழந்தை ஓவியா வின் வினாவினைப் பார்த்தாயல்லவா

பார்த்தேன் பரமனே. தங்கையின் கவலையில் அர்த்தம் இருக்கிறது.. விளையாட்டுத்தனம் என்கிறோம்.. ஆனல் விளையாடும் போது எப்படி இருக்கிறோம்? வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடுகிறோம்.. தோற்றுப் போனால் சோர்ந்து போகிறோம்.. பின்பு தேற்றிக் கொண்டு இன்னும் ஆவேசமாக விளையாட ஆரம்பிக்கிறோம்.. இன்னும் சாதிக்க வேண்டும் இன்னும் சாதிக்கவேண்டும் என நினைக்கிறோம்..

ஆனால் விளையாட்டுத்தனம் என்ற வார்த்தையை அக்கறையின்மை என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறோம்..

சரி சரி சுற்றி வளைக்காதே விஷயத்திற்கு வா..

வந்து கொண்டே இருக்கிறேன் இறைவா! குறிக்கோள் உண்டு என்னும் போது விளையாட்டே கூட சாதனையாகி விடுகிறது.. வாழ்க்கைச் சாதனை ஆவதா அதிசயம்?

உண்பது நாழி உடுப்பது நாலு முழம், கண்ணயர்ந்து உறங்கிக் காணுவது கனவில் சாதனை.

வாழும் வரை சந்தோஷம், எதைப்பற்றியும் கவலை வேண்டாம், வாழ்க்கை தானே போகும்.. இன்றைய பொழுது கழிந்தது நாளை விழித்தால் பார்ப்போம்..

சோம்பல் சுகம்தான் கண்விழித்து தன் முன்னே உலகம் நழுவிப் போவதை உணரும் வரை!

ஓவியின் எழுத்துக்களைப் பார்த்தால் சோம்பல் இங்கே பிரச்சனை இல்லை நாரதா!

அதை பொதுவாக வைத்துக் கொள்ளுங்கள் ஹரனே, தங்கை என்ன கேட்டிருக்கிறார் என உணர முடிகிறது நீங்கள் அருளிய திரிகால ஞானத்தினால்..

விஜயனுக்கு உரைத்த கீதைதான் இதனின் சாராம்சமாய் இருக்கிறதே!

உன் மனைவி என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாள். நீ என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாய்.. இணைந்து நீங்கள் குடும்பமாய் என்ன சாதிக்க ஆசைப்படுகிறீர்கள்..

இந்த அடிப்படை இல்லாமல் போனால் என்ன செய்வது?

மனைவியின் வாழ்க்கைப் பற்றிய கனவோ வேறு.. கணவனோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவனை உயரத்தில் ஒரு சாதனையாளனாகப் பார்க்க ஆசைப் படக் கூடும். அன்பான குடும்பத் தலைவனாக பார்க்க ஆசை இருக்கக் கூடும். கணவனுக்கோ வேறு ஏதோ ஒன்று முக்கியமாய் பட மனைவிக்கோ அது அற்பமாய் தோன்றுகிறது! ஏன் அக்கறை செலுத்த மாட்டேனென்கிறாய் என அன்பாய் கேட்கிறாள்.. கொஞ்சுகிறாள் கெஞ்சுகிறாள்..

சரியாய்த்தான் நாடி பிடித்திருகிறாய் நாரதா! நான் உனக்கு தம்பூராவும் சப்லாக் கட்டையும் தான் பிடிக்கத் தெரியும் என்று நினைத்தேன்.

ஆக அன்பு அங்கே இழையோடிக் கொண்டிருக்கிறது.. ஆனால் முரண்பட்ட பயண இலக்குகள்..

பயண இலக்குகள் முரண்பட்டால் பாதை எப்படி இணையமுடியும் நாரதா?

இருவரும் இரு பயணமும் சேர்ந்தே சிலகாலம் பயணித்தே ஆகவேண்டும் இறைவா. மனம் விட்டுப் பேசுதல் வேண்டும்..

தெளிவில்லா இலக்கை சபிப்பதை விட தெளிவு பெற்று ஆகாததை விலக்கலாம். இருவர் இணையும் பொழுது, அடுத்தவருக்கு பிடிக்காததை விட்டுக் கொடுக்க வாய்ப்புக் கிடைப்பதே அதிகம். யார் அதிகம் விட்டுக் கொடுக்கிறாரோ அவர்தான் அதிகம் பெறுகிறார்..

அன்பில்லா நெஞ்சம் அக்கறை இல்லையே என வருந்துவதில்லை. அது போல் விட்டுக் கொடுத்தல்கள் பலனில்லாமல் போவதில்லை..

சரி ஓவியின் கவலைக்கு மருந்து?

கவலைக்கு மருந்து காற்றினிலே கலந்து இங்கேயே மறைந்திருக்கிறதே இறைவா! முன்னும் அறிந்தவன் பின்னும் அறிந்தவன் இன்னும் இதில் உள்ள பதில் புரியாதவரா நீர்..

ஹா ஹா ஹா

இந்தச் சிரிப்பு போதுமே! இதில் தானே உலகமே மயங்கிக் கிடக்கிறது..

நலமே உண்டாகட்டும் நாரதா,


=====================================================================================

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட சரியான அணுகுமுறை உண்டு.. இதுதான் சரி என ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அதனுள் இருந்து விட முயற்சிக்கிறோம்..

நம்மில் இருக்கும் அவநம்பிக்கை பயம் போன்ற சில பண்புகளே, நம்மை பலமுறை முடக்கிப் போட்டுவிடுகின்றன,

மனதினால் வாழ்வதினாலேயே நம்மூத்தோர் மனிதன் என்றார்கள். எண்ணங்களின் சக்தி மிக அதிகம்.

நான் விரும்பியபடியெல்லாம் வாழ வேண்டுமென நான் விரும்பியதில்லை. அதனாலேயே நான் விரும்பியபடியெல்லாம் என்னால் வாழ முடிகிறது..

மனதிற்குள் தினம் புதுமலர் பூத்து மணக்குமாயின் சந்தோசம்.
சின்னச் சின்னச் சந்தோஷங்கள் உன்னை உற்சாகப் படுத்த பெரிய சந்தோஷம் நோக்கிய பயணத்தைத் தொடர்..

சிரிக்க கற்றுக்கொள்.. வருவதையும் போவதையும் பார்த்து..

பிரச்சனைகளை பிரச்சனைகள் எனப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. எதற்காக ஒரு காரியம் செய்கிறோம்? எடுத்துக் காட்டாக தங்கைக்கு மணமுடிக்க வேண்டும்... என்று வைத்துக் கொள்வோம்..

கையில் பணமில்லையே, நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லையே எனக் கவலை கொள்கிறோம். காசு சேர்க்க பகலிரவு பார்க்காமல் உழைக்கிறோம்..
நல்ல பழக்க வழக்கங்கள், இனிய பேச்சு, நல்ல வருமானம், இப்படி அலைந்து திரிந்து மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம்.

பிரச்சனை தீர்ந்ததா? இல்லை அடுத்து மாமன் சீர்.. அப்படி இப்படியென்று..

இதை ஏன் கவலை மற்றும் கஷ்டங்களுடன் அணுக வேண்டும். சிரித்த முகத்துடன் அணுகலாமே! ஏன் முடிவதில்லை?

பயம்.. பயம்.. பயம்..

தவறிவிட்டால் தங்கைக்கு வாழ்வு பாழாகி விடும் என்ற பயம்.. அப்படியா? இல்லையே இப்படி ஒரு அண்ணன் இருக்கும் பொழுது அவளென்ன அனாதை ஆகவா இருந்துவிடப் போகிறாள். பின் ஏன் பயம்?

திருமணம், கணவுடன் வாழ்க்கை தாய்மைப் பேறு போன்றவற்றை இன்பங்களாக நம் மந்தில் பதிய வைத்திருக்கிறோம். திருமணத்திற்கு முன்பு பெற்றோராக முடியுமா என யாராவது கவலைப் பட்டிருப்போமா? இல்லையே.. திருமணமாகி ஆண்டுக்கணக்கில் குழந்தை இல்லாத பொழுதுதானே கவலைப் படுகிறோம்.. சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம்..

ஆக அந்தந்த காலத்து பிரச்சனைகள் நம்முடைய பொழுதை ஆக்ரமிக்க நாம் தான் அனுமதிக்கிறோம்..

வாழ்விற்கு இரண்டு வகையான குறிக்கோள்கள் தேவை..

1. இலட்சியம் - நீண்ட காலக் குறிக்கோள்
2. குறுகிய காலக் குறிக்கோள்

இந்த நீண்ட காலக் குறிக்கோளும், குறுகிய காலக் குறிக்கோளும் பல சமயங்களில் ஒரே திசையில் அமைவதில்லை..

குறுகிய காலக் குறிக்கோள்களில் நம் சக்தியை விரயம் செய்து களைத்து விடுகிறோம்..

எந்த ஒரு குறிக்கோளையும் 2 வகையாக பிரி..

1. மிக மிக அத்தியாவசியம்..
2. இருந்தால் நன்றாக இருக்கும்

நீண்ட கால இலட்சியத்திற்காக சிலத் தியாகங்கள் செய்யத்தான் வேண்டியதிருக்கும் அதுதான் சரி. அதை விட்டு விட்டு எல்லாச் சின்னச் சின்ன குறிக்கோள்களையும் அடைய வேண்டும் என நினைத்தல் கூடாது.

இம்ரான் கான் சொன்ன மாதிரி அவசியமான சில இடங்களில் தோற்பதால்..

உலகக் கோப்பை என் கைக்கு வருமென்றால், சில போட்டிகளைத் தோற்பதில் தவறில்லை..

எல்லாவற்றிலும் வெல்லும் திறமை யாருக்கும் கிடையாது. ஆனால் தோற்கக் கூடாத போட்டிகளில் தோற்றுவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் வெற்றியின் ரகசியம்.


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


தப்பித்தவறி சிவன் கண்ணில் பட்டீரோ தொலைந்தீர்...அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஆஸ்தான ஆலோசகனாக வைத்துக் கொள்ளப்போகிறான், அப்புறம் நாங்கள் உங்களைப் பார்க்க பரலோகம் தான் வர வேண்டும்....

அருமையான கட்டுரை...மதிக்கண்ணா...நீ நல்லா வாசிப்பா...அக்கா வந்து டிக்டேசன் கொடுப்பேன். பேப்பரை திருத்தப் போறது நானில்ல... எத்தன வருசம் ஆனாலும் உங்க மேடத்துக்கு தான் அந்தக் கொடுமை....

மொத்தத்தில் என்னைப் பரலோகம் அனுப்ப தயாரா இருக்கீங்க..

ஏதோ என் மனசுக்குத் தோணினதை எழுதினேன்.. ஒரு ஆணின் பார்வையில் ஆணுக்கு அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.. ஆனால் பெண்களின் உணர்வுகள் மிக் நுட்பமானது. கல்யாணமான பத்து பெண்களாவது இதில் உண்மை இருக்குன்னு சொன்னா அது இந்தக் கட்டுரையில் சற்று உண்மை இருக்குதுன்னு சொல்லும்.

பாருங்களேன்.. கல்யாணம் ஆனா வாழ்க்கை மாறும் என்று தெரியும். ஆனால் கல்யாணம் ஆன பின்னால் மாறத் தயங்குகிறோம்.

என்னை நானாகவே ஏற்றுக் கொள்ளும் துணை வேண்டும் என்பதே பல பேரோட விருப்பமா இருக்குது.. அவரை அவராகவே ஏற்றுக்கொள்வேன் என்று நினைப்பவர்கள் காதலர்கள் மட்டுமே

ஆனால் கல்யாணத்திற்கு முன்னால் அந்த எண்ணம் இருந்தாலும், காலச் சுழற்சியில் எல்லோரும் மாற நேரிடுகிறது.. அந்த மாற்றங்களை ஒப்புக் கொள்ளும் திறந்த மனம் தான் இதற்கு சரியான தீர்வு.

மாற்றங்களில் மாறாமல் இருப்பது, மாறுவதினால் மட்டுமே சாத்தியம்..

நம்பிக்கை, அன்பு, இரண்டும் அச்சாணிகள்.. இவை இரண்டும் தான் சக்கரங்கள் கழலாமல் சுழல காரணம்.

மாற்றங்களுக்கு காரணம் திருமணம் என்று பலர் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். 40 வயது பேச்சுலருக்கு தெரியும் பேச்சுலர் வாழ்க்கையின் கஷ்டங்கள். காலம் போகப் போக மாறாமல் இருக்க நினைத்தால் தனித்து விடப்பட்டு விடுகிறோம். தினம் தினம் மாற்றங்களைச் சந்திக்கிறோம்.

இன்று சந்தோஷமாய்த் தெரிவது 2 ஆண்டுகளுக்குப் பின் வேடிக்கையாய் தெரியலாம்.. 5 ஆண்டுகளுக்குப் பின் மடத்தனமாய் தெரியலாம். 10 ஆண்டுகளுக்குப் பின் மிகச் சரியான ஒன்றாகத் தெரியலாம்.

உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே.!!!


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

No comments:

Post a Comment